Monday, February 26, 2007

246.கண்ணகியின் காதல்

"தாயே..யாரம்மா நீ?ஏன் இப்படி அலங்கோலத்துடன் இருக்கிறாய்?பராசக்தியின் வடிவாக காணப்படும் உனக்கு இந்த கொடுமையை செய்ய துணிந்தவன் யார்?" என்று மணிமேகலை பரிவோடு கேட்டாள்.

கண்மூடி தவமிருந்த தேவி கண்ணகி கண்திறந்தாள். எதிரே தன் கணவனே பெண்வடிவெடுத்து நின்றுகொண்டிருப்பது போல் தெரிந்தது. கண்ணை கசக்கினாள். கிள்ளிப் பார்த்தாள். வலித்தது. ஆம் இது கனவில்லை.ஆனால் தனக்கு சித்தபிரம்மை பிடித்துவிட்டதோ,காணும் யாவும் கோவலனாய் தோற்றம் அளிக்கிறதே..பெண்வடிவில் கோவலனா?ஆனால் அந்த குரல்,கண்கள்..ஏன் அது மட்டும் மாதவியை போல் தெரிகிறது??

"அம்மா.." மணிமேகலை மீண்டும் கண்ணகியின் தோளை உலுக்கினாள்.

"யாரம்மா நீ? உன் பெயர் என்ன?என் கணவன் போலவே நீ இருக்கிறாயே?" என ஆதங்கத்துடன் கேட்டாள் கண்ணகி.

"என் பெயர் மணிமேகலை. நான் ஒரு பிக்குணி. மதுரை மாநகரில் தீ பற்றி எரிந்து பலர் இறந்து விட்டனராம். மன்னர் கூட இறந்ததால் மக்களுக்கு மருந்திடவும், பிணங்களை எரிக்கவும் கூட ஆள் இல்லையாம் தாயே. அதனால் தான் பிக்குகள் அனைவரும் மதுரைமாநகர் செல்கிறோம்" என்றாள் மணிமேகலை.

"எனக்கு ஒரு பெண்மகவு பிறந்தால் மணிமேகலை என்று பெயர் வைக்கப்போவதாக என் கணவர் அடிக்கடி சொல்வார்" என்றாள் கண்ணகி.

"அது இருக்கட்டும் தாயே, உங்கள் முலையை எவன் அறுத்தது?தமிழ்பெண்ணுக்கு இப்படி கொடுமை நடக்க பாண்டியன் பார்த்தானோ?பார்க்க பொறாது இறந்தானோ?" என கண்கலங்கினாள் மணிமேகலை.

"என் முலையை நானே அறுத்தேன்.பாண்டியனையும், மதுரையையும் எரித்தேன். அவன் மேல் குற்றமில்லை" என்றாள் கண்ணகி.

"மதுரையை நீயா எரித்தாய்? நீதி வழுவா மன்னனை நீயா கொன்றாய்?தாயே உனக்கு புத்தி பேதலித்து விட்டதா? ஏன் இப்படி செய்தாய்?" என ஆவேசத்துடன் கேட்டாள் மணிமேகலை.

"கீழே பார்" என சுட்டிக் காட்டினாள் கண்ணகி.

மலை மேலிருந்து கீழே இருக்கும் காட்டை உற்றுப்பார்த்தாள் மணிமேகலை.

வனவேடன் ஒருவன் வில்லை வளைத்து ஆண்யானை ஒன்றை கொன்றான். தந்தத்தை உடைத்து எடுத்துக்கொண்டு வெற்றியுடன் திரும்பினான். நீர் குடிக்க போன பிடி வந்து தன் காதலன் உடலை கண்டு அழுது புலம்பியது. துதிக்கை தூக்கி பிளறியது.வெறி ஏறி அருகிலிருந்த மரங்களை முட்டி சாய்த்தது. துதிக்கையில் சிக்கிய பறவைகளையும், மான்களையும், மற்ற மிருகங்களையும் காலில் போட்டு மிதித்தது.காட்டையே அதலபாதாலம் செய்துவிட்டு மயங்கிச் சாய்ந்தது.

"வெறி பிடித்த பிடி" என்று உடல் சிலிர்த்தாள் மணிமேகலை.

"என் கணவன் என்னை பிடிநடையாள் என்று தான் அழைப்பான்" என்றாள் கண்ணகி. அந்த துயரிலும் அவள் முகத்தில் லேசான பெருமிதம் தெரிந்தது. "தாயே..அந்த மிருகத்தின் மனநிலையையா நீ அடைந்தாய்? யானைக்கு மதம் பிடிக்கலாம். மனிதனுக்கு பிடிக்கலாமா?" என்று ஆதூரத்துடன் கேட்டாள் மணிமேகலை.

"யானையோ,எறும்போ,மனிதனோ..உணர்ச்சிகள் ஒன்றுதானே மகளே" என்றாள் கண்ணகி.

"நீ செய்ததற்கு நியாயம் கற்பிக்கிறாயா தாயே" என்றாள் மணிமேகலை.

வெறி தெளிந்த பிடி அழுதபடி எழுந்தது.தான் மிதித்துக்கொன்ற மிருகங்களை பார்த்து அழுது புலம்பியது. கண்ணீர் வடித்தபடி பிளிறியது. காதலன் அருகே கிடந்து உயிர்விட்டது.

"என் கணவன் அழைக்கிறான்" என்றாள் கண்ணகி.

"சாகும் வயதா உனக்கு?" என்றாள் மணிமேகலை.

"என் கணவனை பிரிந்து வாழும் ஒவ்வொரு நொடியும் நரகம் போலல்லவா இருக்கிறது" என்றாள் கண்ணகி.

"கொடுத்துவைத்த பெண் நீ" என்றாள் மணிமேகலை. "இப்படிப்பட்ட பெண்ணின் அன்பை பெற்ற கணவன் பெரும் பாக்கியவான்....ஆனால் என் அன்னைக்கும் ஒரு தறுதலை கணவன் வாய்த்தான்.கடைசிவரை கூட இருப்பேன் என்று சொல்லிவிட்டு கைவிட்டுவிட்டான். அந்த வினாடியே ஆணினத்தையே வெறுத்தேன்.என் காதலனான உதயகுமாரனையும் ஆண் என்பதால் துறந்தேன்.துறவறம் பூண்டேன்." என்றாள் மணிமேகலை.

"உண்மையான காதல் யாரையும் உதறாது.பிரியாது" என்றாள் கண்ணகி.

'உன் காதல் உண்மை என்பதை ஊரை எரித்து நிருபித்தாய் தாயே.ஆனால் உன் கணவன் உன்மேல் கொண்ட காதல் உண்மையா என்பதை நீ எப்படி உணர்ந்தாய்?" என கேட்டாள் மணிமேகலை.

"என் கணவனுக்கு என்னைப்பிரிய சுதந்திரம் கொடுத்தேன்.பிரிந்து சென்றான்.பிறகு மீண்டும் திரும்பி வந்தான். அதனால் அவன் என்னுடையவனானான்" என்றாள் கண்னகி.

"திரும்பி வந்திருக்காவிட்டால்.." என்று கேட்டாள் மணிமேகலை.

'அவன் என்றுமே என்னுடையவனாக இருந்ததில்லை என்று பொருள்" என்றாள் கண்ணகி.

கண்மூடி உதயகுமாரனை நினைத்தாள் மணிமேகலை. ஒரே வினாடி. அதன்பின் மனதில் அருகக்கடவுள் தோன்றியதும் திடுக்கிட்டு கண்விழித்தாள்....

"உன் காதலனை நினைத்துக்கொண்டாயா குழந்தாய்" என்றாள் கண்ணகி. அவள் முகத்தில் புன்னகை அரும்பியது. "அவனும் உனக்கு சுதந்திரம் தான் கொடுத்திருக்கிறான். நீ திரும்பி போய் அவனுடன் சேர்ந்தால் நீ அவனுடையவள். போகாவிட்டால் நீ என்றுமே அவனுடையவளாக இருந்ததில்லை என்று அர்த்தம்"

"என் மனதில் இருக்கும் அருகக்கடவுளை தூக்கி எறிந்து அவனை குடியேற்ற இன்னும் ஒரு ஜென்மம் ஆகுமே?உதயகுமாரன் அத்தனை நாள் திருமணம் செய்யாது எனக்காக காத்திருப்பானா?" என கேட்டாள் மணிமேகலை.

"உண்மை காதல் காத்திருக்கும்.பொய்க்காதல் காத்திருக்காது" என்றாள் கண்ணகி.

"நான் அவனிடம் திரும்ப மாட்டேன். என் காதல் பொய்க்காதல். ஆனால் உதயன் எனக்காக காலமெல்லாம் காத்திருப்பான். அவனுடையது உண்மை காதல்.." என கண்ணீர் சிந்தினாள் மணிமேகலை.ஒரு முடிவோடு எழுந்தாள்.

"தாயே..உண்மையான காதலை நீ உன் கணவன் மேல் வைத்தாய். அவனும் அதையே உன் மேல் வைத்தான்.அன்பை கொடுத்து அன்பை பதிலுக்கு நீ பெற்றாய்....உன் காதலை அடைந்த உன் கணவன் கொடுத்து வைத்தவன். அவன் காதலை அடைந்த நீயும் கொடுத்து வைத்தவள். பொய்யான காதலை காதலர்க்கு கொடுத்த நானும், என் தாயும் அதற்கான பரிசை அனுபவிக்கிறோம்.தமிழ்நாட்டு மங்கையர் தம் கணவர் மீது வைக்கும் மாசிலா அன்புக்கு நீயே உதாரணம். .....அம்மா...நீ நீடூழி வாழி. தமிழ் உள்ளவரை,தமிழர் உள்ளவரை,சூரியன் சந்திரன் உள்ளவரை உன் பெயர் தமிழர் மத்தியில் நிலைத்து நிற்கும்." என்றாள் மணிமேகலை.

தூர நின்று இதைக்கேட்ட இன்னொரு பிக்குவான இளங்கோ உடல் சிலிர்த்தார். அருக்கக் கடவுளின் புகழை அன்றி எதையும் எழுதி அறியா அவரது எழுத்தாணியை எடுத்தார்.கண்ணகியின் காதல் கதையை எழுத துவங்கினார்.....

தம்முடைய தண்ணளியும், தாமும், தம் மான் தேரும்,

எம்மை நினையாது, விட்டாரோ? விட்டு அகல்க;
அம் மென் இணர அடும்புகாள்! அன்னங்காள்!
நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்.

கைதை வேலிக் கழிவாய் வந்து, எம்

பொய்தல் அழித்துப் போனார், ஒருவர்
பொய்தல் அழித்துப் போனார், அவர்நம்
மையல் மனம் விட்டு அகல்வார் அல்லர்.

10 comments:

Anonymous said...

எனக்கு இப்படிதான் சிலப்பதிகாரம் ஆரம்பிக்குதுன்னு தெரியாது. என்னவொரு விநோதமான ஆரம்பம் - மணிமேகலையும் கண்ணகியும் சந்திக்கிறாங்களா, இளங்கோ பார்க்கிறாரா அதை. வித்தியாசமான ஆரம்பம் இளங்கோ இளங்கோ தான்.
இதை இங்கு காட்டியமைக்கு என் நன்றிகள். இப்பதான் எனக்கு தெரியும் இது!

பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - Feb 16
கண்ணகியின் காதல் - Feb 26
செல்வன், பத்து நாள்ல என்ன ஆச்சு?! :)

Unknown said...

வாங்க மதுரா,

இது முழுக்க,முழுக்க கற்பனைக்கதை.உண்மையில் கண்ணகியும் மணிமேகலையும் சந்திக்கவே இல்லை.இது முழுக்க,முழூக்க என் கற்பனையே

//பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - Fஎப் 16
கண்ணகியின் காதல் - Fஎப் 26
செல்வன், பத்து நாள்ல என்ன ஆச்சு?! :) //

ஒண்ணும் ஆகலைங்க:)))கண்ணகியின் காதல் பெருமை பற்றித்தான் குறிப்பிட்டுள்ளேன். காதலையும் பெண்விடுதலையையும் பிரித்து பார்க்கவே முடியாது

Anonymous said...

ஆ ... செல்வன் உங்க கற்பனையா ...
கலக்கிட்டீங்க.

எனக்கு அவர்கள் சந்தித்து கொள்வது பிடித்திருக்கிறது. என்ன பேசுவாங்கன்றதுல வேற கருத்துக்கள் உண்டு! :)

நீங்க அநியாயத்துக்கு பொண்ணுங்களை நல்லவங்களா நினைக்கிறீங்க :)

Unknown said...

நன்றி மதுரா.

பெண்கள் கண்டிப்பாக நல்லவர்கள் தான் மதுரா.ஒடுக்கப்படும் இனம் என்பதால் எனக்கு அவர்கள் மீது பரிவு உண்டு.

கண்ணகி என் இதயம் கவர்ந்த காவிய நாயகி.அவளை பற்றி நான் எழுதிய பழைய கட்டுரை ஒன்றை படித்து பாருங்கள்

http://www.thinnai.com/?module=displaystory&story_id=206060911&edition_id=20060609&format=html

G.Ragavan said...

செல்வன், சிலப்பதிகாரத்தின் மீது ஈடுபாடும் பற்றும் உடையவன் என்ற வகையில் இந்தப் பதிவை ஆர்வத்துடன் படித்தேன். படித்தேன் என்று சொல்லா விட்டாலும் நல்ல முயற்சி.

இன்றைக்கும் பூம்புகார் சினிமாதான் பலருக்குச் சிலப்பதிகாரம். மிக வருந்தத்தக்க நிலையது. சிலப்பதிகாரம் முறையாகப் படித்தவர் கேட்டவர் அறிவர் உண்மைப் பொருளை.

கண்ணகியும் மணிமேகலையும் சந்திக்கவேயில்லை. அதற்கான சூழலும் இருக்கவில்லை. கோவலன் மாதவியை நீங்குங்கால் மணிமேகலை கைக்குழந்தை. பிறகு நடந்ததுதான் உலகிற்கே தெரியுமே. அப்படியிருக்க....அவர்கள் இருவரும் சந்தித்தால் என்ற கற்பனை...மிக அழகு. மிக ரசித்தேன்.

ஆக வேண்டியிருப்பது ஒரு திருத்தந்தான். மதுரைக்குச் சேவை செய்ய மணிமேகலை சென்றிருக்க முடியாது. அதுவும் பிக்குணியாக. அதுதான் பொருந்தி வரவில்லை. மணிமேகலை வளர்ந்த காலத்தில் கண்ணனிக்குக் கோயிலை இலங்கையிலேயே கயவாகு கட்டியாகி விட்டது.

பெருந்தெய்வம் போலத் தோற்றம் என்று சிலம்பு சொல்லும். நீங்கள் பராசக்தி என்றிருக்கின்றீர்கள்.

பாண்டியன் நெடுஞ்செழியன் செய்தது தவறில்லை என்று கண்ணகி ஒத்துக்கொண்டு அவன் தனக்குத் தந்தை என்றும் ஏற்றுக்கொள்கிறாள் கண்ணனி. ஏன்? கோவலனைத் தட்டிக் கேட்டவன் அவன் ஒருவந்தான். கோவலன் செய்ததையெல்லாம் கண்ணகி பொருத்துக் கொண்டாள் என்று கதை கட்டுகிறவர்கள் சிலம்பு ஒலிகூட கேட்டறியாச் செவிடர்.

கோவலன் தவறு செய்தான். திருந்தியிருக்கிறான். ஏற்றுக் கொண்டாள். அவ்வளவுதான். நீங்கள் சொல்லியிருக்கும் பாங்கு மிகச் சிறப்பு. நன்கு ரசித்தேன்.

தொடரப் போகிறதா? தொடரட்டும். காத்திருக்கிறேன்.

Unknown said...

விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி ராகவன்,

இது முழுக்க முழுக்க கற்பனை கதை.கண்ணகி வாழ்வில் அவள் மணிமேகலையை சந்தித்ததே இல்லை.மேலும் மணிமேகலை புத்த பிக்குணி.இளங்கோவுக்காக கதையில் அவளையும் சமண பிக்குணியாக்கினேன்.

கண்ணகி கோவலனை காதலித்ததாக் எழுதியதால் சிலம்பிலிருந்து முழூக்க முழுக்க விலகி எழுத வேண்டியதானது.

சிலம்பின் பெருமை பூம்புகாரோடு நின்ற வருத்தம் எனக்கு நிறைய உண்டு.இவள் போன்ற காப்பிய மாந்தர் தமிழரிடையே மேலும் புகழ்பெற வேண்டும்.அதற்கு இம்மாதிரி சில கதைகள் அணில் பாலம் கட்ட உதவியதுபோல் உதவலாம் என்று தோன்றுகிறது.

இந்த கதையை மேலும் தொஅடரப்போவதில்லை எனினும் கண்ணகி மற்றும் பழைய இலக்கியகதாபாத்திரங்களை பயன்படுத்தி மேலும் எழுதும் எண்ணம் இருக்கிறது.

நன்றி
செல்வன்

ஜடாயு said...

செல்வன், நல்ல கற்பனை, நல்ல கதை. இது போன்ற உங்கள் காவிய முயற்சிகள் தொடரட்டும்.

ஜெயமோகன் அம்பையை பீஷ்மர் திருமணம் செய்துகொள்வதாகக் கற்பனை செய்து ஒரு அருமையான கதை எழுதியிருந்தார். இத்தகைய விஷயங்கள் காவியங்கள் மீது புதிய பார்வைகளைத் தருகின்றன.

// பெருந்தெய்வம் போலத் தோற்றம் என்று சிலம்பு சொல்லும். நீங்கள் பராசக்தி என்றிருக்கின்றீர்கள்.//

ராகவன், செல்வன் சொன்னது சரியே..
சிலம்பு கையேந்தி பாண்டியன் அவை வரும் கண்ணகியின் தோற்றம் கூறும் இளங்கோ பாடுவார் -

அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணி
பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக் கொடி
வெற்றிவேல் தடக்கை கொற்றவை அல்லள்
அறுவர்க்கிளைய நங்கை இறைவனை
ஆடல் கொண்டருளிய அணங்கு
சூருடைக் கானகம் உகந்த காளி தாருகன்
பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்!
செற்றனள் போலும் செய்ர்த்தனள் போலும்
பொற்றொழிற்சிலம்பொன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத்தாளே!

மகிஷாசுர மர்த்தினி, துர்க்கை, காளி எல்லாம் பராசக்தியின் வடுவங்கள் தான்.

Jeyapalan said...

அண்மையில் ஒரு புத்தகத்தில் படித்தேன், மலை வாழ் மக்கள் கண்ணகி விமானமேறிச் செல்வதைப் பார்த்து விட்டு அதைப் பற்றி மன்னனிற்குச் சொல்கிறார்கள். அங்கே இருந்த இளங்கோவிற்கு சீத்தலைச் சாத்தனார் கண்ணகியின் கதையைக் கூறுகிறார், அதை இளங்கோ காவியமாக்கிறார்.
அப்படியானால், இளங்கோ கண்ணகி காலத்தில் வாழ்ந்திருக்கிறார் என்று அனுமானிக்கலாம்.

Unknown said...

ஜடாயு,

வாழ்த்துக்கு மிக்க நன்றி.இதுபோல் இன்னும் சிலமுயற்சிகள் செய்ய உள்ளேன்.

வீரப்பெண் கண்ணகியை வீரத்துக்கு அதிபதியான பராசக்தியின் வடிவில் கண்டே இளங்கோ காப்பியம் வடித்துள்ளார்.அது மிகவும் பொருத்தமாகவே அமைந்துள்ளது.

நண்பர் ஜெயபால்,

நீங்கள் சொல்வது உண்மை. கண்னகியும், செங்குட்டுவனும், இளங்கோவும் ஒரே காலத்தவர் என்று கருதவே இடமுண்டு. இமயபடையெடுப்புக்கு பின் கல்கொணர்ந்து கண்னகிக்கு செங்குட்டுவன் அதனாலேயே கோயில் கட்டினான் என்பார்கள்.

குமரன் (Kumaran) said...

சே. மணிமேகலை புத்த பிக்கு; சமணத் துறவி இல்லை என்று சொல்ல வந்தேனே. அது வேண்டுமென்றே செய்த மாற்றம் என்று சொல்லிவிட்டீர்கள். சரி. வந்ததற்கு வேறொன்றைச் சொல்கிறேன். பௌத்தத் துறவிகளைத் தான் பிக்கு என்றும் பிக்குணி என்றும் சொல்லுவார்கள்; சமணத் துறவியரைத் சமண முனிவர் என்று சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன் செல்வன்.