Tuesday, October 18, 2011

வீரபாண்டியன் மனைவி

அருள்மொழிவர்மன் அந்த அடர்ந்த காட்டில் தன் புரவியை மெல்ல செலுத்தி கொண்டிருந்தான். மரக்கிளைகள் அவன் உடலை குத்தகூடாது என்ற எண்ணத்தில் சோழநாட்டு தென்றல் காற்று மரக்கிளைகள் மேல் வேகமாக  வீசி அடித்துகொண்டிருந்தது. அதை எல்லாம் மீறிய ஆசையில் மரக்கிளைகள் அவ்வபோது அவன் உடலை தொட்டு தழுவ முயன்றன.

சிறிது தொலைவு சென்றதும் மேலும் மேலே செல்லவே இயலாது எனும் அளவு அடர்ந்த காட்டுபகுதி வந்தது.அருள்மொழிவர்மனின் குதிரை தயங்கி நின்றது.அந்த தயக்கத்தை போக்கும் வகையில் "காப்பாத்துங்க..காப்பாத்துங்க" எனும் குரல் காட்டின் உள்ளே இருந்து ஒலித்தது.

அருள்மொழிவர்மன் குதிரையிலிருந்து இறங்கினான்.குரல் வந்த திசையை நோக்கி ஓடினான்.குரல் நிற்காமல் ஒலித்தது.கொஞ்ச நேரத்தில் குரல் அடங்கியது.

"இந்த காட்டில் எவண்டி வந்து உன்னை காப்பாத்த போறான்?மரியாதையா நகையை கழட்டு.."

கள்வர்கள்...அருள்மொழிவர்மனின் உடல் சிலிர்த்தது...

இடையில் இருந்த கத்தியை உருவினான்..அவர்கள் அவனை பார்க்கவில்லை.அவளது நகைகளை பறிப்பதில் குறியாக இருந்தனர்.கீழே ஒருவன் குத்தப்பட்டு விழுந்து கிடந்தான்.

அருள்மொழிவர்மன் கீழே கிடந்த ஒரு பெரிய கல்லை எடுத்தான்.நன்கு குறிபார்த்து கள்வன் ஒருவன் மேல் எறிந்தான்.கல் அவன் தலையை சரியாக குறிபார்த்து தாக்கியது.அவன் அலறியபடி கீழே விழுந்தான்.

மீதமிருந்த மூன்று கள்வர்களும் அதிர்ச்சியுடன் திரும்பினார்கள்..."எவன்டா அது" என கூவி முடிப்பதற்குள் இன்னொரு கல் ஒருவனின் நெஞ்சை பதம் பார்த்தது.,அவனும் அலறி கீழே விழுந்தான்.

கள்வர்கள் இருவரும் காட்டுக்குள் ஓடி மறைந்தார்கள்.

அருமொழிவர்மன் கீழே இறந்து கிடந்த வாலிபனின் உடல் அருகே சென்றான்.அவன் நாடிதுடிப்பை பரிசோதித்தான்.உயிர் பிரிந்து விட்டிருந்தது.அவன் முகத்தை திருப்பினான்.

"ஆ..அண்ணா..ஆதித்த கரிகாலா..இறந்துவிட்டாயா?"

அதிர்ச்சியில் அருல்மொழி அழுதான்..ஆவேசமாக அந்த பெண்ணை நோக்கி திரும்பினான்.

"யார் நீ?என் அண்ணன் எப்படி இங்கே இறந்துகிடக்கிறார்?மரியாதையாக உண்மையை சொல்கிறாயா இல்லை ..."

"இவர் உங்கள் அண்ணனா?" என்றால் அந்த பெண் அதிர்ச்சியுடன்."அப்படியனால் ஒரு உண்மையை சொல்லியகாவேண்டும்.அதற்கு நான் வருந்தவில்லை.இவரை நான் தான் கொன்றேன்.."

"என்ன?" அருள்மொழி கத்தியை உருவினான்

"நான் நந்தினி.வீரபாண்டியன் மனைவி.என் மேல் இருந்த வெறியில் வீரபாண்டியனை கொன்றார் உங்கள் அண்ணன்.பழிவாங்க அவர் மேல் ஆசை உள்ளது போல் நடித்து இந்த காட்டுக்கு வரவழைத்தேன்.கணவரின் மரணத்துக்கு பழிதீர்த்தேன்.அதன்பின் கள்வர்கள் வந்து என்னை பிடிக்க முயன்றனர்.நீங்கள் வந்து என்னை காப்பாற்றினீர்கள்"

அருள்மொழி கத்தியை கீழே போட்டான்.அவன் உடல் நடுங்கியது

"கொலை..கொலைக்கு கொலை,.பழி,பழிக்கு பழி..இந்த உணர்வு அழியவேண்டும்.அன்பு மலரவேண்டும்.." நாகையில் அவன் சந்தித்த புத்த பிட்சுகள் சொன்ன வாசகம் அவன் மனதில் எதிரொலித்தது.

"உன்னை மன்னித்துவிட்டேன்" என்றான் அருள்மொழி. "நீ போகலாம்.."

நந்தினி நம்ப இயலாமல் திகைத்து நின்றாள்.

அருள்மொழியின் மனதில் அவள் மேல் மேலும் இரக்க உணர்வு தோன்றியது.கணவனை இழந்த பெண்.இனி அவள் வாழ்க்கையை நடத்துவது எஞ்ஞனம்?

தன் கழுத்தில் இருந்த நகையையும்,கையில் இருந்த நகைகளையும் கழட்டினான்.அவளிடம் அளித்தான்.

"பெற்றுகொள்.நடந்ததை மறந்துவிட்டு புதிய வாழ்க்கையை துவக்கு"

"பணம் ஒரு விதவைக்கு சமூகத்தில் எந்த பலனையும் அளிக்காது" என்றாள் நந்தினி."அந்த சங்கிலியை நீங்களே என் கழுத்தில் அணிவியுங்கள்.."

------

இருவரும் குதிரையில் வீடு திரும்பினார்கள்.

கார்டனில் உட்கார்ந்து தினமலர் படித்து கொண்டிருந்த அருள்மொழியின் அப்பா நடராஜன் திகைத்தார்

"என்னடா..ஹார்ஸ் டிரெய்னிங் போறேன்னு சொல்லிட்டு இப்ப யாரையோ குதிரைல கூட்டிட்டு வர்ரே?" என்றார்

"இது உங்க வருங்கால மருமகள் நந்தினி"

"என்னது?"

"அதை அப்புறம் பேசிக்கலாம்.சித்தப்பா மகன் ஆதித்த கரிகாலன் செத்துபோயிட்டான்.காட்டில் திருடர்கள் குத்திகொன்றுவிட்டார்கள்.முதல்ல போலிசுக்கு போன் செய்யுங்க"

"என்னடா சொல்றே?என் தம்பி பொன்னியின் செல்வன் படிச்சுட்டு மகனுக்கு ஆதித்தகரிகாலன்னு பேர் வைச்சப்பவே நான் சொன்னேன்.வேண்டாம்னு...கேட்டானா?" புலம்பியபடி அப்பா போனை நோக்கி ஓடினார்

வலதுகாலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள் நந்தினி.


No comments: