Tuesday, June 06, 2006

100.அமெரிக்கர்கள் காதலிக்கின்றனர்

ரொபெர்ட்டோ கொய்சுட்டா(Roberto Goizuetta) எனும் பெயரை கடவுளின் பெயர் போல் மேனேஜ்மென்ட் பள்ளிகளில் உச்சரிப்பார்கள்.நவீன அமெரிக்க பொருளாதாரத்தின் தந்தை ஹென்ரி போர்ட் என்றால்,மேலாண்மையியலின் தந்தை ஜாக்வெல்ச் என்றால் சந்தையியலின் தந்தை ரொபெர்ட்டோ கொய்சுட்டா தான். கியூபாவின் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த கொய்சுட்டா அங்கு நடந்த கம்யூனிச புரட்சிக்கு(!!) பின் அமெரிக்காவுக்கு தப்பி வந்தார்.ஒரே விநாடியில் தன் சொத்து முழுவதையும் இழந்த கொய்சுட்டாவிடம் இருந்தது 100 கொக்கோ கோலா கம்பனி பங்குகளும் விண்முட்டும் தன்னம்பிக்கையும் தான். சகலமும் இழந்து அனாதையாய் அமெரிக்காவுக்கு வந்தவர்கள் தான் பின்னாளில் சரித்திரம் படைத்துள்ளனர்.இன்டெலின் ஆன்டிகுரோவ் கூட ஆஸ்ட்விட்ச் ஹோலோகாஸ்ட் முகாமிலிருந்து தப்பி சல்லிகாசு கையில் இல்லாமல் அமெரிக்கா வந்தவர்தான்.வந்தாரை வாழவைக்கும் அமெரிக்கா கொய்சுட்டாவை மட்டும் தவிக்க விட்டுவிடுமா என்ன?கோக கோலா(கோக்) கம்பனியில் வேலைக்கு சேர்ந்த கொய்சுட்டா படிப்படியாக முன்னேறினார். கோக்கும் பெப்சியும் அமெரிக்காவில் அப்போது கடும்போட்டியில் ஈடுபட்டிருந்தன.கோக்தான் முதல்வன் எனினும் பெப்சி அந்த முதலிடத்தை தகர்த்து முன்னேறிக் கொண்டிருந்தது.பெப்சி அப்போதைய(1970களில்) சூப்பர்ஸ்டாரான மைக்கேல் ஜாக்சனையும்,மடோன்னாவையும் விளம்பரத்துக்கு வளைத்து போட்டது நல்ல பலனை தந்தது.கோக் வழக்கம் போல கஞ்சத்தனம் பார்த்து விளம்பரம் செய்ய,பெப்சி அடித்து முன்னேறிக்கொண்டிருந்தது. பெப்சியின் ஜெனெரேஷன் X விளம்பரம் வந்து கோக்கின் அடிமடியில் கையை வைத்தது.(ஜெனெரேஷன் X என்பது 1964 - 1980 பிறந்த இளைஞர்களை குறிக்கும்).இந்த விளம்பரம் வந்ததும் பெப்சி கிட்டத்தட்ட கோக்கின் மார்க்கட்டை சாய்த்து விட்டது என்றே சொல்லலாம்.பான்டா என்ற ஒரு பானம் கோக்கின் மானத்தை காத்துக்கொண்டிருந்தது.பெப்சி கோக்கின் விற்பனை விகிதம் 2:3 என ஆகிவிட்டது.இனி விட்டால் சந்தையின் முதலிடம் , நூறாண்டுகளாக காத்து வந்த முதலிடம் போய்விடும் என்ற நிலை. கோக்கின் 90 வயது உரிமையாளரான ராபர்ட் உட்ருப் கொய்சுட்டாவை அழைத்தார்.1930களில் கோக்கை தலை நிமிரவைத்து அமெரிக்க வியாபார உலகில் மாபெரும் சாதனை செய்த அந்த பெரியவர் தன் வாழ்வின் மிக முக்கியமான திருப்புமுனை முடிவை எடுத்தார்.கொய்சுட்டாவை கோக்கின் தலைமை பீடத்தில் அமர வைத்தார்."மானம் காப்பாய்" என்ற ஒரே வேண்டுகோளுடன். கொய்சுட்டா செய்த முதல் காரியம் "டயட் கோக்கை"(Diet coke) அறிமுகப்படுத்தியது.அப்போது உடல் இளைப்பதும்,ஆரோக்கிய உணவுகளை உண்பதும் ஒரு பேஷனாக பரவியிருந்தது.டயட் கோக்கில் ஒரு கலோரி கூட இல்லை என்பதால் எத்தனை குடித்தாலும் உடல் குண்டாகாது.கோக்கை Brand extension செய்ய அதுவரை ராபர்ட் உட்ருப் அனுமதித்ததே இல்லை."ஒரே ஒரு பிராண்ட் கோக் மட்டுமே வரவேண்டும்" என உறுதியாக இருந்தார்.ஆனால் கொய்சுட்டா பின்னாளில் டயட் சந்தை,சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை விட அதிகம் விற்பனையாகும் என வாதாடி அனுமதி பெற்றார்.டயட் கோக் வந்து வெகு விரைவில் அமெரிக்க சந்தையின் 3வது புகழ் பெற்ற பானமாக (கோக்,பெப்சிக்கு அடுத்து) விளங்கியது. பெப்சி அடுத்ததாக ஒரு மரண அடியை கொடுத்தது.அதுதான் "பெப்சி சேலஞ்"(pepsi challenge). பெப்சியில் தற்செயலாக ஒரு விஷயத்தை கண்டுபிடித்தார்கள்.பெப்சி,கோக் இவற்றில் சர்க்கரை அதிகம் இருப்பது பெப்சியில்தான்.ஆக சுவை அதிகமான பானம் பெப்சிதான்.ஆனால் கோக்,பெப்சி இரண்டையும் குடிக்கும் கஸ்டமர்கள் கோக்கே சுவையாய் இருப்பதாக கூறுவர்.காரணம் கோக் எனும் பெயர்தான்.அதே பாட்டிலின் பெயரை மறைத்து கோக் எது பெப்சி எது என தெரியாமல் கொடுத்த பின் சுவை எதில் அதிகம் என கேட்டால் பெப்சியை கைகாட்டுவர். இதை பெப்சி வித்யாசமான முறையில் மக்களிடம் எடுத்து சென்றது. சாலைகளில் பெப்சி சேலஞ் என்ற பலகை தொங்கும்.அங்கே இரண்டு பாட்டில்கள் (லேபில்கள் கறுப்பு ஸ்டிக்கரால்) மறைக்கப்ட்டு எந்த பிராண்ட் என தெரியாமல் காத்திருக்கும்.வழியில் போகும் பொதுமக்கள் அந்த இரண்டையும் குடித்துவிட்டு இரண்டில் சுவை எதற்கு அதிகம் என சொல்ல வேண்டும்.அப்படி சொன்னபின் திரை விலக்கப்படும்.என்ன மாயம்?அப்படி சொல்லப்பட்ட பிராண்ட் பெப்சி.... 100க்கு 90சதவிகிதம் பேர் பெப்சியே சுவைமிக்கது என சொன்னார்கள்.அமெரிக்காவெங்கும் பரபரப்பாக இந்த விஷயம் பேசப்பட்டது.கோக் இந்த பரிசோதனையை ரகசியமாய் நடத்தியபோது அதே முடிவுகள் தான் கிடைத்தன.100 வருஷமாக பொத்தி,பொத்தி வைத்திருந்த பூனை வெளியே வந்துவிட்டது. "......பெப்சி தான் சுவையான பானம்........" கோக் இதோடு முடிந்தது என்றார்கள்.முடிந்திருக்கும்..அதன் தலைமை பொறுப்பில் கொய்சுட்டா இல்லாமலிருந்தால்....கோக் வரலாற்றின் மிக அதிர்ச்சி தரும் முடிவை கொய்சுட்டா எடுத்தார். "கோக்கை நிறுத்திவிட்டு புதிய சுவை மிக்க பானத்தை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்தார்..." கோக்கின் பார்முலா கிட்டத்தட்ட ராணுவ ரகசியமாக காக்கப்பட்டு வந்த ஒன்றாகும்.அந்த பார்முலா தெரிந்தவர்கள் 3 பேர்தான் இருப்பார்கள்.எந்த நெருக்கடியான சூழலிலும் அந்த பார்முலாவை கோக் வெளிவிட்டதில்லை.அமெரிக்க அரசு என்னென்னவோ தகிடுதத்தம் செய்து,மிரட்டி பார்த்தும் கோக் அந்த பார்முலாவை சொன்னதில்லை.இதுபற்றி பல வகையான சுவாரசியமான வதந்திகள் பிசினஸ் வட்டாரத்தில் உலாவும்.சி.ஐ.ஏ கூட இந்த பார்முலாவை அறிய முயன்று தோற்றது என்று சொல்வார்கள்(உண்மையா பொய்யா தெரியாது.கோக் இதை உறுதிபடுத்தவுமில்லை,மறுக்கவுமில்லை) அப்படி புகழ் பெற்ற ஒரு பானத்தை நிறுத்துவதென்றால் அது எப்படிப்பட்ட முடிவு?அதை கொய்சுட்டா எடுத்தார்."நியூ கோக்" எனும் பானத்தை,பெப்சியை விட சுவையான பானத்தை,சந்தையில் வெளியிட்டார்.ராபர்ட் உட்ருப் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என சொல்ல வேண்டியதில்லை.தன் குடும்ப உறுப்பினர் மரணம் அடைந்தது போல் அந்த முதியவர் உணர்ந்தாராம். புதிய கோக் சந்தைக்கு வந்ததும் யாரும் எதிர்பாராத சம்பவம் நடந்தது.... "எங்களுக்கு எங்கள் கோக் வேண்டும்" என அமெரிக்கர்கள் புரட்சி செய்ய துவங்கினர்.முதலில் லேசாக ஆரம்பித்தது பிறகு மக்கள் போராட்டம் ரேஞ்சுக்கு போய்விட்டது.வீதிகளில் கொய்சுட்டாவின் கொடும்பாவி எரிப்பது,புது கோக் டின்களை கொளுத்துவது,மிரட்டல் கடிதாசி போடுவது,கண்ணீர் மடல்களை பத்திரிக்கைகளுக்கு அனுப்புவது என போராட்டம் தீவிரமடைந்தது.அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூட இந்த பிரச்சனையை எழுப்ப சில அங்கத்தினர் முயன்றனர். ஆயிரக்கணக்கில் பழைய கோக் டின்களை வாங்கி ஸ்டாக் செய்ய துவங்கினர் சிலர்.2, 3 மடங்கு விலைக்கு மேல் பழைய ஸ்டாக்குகள் விற்று தீர்ந்தன.உச்சகட்டமாக ஹெலிகாப்டரில் "எங்கள் கோக் எங்களுக்கு வேண்டும்" என பேனர் கட்டிக்கொண்டு கோக் தலைமயைகத்தை நோக்கி ஒசாமா பின்லேடன் ரேஞ்சில் விரைந்த ஒருவர் போலிசால் பிடிக்கப்பட்டார். பெப்சியை இந்த களேபரத்தில் கண்டுகொள்ள ஆளில்லை."இதெல்லாம் கோக் செய்யும் சதி.அவர்களே பணம் கொடுத்து செட்டப் செய்கிறார்கள்." என ஜெயலலிதா ரேஞ்சுக்கு பெப்சி அறிக்கைவிட்டு புலம்பிக் கொண்டிருந்தது.யாரும் அதை கண்டுகொள்வாரில்லை. நம்மூர் அரசியல்வாதி ரேஞ்சுக்கு கொய்சுட்டா போய் அடுத்த நடவடிக்கையை அறிவித்தார்."கோக் மீண்டும் வருகிறது" என அறிவித்தார்.அந்த அறிவிப்பை வெளியிட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் கைதட்டலும்,விசிலும் தூள் பறந்தது.பத்த்ரிக்கை,டிவிநியூஸ் எங்கும் இதே செய்திதான்... பலத்த பரபரப்புக்கு இடையே பழைய கோக் மீண்டும் சந்தைக்கு வந்தது.அமெரிக்க கஸ்டமர்கள் அதை வாங்கிக்குவித்தனர்.தாங்கள் அந்த பானத்தை எந்த அளவுக்கு காதலிக்கிறோம் என்பதை அவர்கள் அன்று தான் உணர்ந்தனர்.சுவையாவது,சர்க்கரையாவது....கோக் அந்த பெயர் தானே முக்கியம்.? இந்த அடியிலிருந்து பெப்சி மீளவே இல்லை.கோக்கின் விற்பனை அதன்பின் எங்கோ போய்விட்டது. ஒரு பிராண்டின் பெயருக்கு எந்த அளவு வலிமை உள்ளது என்பதை மாணவருக்கு விளக்கும் case study யாக இந்நிகழ்ச்சி சந்தையியல் புத்தகங்களில் நீங்கா இடம் பெற்றது. இது கொய்சுட்டா செய்த திட்டமிட்ட சதியா,காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையா என யாருக்கும் தெரியாது.ஏகப்பட்ட வதந்திகள் மட்டும் பத்திரிக்கைகளில் உலா வந்தன. கொய்சுட்டா சாகும்போது கோக் உலகின் நம்பர் ஒன் பானமாக இருந்தது. அப்போதும் அந்த 100 கோக் பங்குகளை அவர் விற்காமல் தான் வைத்திருந்தார்.

75 comments:

Anonymous said...

எனக்கு பெப்ஸிதான் பிடிக்கும்.

கோக் அருந்தினால் உடல் நடுக்கம் ஏற்படும்.

இரண்டுமே தூக்கத்தை கெடுக்கும்.

ஒன்று நீலகேசி. இன்னொன்று குண்டலிகேசி.

இரண்டுமே பேய்கள்தான்.

தெளுவை மொந்தையில் அடைத்து அமெரிக்காவில் விற்க வேண்டும்.
இரண்டு பேய்களையும் ஓட்டி விடலாம்.

Unknown said...

அன்பின் செல்வன்,

தலைப்பை கவர்ச்சிகரமா குடுத்து இழுத்திட்டீங்க. உள்ளே வந்து பாத்தா மேட்டர் வேற எங்கயோ போகுது. ஆனா நல்லா தான் இருக்கு இந்த வரலாறு. ஆனா நான் இந்த ரெண்டையும் குடிக்கறதில்லை. கொள்கைமுறையில விரோதம் ;)

Unknown said...

வாங்க வெங்கட்ரமணி

கோக் என்பது junkfood.உண்மைதான்.குடிக்காமல் இருப்பது உடலுக்கு நல்லதுதான்.

அமெரிக்கர்கள் ஒரு வருடத்துக்கு 42 காலன் கோக் குடிக்கின்றனராம்.(காலனா லிட்டரா ஞாபகமில்லை)

ரவி said...

42 காலன் ??? இது காலனிடம் அழைத்து செல்லும் செல்வன். லிட்டரா இருக்கும்...

குமரன் (Kumaran) said...

செல்வன்,

1. நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள்.
2. தலைப்பு சுண்டி இழுக்கிறது. :-)
3. இந்த கோக் வரலாற்றை அண்மையில் ஒரு மார்க்கெட்டிங்க் (அதைத் தானே நீங்கள் சந்தையியல்ன்னு சொல்றீங்க?) புத்தகத்தில் படித்தேன். 'குமரன்', 'செல்வன்' என்பது கூட ஒரு வித பிராண்ட் பெயர் தானே? என்ன சொல்றீங்க? :-)
4. பொருளாதாரம், மேலாண்மையியல், சந்தையியல் போன்ற சொற்களை எழுதும் போது இனிமேல் அதற்குரிய ஆங்கிலச் சொற்களையும் அடைப்புக் குறிக்குள் போடுங்கள். என்னைப் போல் ஆங்கிலத்திலேயே இவற்றைப் பற்றிப் படித்தவர்களுக்குப் புரியும். இந்தச் சொற்கள் நன்றாய் புழக்கத்தில் வந்த பிறகு (எ.கா. கணினி என்ற சொல் இப்போது பெரும்பாலும் எல்லோருக்கும் புரியும்) ஆங்கிலச் சொற்களை அடைப்புக் குறிக்குள் போடவேண்டாம். அதுவரை இரண்டையும் போடுவது நல்லது என்று எண்ணுகிறேன்.

Anonymous said...

1970களில்) சூப்பர்ஸ்டாரான மைக்கேல் ஜாக்சனையும்,மடோன்னாவையும் ??

80'கள். டினா ட்ரேனர்கூட வருவார்.

Prabu Raja said...

+

நன்று

Unknown said...

செந்தழல் ரவி

கோக்கின் விற்பனை பற்றிய புள்ளிவிவரம்

Annual US Per capita consumption of Coke in servings: 411.
People in the United States: 297,890,000.
Servings of Coke in the US, per year: 122,432,790,000

Unknown said...

குமரன்..வாழ்த்துக்கு நன்றி.ஆனால் 100 எல்லாம் கொண்டாடுவதில்லை.400 அடித்த மாயவரத்தானும்,600 தாண்டிய பெரியஞானி ஐயாவும் சும்மா இருக்கும்போது 100க்கு ஆட்டம் போட்டால் நல்லா இல்லை:-))

இனி அந்த பெயர்களை ஆங்கிலத்தில் அடைப்புக்குறியில் தருகிறேன் குமரன்.சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

ஆம்..குமரன்,செல்வன் எல்லாம் பிராண்ட் தான்.இப்போதைக்கு லாபம்(monetary) தராத பிராண்ட்:-)))

Unknown said...

//80'கள். டினா ட்ரேனர்கூட வருவார். //

thanks for the info anonymous.

Unknown said...

மிக்க நன்றி பிரபுராஜா

Unknown said...

100 அடிச்சாச்சு..வாழ்த்துக்கள் நண்பரே

பதிவு அருமை...

Unknown said...

Thanks a lot Dev.Thank you.

Unknown said...

Here comes 14.

யாத்ரீகன் said...

விறுவிறுப்பாய் இருந்தது.. சுவாரசியமான சம்பவம்.. ஆனால் இந்தியாவில் இத்தகைய பிராண்ட் இமேஜ் என்பது மேல்தட்டு, ஓரளவு நடுத்தர வர்க்கத்திடம் தான் செல்லுபடியாகின்றது... பெரும்பான்மையான மக்களிடம் போய்ச்சேராது என்று நினைக்கின்றேன்..

யாத்ரீகன் said...

விறுவிறுப்பாய் இருந்தது.. சுவாரசியமான சம்பவம்.. ஆனால் இந்தியாவில் இத்தகைய பிராண்ட் இமேஜ் என்பது மேல்தட்டு, ஓரளவு நடுத்தர வர்க்கத்திடம் தான் செல்லுபடியாகின்றது... பெரும்பான்மையான மக்களிடம் போய்ச்சேராது என்று நினைக்கின்றேன்..

ஜோ/Joe said...

செல்வன்,
நீங்க என்ன 'பால கிருஷ்ணா' ரசிகரா? 'ஒன்றே ஆந்திரா..பாலகிருஷ்ணா ஒருவனே தேவன்' தலைப்புல ஏதாவது எழுதி பரிசு பெறுற ஐடியா இருக்கா?

G.Ragavan said...

எனக்கும் பெப்சி கோக் ரெண்டுமே பிடிக்காது. வேஸ்ட். பொதுவாகவே நான் குடிப்பதில்லை.

dondu(#11168674346665545885) said...

அது சரி, கோக், பெப்ஸி இரண்டுமே நான்றாக டாய்லட் க்ளீன் செய்யும் என்று எங்கேயோ படித்தேனே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மஞ்சூர் ராசா said...

எனக்கு தெரிந்து கோக் மற்றும் பெப்சி சுவையில் கொஞ்சம் வித்தியாசம் இருந்தாலும் அமெரிக்க மற்றும் மேல் நாட்டில் வாழ்பவர்கள் இவற்றை அதிகமாக குடிப்பதற்கு காரணம் அவர்களின் உணவு முறை தான். அவர்கள் சாப்பிடும் உணவு செரிமானம் ஆகவேண்டுமென்றால் இவற்றிலுள்ள மூலப்பொருள்களால்தான் முடியும். இதுதான் வெற்றிக்கு காரணம்.

இந்தியாவில் நமது உணவு முறை முற்றிலும் மாறுபாடானது. அதனால் நமக்கு கோக், பெப்சி அதிகம் தேவையில்லை.

மேலும் அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தான் இது போன்றா பானங்கள் அதிகம் தேவைப்படும்.


சரி கட்டுரைக்கு வருவோம்:

வியாபார உலகில் சந்தைப்படுத்துதல் எவ்வளவு முக்கியமானது என்பதை செல்வனின் கட்டுரை அருமையாக விளக்கியுள்ளது. ஆனால் செல்வன் இறுதியில் சொல்லியது போல கொய்சுட்டாவின் கதை காக்கா உட்கார பனம்ப்ழம் விழுந்தக் கதை போலத்தான் இருக்கிறது.


செல்வனுக்கு வாழ்த்துக்கள். நன்றி.

தாணு said...

கோக் பெப்ஸி எதுவுமே பிடிக்காது என்பதால், நோ கமெண்ட்ஸ்

இலவசக்கொத்தனார் said...

எங்க வீட்டிலும் கோக் பெப்ஸி ரெண்டுக்கும் தடா, பொடா எல்லாம் போட்டாச்சு. பழரசம்தான். இங்க சிறுவர்கள் பல் கெட்டுப் போக முக்கியமான காரணமா இந்த கோலா குடிக்கிறதைத்தான் சொல்லறாங்க.

Chellamuthu Kuppusamy said...

செல்வன். ஆர்வத்துடன் வாசித்தேன்... அட்லாண்டாவில் அவதரித்து உலகம் முழுதும் வேர்விட்டிருக்கும் கொக்ககோலா கம்பெனி பற்றி ஒரு பதிவில் விவரித்து விட இயலாது. எனினும் அதனைச் செய்திருக்கிறீர்கள்.

அது சரி.. ஐஸ்வர்யா ராய்க்கும், சுஸ்மிதா சென்னுக்கும் அழகிப்பட்டம் தந்ததே, குளிர்பான மற்றும் அலங்காரப் பொருட்களின் விற்பனையை இந்தியாவில் பெருக்கத்தான் என் நண்பர் ஒருவர் சொல்கிறார். கொஞ்சம் அமெரிக்காவுல விசாரிச்சுச் சொல்லுங்க.. இப்போ தென் அமெரிக்கா & கிழக்கு ஐரோப்பாவில் தான் அழகிகள் அதிகம் இருப்பதாகப் பேச்சு!!

-குப்புசாமி செல்லமுத்து

Sivabalan said...

செல்வன்

மிக அருமையான பதிவு.

இது போல் இன்னும் பல பதிவுகளை எழுத வாழ்த்துக்கள்.

உண்மையை சொன்னால் இது போல் பதிவு போட இங்கே ஆட்கள் மிக குறைவு.

முடிந்தால் தமிழக / இந்திய வெற்றியாளர்களைப் பற்றியும் பதிவுகள் போடுங்கள்.

மிக்க நன்றி!!

கைப்புள்ள said...

அருமையான கேஸ் ஸ்டடி செல்வன். இதே போலவே மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் எல்லாரும் ஒருவிதமான தவறான மனிதர்கள் என்ற மாயையைத் தகர்த்தெறிய, அமெரிக்காவில் ஹோண்டா நுழைந்த போது பயன்படுத்திய ஒரு புகழ்பெற்ற விளம்பரத்தின் tagline"You meet the nicest people on a Honda". இதைப் பற்றிய ஒரு சுட்டி இங்கே.

ஹோண்டா

இதுக்குள்ள இன்னுமொரு சுட்டி இருக்கு. பாத்துட்டு டென்சன் ஆயிடாதீங்க.
:)

நூறாவது பதிவுக்கு என் வாழ்த்துகள் செல்வன்.

Anonymous said...

விறுவிறுப்பாய் இருந்தது.. சுவாரசியமான சம்பவம்.. ஆனால் இந்தியாவில் இத்தகைய பிராண்ட் இமேஜ் என்பது மேல்தட்டு, ஓரளவு நடுத்தர வர்க்கத்திடம் தான் செல்லுபடியாகின்றது... பெரும்பான்மையான மக்களிடம் போய்ச்சேராது என்று நினைக்கின்றேன்..

Unknown said...

//இத்தகைய பிராண்ட் இமேஜ் என்பது மேல்தட்டு, ஓரளவு நடுத்தர வர்க்கத்திடம் தான் செல்லுபடியாகின்றது... பெரும்பான்மையான மக்களிடம் போய்ச்சேராது என்று நினைக்கின்றேன்.. //

வாருங்கள் யாத்ரீகன்,

பிராண்ட் இமேஜுக்கு ஏழை பணக்காரன் வித்யாசமெல்லாம் கிடையாது.இரட்டை இலை கூட பிராண்ட்தான்.அது ஏழைகள் மத்தியில் எடுபடவில்லையா என்ன?

Unknown said...

ஜோ,

அது சும்மா காமடிக்கு போட்டுக்கொண்ட படம்.ராணுவ டிரஸ்ஸீல் கலக்கலாக இருந்ததால் அவதாராக போட்டுக்கொண்டேன்.இப்போது அவதாரை மாற்றிவிட்டேன்.

Unknown said...

ராகவன்

எனக்கு கோக் பெப்சியை விட சீன டீ மிகவும் பிடிக்கும்.இங்குள்ள சீன ரெஸ்டாரண்டுகளில் அதை கணக்கு வழக்கில்லாமல் குடிப்பேன்.அது கிடைக்கவில்லை என்றால் தான் கோக் பெப்சி.

Unknown said...

டோண்டு ஐயா
எனக்கு தெரிந்து கோக்கை பயன்படுத்தி டாய்லட் கழுபுவர்கள் இங்கு யாரும் இல்லை.அப்படி ஒரு வதந்தி இணையத்தில் உலாவுவது உண்மைதான்.இங்கு அப்படி யாரும் செய்வதில்லை என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்லமுடியும்.

தண்ணீர் ஊற்றி கழுவினால் கூட டாய்லட் சுத்தமாகும் தான்.அதுக்காக தண்ணீர் மோசம் என்றா சொல்லமுடியும்:-))

Unknown said...

மஞ்சூர் அண்ணா

கோக் பெப்சி நம்மூர் டீ,காப்பி போல.நம்மூரில் இவை பிரபலமான பானங்கள்.இங்கு கோக் பெப்சி.அவ்வளவுதான்.

உண்மையில் ஜன்க் புட் எனப்படும் உணவுவகைகளை (சிப்ஸ்,முறுக்கு,வெண்ணை,டீ,காப்பி,கோக்)ஆகியவற்ரை தவிர்ப்பதே சிறந்தது

Unknown said...

//அது 42 காலன் தான். அதிகம் இல்லை ஜென்டில்மன். ஓரு நாளைக்கு ஒரு 350 ml coke can தான். அது ரொம்ப சர்வ சாதாரணம். //

Ya..and in many restuarants they give free refills.So its possible to drink 1 litre coke in a day if u go to a restuarant

Unknown said...

அன்பின் தாணு
இது சந்தைபடுத்துதல் கட்டுரைதான்.கோக் பெப்சிக்கு நடுவே உள்ள வியாபார யுத்தத்தை அலசுவதே என் நோக்கம்

அன்புடன்
செல்வன்

Unknown said...

அன்பின் சிவபாலன்
நிச்சயம் இந்திய வெற்றியாளர்கள் குறித்து எழுதுகிறேன்.

நன்றி சிவபாலன்

Unknown said...

தலிவா கைபு,
சுட்டிக்குள் சுட்டி தரும் மகராசா....:-))

இதுபோல் harley davidson பற்றி கூட ஒரு ரகளையான விச்யம் உண்டு.வரும்நாட்களில் எழுதுகிறேன்.உங்கள் சுட்டிக்குள் இருக்கும் சுட்டியை படித்துக் கொண்டிருக்கிறேன்.

வாழ்த்துக்கு மிக்க நன்றி

அன்புடன்
செல்வன்

Unknown said...

Thanks for the wishes ashlyn.

Anonymous said...

Hi Selvan$,
Blogger problem..Unable to Comment.. will put comment whenever it is good :
Before that, top of my mind feeling :

This Coke Vs. Pepsi is really good. I guess I have read it somewhere already. The heading cud have been "coke-e kadavul ;)" [with selvan punch;)].

I feel, it could have been written in a little more interest building style.. konjam interest kuraivaa irukku.. otherwise the concept and explanation is very very good.. Keep up the spirit of Star week.. :)

Anonymous said...

விறுவிறுப்பான பதிவு.

கசப்பான தகவல்களையும் சுவையாகச் சொல்லும் உங்கள் உத்தியும் புகழ் வாய்ந்ததே!!

பொன்ஸ்~~Poorna said...

நல்ல பதிவு செல்வன். முன்னமேயே இது மாதிரி ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன்.. இருந்தாலும் நீங்கள் விவரித்திருக்கும் விதம் மிக நன்றாக உள்ளது..
தொடர்ந்து இதே போன்ற பதிவுகளை எழுதுங்கள்:)

dondu(#11168674346665545885) said...

"தண்ணீர் ஊற்றி கழுவினால் கூட டாய்லட் சுத்தமாகும் தான்.அதுக்காக தண்ணீர் மோசம் என்றா சொல்லமுடியும்:-))"

அதை நான் சொன்னதன் காரணமே அதிலுள்ள வேதிப் பொருட்களை குறித்துத்தான்.

மேலும், கோக், பெப்சி ஆகியவற்றில் அனுமதிக்கும் அளவுக்கதிகமாக பூச்சி மருந்துகள் இருந்தது வெளியில் வந்து சந்தி சிரித்ததே. அவர்கள் யூரோ
ஸ்டாண்டர்டுக்கு ஏற்ற தரக்கட்டுப்பாடு இந்தியாவில் பார்ப்பதில்லை என்ற விஷயமும் வெளி வந்ததே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

//மேலும், கோக், பெப்சி ஆகியவற்றில் அனுமதிக்கும் அளவுக்கதிகமாக பூச்சி மருந்துகள் இருந்தது வெளியில் வந்து சந்தி சிரித்ததே. அவர்கள் யூரோ
ஸ்டாண்டர்டுக்கு ஏற்ற தரக்கட்டுப்பாடு இந்தியாவில் பார்ப்பதில்லை என்ற விஷயமும் வெளி வந்ததே.//

டோண்டு ஐயா,

இந்தியாவில் நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமா மாசடைந்திருப்பதால் அதிலிருந்து தயாரிக்கப்படும் எந்த பானமும் அளவுக்கு அதிகமா கெமிக்கல்ஸ் கொண்டதாகத்தான் இருக்கும்.தப்பு கோக் மேல் இல்லை.நம் தண்ணீர் மீதுதான்.அப்படிப்பார்த்தால் நிலத்தடி நீரையும் தான் தடை செய்ய வேண்டும்.

ஐரோப்பிய தரத்தை இங்கு விதித்தால் எந்த பொருளும் விற்க முடியாது.நன்னாரி சர்பத் துவங்கி டீ,காப்பி வரை தடை செய்ய வேண்டி வரும்.

Unknown said...

நன்றி பொன்ஸ்
வணிகவியல் தொடர்களை நிச்சயம் எழுதுவேன்.இதற்கு முன்னும் சிலவற்ரை எழுதியுள்ளேன்(சாக்லட்,ரஜினி வாய்ஸ்,காதலர் தினம்)ஆகிய தலைப்புகளீல்
நன்றி

Unknown said...

எஸ்.கே நன்றி

நீங்கள் பதிவு போட்டு ரொம்ப நாள் ஆன மாதிரி ஒரு பீலிங்.அடுத்த பதிவை சீக்கிரம் போடுங்கள்

அன்புடன்
செல்வன்

சிவா said...

செல்வன்! ரொம்பவே அருமையான பதிவு.கட கடன்னு படிச்சி முடிச்சிட்டேன். அவ்வளவு சுவாரஸ்யம். தொடருங்கள். இப்படி நிறைய விசயங்கள் உங்கள் நடையில் எடுத்து விடுங்கள்.

VSK said...

போட்டாச்சு!!

Machi said...

நல்ல பதிவு செல்வன்.

பெப்ஸி, கோக் என்ற கோலா இரண்டுமே நல்லதல்ல என்பதால் தான் அமெரிக்க அரசு பள்ளிகளில் இதற்கு தடை போடப்போகிறது ( போட்டுவிட்டது? ).

கோக்கால் பெப்ஸியை விளம்பரத்தில் அடிச்சுக்கமுடியாது. ஆனா கோக்குக்கு ஒரு கவர்ச்சி உள்ளது என்பதை மறுக்கமுடியாது.

//இது கொய்சுட்டா செய்த திட்டமிட்ட சதியா,காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையா என யாருக்கும் தெரியாது//
எனக்கு காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாதான் தெரியுது, இதுக்கு போயா அவரை சந்தையியலின் தந்தை என்று கூறுகிறார்கள்?????

Unknown said...

//பெப்ஸி, கோக் என்ற கோலா இரண்டுமே நல்லதல்ல என்பதால் தான் அமெரிக்க அரசு பள்ளிகளில் இதற்கு தடை போடப்போகிறது ( போட்டுவிட்டது? ).//

தவறான தகவல் இது குறும்பன்.

//எனக்கு காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாதான் தெரியுது, இதுக்கு போயா அவரை சந்தையியலின் தந்தை என்று கூறுகிறார்கள்????? //

இல்லைங்க.அவர் இதுதவிர பல சாதனைகள் செய்தார்.கொலம்பியாவில் ஒரு பெப்சி டீலர் கொலம்பிய சந்தையில் 86% பங்கை ஆக்கிரமித்திருந்தார்.பேசி பேசி சரிகட்டி ஒரே நாளில் திடீரென அவரை கோக் பக்கம் தாவ வைத்தார்.ஒரே நாளில் கொலம்பிய சந்தையில் 86% பங்கு கோக் பக்கம் வந்தது.

இந்தியாவில் தம்ஸ் அப்பை விலைக்கு வாங்கி ஒரே நாளில் பாதி மார்க்கட்டை பிடித்தார் கொய்சுட்டா.மேலும் இந்தியர்கள் கொய்சுட்டாவை மறக்கவே முடியாது.80களில் கொலம்பியா பிசர்ஸ் எனும் நிறுவனத்தை கோக் விலைக்கு வாங்கியது.அந்நிறுவனம் தயாரித்த படம் ரிச்சர்ட் அட்டன்பரோவின் "காந்தி".

பல சர்வதேச மார்க்கட்டுகளை பிடித்து கோக்கை பெரும் லாபம் தரும் நிறுவனமாக மாற்றியது கொய்சுட்டாவின் சாதனை

Unknown said...

எஸ்.கே
உங்கள் பதிவை படித்தாயிற்று.பின்னூட்டமும் இட்டாயிற்று.

நன்றி

வவ்வால் said...

பதிவை ஆரம்பத்திலே படித்து பின்னூட்டம் போட்டு இருந்த எளிதா இருந்து இருக்கும் அப்போ பிளாக்கர் விடவில்லை.இப்போ பின்னுட்டம் உடன் சேர்த்து எல்லாத்துக்கு ஏற்றார் போல ஒரு பதில் சொல்ல வேண்டி இருக்கே :-))

அருமையா சந்தையியல் பற்றி சொன்னீர்கள்.ஆனால் கோக்,பெப்சி இரண்டுமே un ethical வியாரபார யுக்திகளை தான் செய்து வருகிறார்கள் மூன்றாம் உலக நாடுகளில்.

பார்லே பீவரேஜஸ்( THUMS-UP,LIMCA,GOLD SPOT,MAZAA ) என்ற நிறுவனத்தை மொத்தமாக வாங்கி தான் கோக் இந்தியாவில் நுழைந்தது.இன்றும் மிக சிறிய அளவில் அந்த பிராண்டுகள் வெளியிடுகிறது ஆனால் முக்கியத்துவம் தருவதில்லை. மேலும் பிராந்திய ரீதியில் செயல் பட்டு வந்த குளிர்பானங்களை பணத்தை பிரயோகித்து முடக்கியது கோக்/பெப்சி.உதாரணமாக கோக் பிரதிநிதி கடைகளுக்கு நேராக சென்று உள்ளூர் குளிர்பானத்தை பாட்டில் உடன் மொத்தமாக வாங்கி உடைத்து அழித்து விடுவார் ,அந்த சிறிய குளிர்பான நிறுவனத்தால் உடனடியாக சந்தைக்கு விநியோகிக்க முடியாது அப்படியே நாளா வட்டத்தில் வாடிக்கையாளர்களை இழந்து விடும்.

மேலும் கடைகளுக்கு குளிர்பதன பெட்டி இலவசமாக தருகிறோம் எங்கள் சரக்கை மட்டும் தான் விற்க வேண்டும் என ஒரு யுக்தியை செயல் படுத்தினார்கள் இதிலேயே பெரும்பாலான சிறு குளிர்பான நிறுவனங்கள் அடி வாங்கி விட்டது.இப்படி அழிந்த நிறுவனங்கள் எண்ணற்றது.எனக்கு தெரிந்து வின்சென்ட்,காளி மார்க்,பொவன்டோ போன்றவை நொடித்து போய்விட்டன.மதுரையில் செயல் படும் மாப்பிள்ளை விநாயகர் அந்த பகுதியில் வெகு பிரபலம் இப்போதும் விட பிடியாக செயல் பட்டு வருகிறது. அவர்களையும் பெப்சி விலை பேசி தோல்வி அடைந்தது ,இதனை விகடனில் அவர் அளித்த பேட்டியில் சொல்லியுள்ளார்.

குளிர்பானத்தில் பூச்சி மருந்து உள்ளதற்கு காரணம் நிலத்தடி நீர் மாசு என்கிறீர்கள் அப்படி பார்த்தால் அவர்களது புட்டிகளில் அடைக்கப்பட்ட குடி நீரிலும் பூச்சி மருந்து இருக்க வேண்டுமே ஏன் இல்லை. குடிநீர் எந்த வித வாசனை ,சுவையூட்டிகளும் இல்லாமல் வருகிறது எனவே அதனை நன்றாக சுத்திகரித்து தருகிறார்கள்.குளிர்பானங்களில் சக்கரை,வாசனை எல்லாம் இருப்பதால் அதில் இதெல்லாம் அமுங்கி விடும் தெரியாது என சரியாக சுத்திகரிக்க படாத நீரில் தயாரிக்கிறார்கள்.எனவே இது ஏமாற்று வேலை தானே?

கேரளாவில் பிளாச்சி மடை என்ற இடத்தில் உள்ள கோக் தொழிற்சாலை தங்களது கழிவு நீரினை ஆரம்ப காலத்தில் இதனை வைத்து விவசாயம் செயலாம் ஏதும் தீங்கு இல்லை என விவசாயிகளுக்கு இலவசமாக கழிவு நீரினை தந்தது சிறிது காலத்தில் அந்த நீரில் இருந்த அதிகபடியான உப்பினால் நிலம் மாசு அடைந்து விட்டது ,மேலும் அதிகப்படியான நிலத்தடி நீர் உரிஞ்சுதலால் நிலதடி நீர் ஆதாரம் அழிந்து விட்டது.

இதற்காக அங்கே பெரும் அளவில் போராட்டம் நடை பெருகிறது ,இன்றளவும் அங்கே சுழற்சி முறையில் தினசரி ஒருவர் என உண்ணாவிரத போரட்டம் நடத்துகிறார்கள் .இந்த போரட்ட காரர்கள் நாடளுமன்றம் முன்பாகவும் தொடர் உண்ணாவிரதம் இருக்கிரார்கள் அதில் மேதா பட்கர்,அருந்ததி ராய் போன்றோரும் கலந்து கொண்டுள்ளார்கள். இது வரை உருபடியாக ஏதும் நடக்கவில்லை. நர்மதா சரோவர் அணைக்கட்டு போராட்டத்தில் அமீர்கான் ஆதரவு தெரிவித்த போது கூட இந்த பிரச்சினை குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதிற்கு அவர் எனக்கு எதும் தெரியாது என நழுவி விட்டார்.

கேரளாவில் போராட்டம் வலுக்கவே இபோது நெல்லைக்கு இடம் பெயர கோக் முடிவு செய்துள்ளது தாமிரபரணி ஆற்று நீரை உரிஞ்ச திட்டமிட்டு ,குற்றாலம் ஊராட்சி தலைவருக்கு பணம் கொடுத்து கோக் தொழிற்சாலை வர ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்ற வைத்துள்ளார்கள் ,பின்னர் மக்கள் போரட்டம் வலுக்கவே அவர் தீர்மானத்தை திரும்ப பெர முயற்சித்துள்ளார் ,எனவே அதனை தடுக்க அவர்க்கு அதிகப்படியான மது குடிக்க வைத்து இறக்க வைத்துள்ளார்கள் என சிறிது காலத்திற்கு முன் செய்திதாள்களில் பரபரப்பாக அடிப்பட்டதுஅதற்காக தமிழகத்தில் ஒரு போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சியினால் துவக்க பட்டுள்ளது.நான் கூட அதற்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டேன்

மணியன் said...

செல்வன், சதமடித்ததிற்கு வாழ்த்துக்கள்!! முதல் நூறு நானூறு அடித்த லாராவிற்கும் இனிமையானதே !

நீங்களும் வவ்வாலும் ஆடும் இரட்டையர் ஆட்டம் லியாண்டர்/பூபதி இணைக்கு ஈடாக உள்ளது.:) நல்ல பதிவும் நல்ல பின்னூட்டங்களும்.

Sundar Padmanaban said...

செல்வன்,

நேற்று blogger பிரச்சினையினால் பின்னூட்டமிட முடியவில்லை.

//பெப்சி அப்போதைய(1970களில்) சூப்பர்ஸ்டாரான மைக்கேல் ஜாக்சனையும்,மடோன்னாவையும் விளம்பரத்துக்கு வளைத்து போட்டது நல்ல பலனை தந்தது.கோக் வழக்கம் போல கஞ்சத்தனம் பார்த்து விளம்பரம் செய்ய,பெப்சி அடித்து முன்னேறிக்கொண்டிருந்தது.
//

இரண்டு நிறுவனங்களின் சந்தைப்படுத்தும் உத்திகளும் விளம்பர உத்திகளும் முற்றிலும் மாறானவை.

பெப்ஸி ஆரம்பத்திலிருந்தே நட்சத்திரங்களையும் பிரபலமானவர்களையும் முன் வைத்து தனது பொருட்களை விளம்பரப்படுத்தி சந்தைப் படுத்தியது. இன்று வரை அப்படித்தான் செய்கிறது.

விளம்பர விஷயத்தில் கோக (கோகோ அல்ல) கோலாவின் கொள்கை வேறு மாதிரி. முதலிடத்தில் இருப்பதால் தனி நபர்களை நம்பி அதன் பொருட்களை விற்கத் தேவையில்லை என்ற - கர்வம் - அந்நிறுவனத்திற்கு எப்போதும் உண்டு. அதனாலேயே அதன் விளம்பரங்களில் நட்சத்திரங்கள் தோன்றுவதில்லை. இந்தியாவில் பெப்ஸி 1990-இல் மறுபடி நுழைந்தபோது பாப் பாடகர் ரெமோவையும் ஜுஹி சாவ்லாவையும் வைத்து எடுத்து வெளியிட்ட அந்த நீஈஈஈஈஈஈஈளமான தொலைக்காட்சி விளம்பரம் நினைவிருக்கிறதா? இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் மிக நீளமான விளம்பரம் அது (கிட்டத்தட்ட ஒரு நிமிடம் நீடித்தது - மற்ற விளம்பரங்களெல்லாம் அதிகப்பட்சமாக 20 வினாடிகளே நீடித்தன) - அதுவும் அனைத்து முக்கிய சானல்களிலும் ஒரே சமயத்தில் - நேயர்கள் சானலை மாற்றி தப்பிக்காமலிருக்க.

பெப்ஸி வந்து சில வருடங்களில் கோககோலா இந்தியாவில் மறுபடி வந்தபோதும் அவர்கள் வெளியிட்ட மகா மெகா நீள விளம்பரத்தில் எந்த நட்சத்திரங்களும் இல்லை. அலைபாயுதே படத்தின் பச்சை நிறமே பாடலில் சிவப்பு நிறத்திற்கு மிளகாயை ஷாலினி கடிப்பதைக் காட்டுவார்களே - அது போல, சிவப்புக் கிரிக்கெட் பந்திலிருந்து காயப் போட்டிருக்கும் சிவப்பு மிளகாய் வத்தல்கள் என்று சிவப்பு மயமான விளம்பரத்தை காட்டினார்கள்.

ஆனால் இந்தியாவில் சினிமா கலக்காத வியாபாரமே கிடையாது என்றாகிவிட்டதால் நிறைய கையைச் சுட்டுக்கொண்ட பிறகு, விதிவிலக்கு அளித்து விளம்பரங்களில் நட்சத்திரங்களைத் தோன்றவைக்க மேலிட அனுமதி வாங்கினர். அதிலிருந்து இரண்டு நிறுவனங்களும் அனுதினமும் நட்சத்திரங்களை வைத்து கோடிக்கணக்கில் விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றனர். ஒரே நட்சத்திரம் (ஆமீர் கான்) இரண்டு பானங்களுக்கும் மாடலாக வந்த கூத்தும் நடந்தது. பயனாளர்களெல்லாம் மாக்கான்களாய் இருக்கும் வரை இம்மாதிரி கூத்துகள் நடந்துகொண்டே இருக்கும்.

மத்தபடி பெப்ஸி எப்பவும் ஒரு இளமைத் துள்ளலான விளம்பர உத்திகளுக்குப் பேர் போனது - அந்தச் சுவை சவால் சுவாரஸ்யமான விஷயம்.

John Sculley-யோட Pepsi to Apple படிச்சிருக்கீங்களா? அருமையான புத்தகம் அது.

பதிவுக்கு நன்றி.

பி.கு.:- ரெண்டு நிறுவனங்கள்லயும் 10 வருஷங்கள் பணி செய்த சிறிய அனுபவத்தின் விளைவாகவே இந்தப் பின்னூட்டம்.

Sundar Padmanaban said...

//அதிலிருந்து இரண்டு நிறுவனங்களும் அனுதினமும் நட்சத்திரங்களை வைத்து கோடிக்கணக்கில் விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றனர்//

"அதிலிருந்து இரண்டு நிறுவனங்களும் அனுதினமும் நட்சத்திரங்களை வைத்து கோடிக்கணக்கில் *செலவு செய்து* விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றனர்" என்று குறிப்பிட நினைத்தேன்.

Blogger திடீர் திடீர் என்று மயக்கமடைந்து விடுவதால் நடுவில் காலியாகிவிட்டால் என்ன செய்வது என்று பயந்து அவசரத் தட்டச்சில் வார்த்தைகள் விடுபட்டுவிட்டன.

நன்றி.

வவ்வால் said...

//நீங்களும் வவ்வாலும் ஆடும் இரட்டையர் ஆட்டம் லியாண்டர்/பூபதி இணைக்கு ஈடாக உள்ளது.:) நல்ல பதிவும் நல்ல பின்னூட்டங்களும்.//

மணியன்,

நான் வலைக்கு அந்த பக்கம் இருந்து ஆடுகிறேன்னு நினைத்தேன் நீங்க இரண்டு பேரையும் வலைக்கு இந்த பக்கமே வைத்து விட்டீர்களா! ஒரு ஏஸ் அடிக்கலாம்னு பார்த்தேன் :-))

Sundar Padmanaban said...

வவ்வால்,

நீங்களும் இந்தத் துறையைப் பற்றி நிறைய அறிந்து வைத்திருக்கிறீர்களே! :) வேலை செய்த அனுபவம் உண்டா?

//பார்லே பீவரேஜஸ்( THUMS-UP,LIMCA,GOLD SPOT,MAZAA ) என்ற நிறுவனத்தை மொத்தமாக வாங்கி தான் கோக் இந்தியாவில் நுழைந்தது//

இதன் காரணம் "unethical business tactics" அல்ல. நிலம் வாங்கி, பார்த்துப் பார்த்து வீடு கட்டிக் குடி போவதற்கும், ஏற்கனவே கட்டப்பட்டுள்ள வீட்டை வாங்கிச் சட்டென்று குடிபோவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன? அதை விளங்கிக் கொண்டால் கோககோலா பார்லே நிறுவனத்தை வாங்கியதன் காரணத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

பெப்ஸியும் சரி, கோககோலாவும் சரி, இந்தியாவில் விலைக்குக் கிடைத்த குளிர்பானத் தொழிற்சாலைகளை வாங்கத் தவறவில்லை. புதிதாக இடம்பிடித்து, கட்டிடம் கட்டி, இயந்திரங்களை நிர்மாணித்து, சோதனையோட்டம் முடிந்து, தயாரித்தலைத் துவக்க மிகக்குறைந்த பட்சம் ஒரு தொழிற்சாலைக்கு இரண்டு வருடங்களாவது ஆகும். ஏற்கெனவே இயங்கும் தொழிற்சாலையை வாங்குவதன் மூலம் இந்த நேரத்தைச் சேமிப்பது ஒரு பெரிய லாபம். அந்த ஒரு வருடத்தால் ஆகும் விற்பனையினால் முதலீட்டிற்கான Break-even Point-ஐ அடையும் காலமும் குறுகி லாபம் பெருகுவது இன்னொரு நன்மை. அதனால் கிடைக்கும் சந்தைப் பெருக்கமும் சதவீதமும் இன்னொரு நன்மை. எல்லாவற்றிற்கும் மேலாக அனுபவம் உள்ள வேலையாட்கள் கிடைப்பது - அதுவும் உள்நாட்டுச் சந்தை நிலவரம் தெரிந்த ஆட்கள் கிடைப்பது குறிப்பான நன்மை. ஆக ஒரே கல்லில் ஏகப்பட்ட மாங்காய்களை அடிக்கலாம்.

பார்லேயின் நிர்வாகிகள் பலரும் இரண்டு மடங்கு சம்பளத்தில் கோககோலாவில் முக்கியப் பதவிகள் வகித்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அது சரி. அவர்கள் வாங்கி அழித்து விட்டார்கள் என்று புகார் செய்கிறோமே. இவர்கள் ஏன் விற்றார்களாம்?

இது தவிர இன்னும் ஏராளமான தொழிற்சாலைகள் எந்தவொரு நிறுவனத்தையும் சாராமல் Lease என்ற அடிப்படையில் பானங்களை - அது பெப்ஸியோ, கோக்கோ - தயாரித்துத் தருவதும் நடக்கிறது. தெரியுமா?

பெப்ஸி கோக் வருவதற்கு முந்தைய நிலவரத்தை எந்த அளவு நீங்கள் கணக்கிலெடுத்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. பார்லே, மாப்பிள்ளை விநாயகர், போன்றவை அப்பழுக்கற்ற பானங்கள் என்று நம்புவது உங்கள் இஷ்டம்.

நான் இவை தயாரிக்கப்பட்ட முறைகளை நேரடியாகப் பார்த்து நொந்து போயிருக்கிறேன். இவை தயாரிக்கப்படுவதை ஒரு முறை கண்ணால் பார்த்தால் அப்புறம் அவற்றை இலவசமாகக் கொடுத்தால் கூட வாங்கிக் குடிக்க மாட்டீர்கள்.

மதுரையில் டொரினோ தொழிற்சாலைக்கு அடுத்த சில கிலோமீட்டர்கள் கழித்து பரவை அருகே இருக்கும் பெப்ஸி தொழிற்சாலை முன்பு டபுள் கோலா தொழிற்சாலையாக இருந்தது. டபுள்கோலாவும் ஒரு அமெரிக்க பானம்தான். அவர்களால் டொரினோ மாப்பிளை விநாயகர் பானங்களை வீழ்த்த முடியவில்லை. :) பெப்ஸி வந்து டபுள் கோலா தொழிற்சாலையை வாங்கி கோடிக்கணக்கில் செலவழித்து புதிய இயந்திரங்களை நிறுவி விரிவாக்கம் செய்து, தரத்தை அவர்கள் தரத்திற்கு உயர்த்தி தயாரிப்பைத் துவங்க ஒன்றரை வருடம் பிடித்தது. ஒவ்வொரு செங்கல் வைக்கப்பட்ட போதும் உடனிருந்தேன் என்ற வகையில் இதை பகிர்ந்து கொள்கிறேன். டபுள் கோலாவில் பணிபுரிந்த அனைத்து தொழிலாளர்களும் பெப்ஸியில் இரு மடங்கு சம்பளம் பெற்றனர். விரிவாக்கியதால் இன்னும் நிறைய வேலை வாய்ப்பு உருவாகியது. மறைமுக வேலைவாய்ப்புகளும் தொழில்களும் உருவாகின (வணிகப் போக்குவரத்து, உற்பத்திப் பொருள்களின் தயாரிப்பு, etc.).

எப்படி ஏகப்பட்ட வருடங்களுக்கு அம்பாஸடர் கார் என்ற ஒரே மாடலை வைத்து மிளகாய் அரைத்தார்களோ, எப்படி ஒரு வருடத்திற்கு முன்பே படிக்கல் போன்ற தொலைபேசியை வாங்கி இணைப்பைப் பெறுவதற்கு முன்பதிவு செய்து காத்திருக்க வைத்து வாடிக்கையாளர்களைச் சாகடித்தார்களோ, எப்படி நமது பணத்தை வைத்து பிழைப்பு நடத்தும் வங்கிகள் நம்மைப் புழுப் போல நடத்தினவோ, எப்படி கேட்பாரற்ற Monopolistic Trade Practices-களால் இந்திய மக்களின் தலையில் எல்லா வியாபார நிறுவனங்களும் மிளகாய் அரைத்துக் கொண்டிருந்தனவோ அப்படித்தான் நீங்கள் குறிப்பி்ட்ட பார்லே, மாப்பிள்ளை விநாயகர், காளி மார்க் போன்ற அனைத்து பானங்களும் பயனாளர்களின் வயிற்றிலடித்துக்கொண்டு தான் இருந்தன.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நரசிம்மராவ் அரசு கதவுகளைத் திறந்ததும் மற்ற நிறுவனங்கள் உள்ளே வந்து செய்ததைத் தான் பெப்ஸியும் கோக்கும் செய்கின்றன. இன்று IBM-ம் Microsoft-ம் கொண்டு வந்து கொட்டும் முதலீட்டைத்தான் கோக்கும் பெப்ஸியும் கொட்டின. 1990 களில் இந்தியாவின் மொத்தக் குளிர்பானச் சந்தை மதிப்பு 3750 கோடி. இந்தியாவில் கோக்கின் பத்தாண்டு முதலீட்டுத் திட்டத்தின் மதிப்பு மட்டும் 4500 கோடி!

இவை நாம் சாதாரணமாக அன்றாடம் புழங்கும், பயன்படுத்தும் பானங்களாக இருப்பதால் நம் கண்களை உறுத்துகிறது. ஆனால் நம் அன்றாடப் பயன்பாட்டில் இல்லாத, ஆனால் நிலத்தடி நீரிலும், காற்றிலும் நச்சுத்தன்மையை ஏற்றிக்கொண்டே இருக்கும் எத்தனையோ பொருள்கள் முன்பும் இப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. TNPCB என்று ஒன்று இருக்கிறது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். அதிலிருக்கும் - பொதுவாகவே அரசாங்க இயந்திரங்களில் இருக்கும் - மாசடைந்த ஊழியர்கள் கையூட்டு பெற்றுக்கொண்டு நச்சுப் பொருள்களை வெளியேற்றும் தொழிற்சாலைகளையும், சந்தையில் உலவும் நச்சுப் பொருள்களையும் தலைமுறை தலைமுறையாகக் கண்டுகொள்ளாமல் பொதுமக்களுக்குத் துரோகம் செய்வது உங்களுக்குக் கட்டாயம் தெரிந்திருக்கும். திருப்பூர் சாயப் பட்டறைகளிலிருந்து, திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் வரை எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. அவற்றை நாம் ஏன் எதிர்த்துப் போராட்டம் நடத்துவதில்லை?

பெப்ஸி கோக்கையாவது குடிக்காமல் தவிர்த்துவிடலாம். ஆனால் மேற்சொன்ன நச்சுகள் நம்மை எந்த ரூபத்தில் வந்து தாக்குகின்றன என்பது கூட நமக்குத் தெரிவதில்லை என்பது சோகம்.

நான் அமெரிக்க நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் அவற்றால் மட்டுமே தீமைகள் விளைகின்றன என்ற மாயப் பிம்பத்தை உருவாக்கி அது பரப்பப் படுவதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தீமை என்றால் எல்லாக் குளிர்பானங்களும் தீமைதான். In other words, they don't do any good for us - no vitamins, minerals or carbo-hyderates! They're just carbonated, aerated water drinks!

குளிர்பானங்கள் என்று மட்டும் எடுத்துக் கொண்டால் பெப்ஸி கோக் இரண்டும் மற்ற எந்த உள்நாட்டுத் தயாரிப்புகளையும் விட சிறந்த தரத்தைக் கொண்டுள்ளன என்பதை நான் சொல்வதை விட நீங்களே டொரினோ தயாரிக்கப்படுவதையும் பெப்ஸி தயாரிக்கப்படுவதையும் நேரில் சென்று பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்நிறுவனங்களால் நிகழும் பெரிய தீமை நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்படுவது. ஆனால் இத்தீமை பல்லாண்டு காலமாக மற்ற உள்நாட்டு நிறுவனங்களால் செய்யப்பட்டுதான் வருகிறது. ஆனால் அவை சிதறி தனித்தனியாக ஒரு சிறிய எல்லைக்குள் இயங்குவதால் நமக்கு அதன் Big Picture தெரியாமல் போயிற்று. இப்போது நாடறிய பெப்ஸி கோக் என்று இருப்பதால் பளிச்சென்று கண்ணுக்குத் தெரிகிறது. ஆக இத்தீமை பெப்ஸி கோக்குக்கு மற்றும் உரித்தானது அல்ல. குளிர்பான நிறுவனங்கள் அனைத்திற்கும் பொதுவானது.

அதே சமயத்தில் நிலத்தடி நீரை அபரிமிதமாகப் பயன்படுத்தும் எத்தனையோ - குளிர்பானமல்லாத பொருட்கள் தயாரிக்கும் - நிறுவனங்களும் இருக்கத்தான் செய்கின்றன என்பதையும் மறந்துவிடக்கூடாது. ஆற்று நீரை மாசு படுத்துவதும் ஆண்டாண்டுகாலமாக நடந்துதான் வருகிறது (அது சரி. கூவம் என்பது ஒரு காலத்தில் நதியாக இருந்ததா? அல்லது முதலிலிருந்தே சாக்கடையா? எனக்கு சென்னையைப் பற்றி ஒன்றும் தெரியாது என்பதால் இந்தச் சந்தேகம் - உள்குத்து வெளிக்குத்தெல்லாம் இல்லை).

இது ஒரு பதிவிலோ அல்லது பின்னூட்டத்திலோ எழுதி முடிகிற சமாச்சாரம் அல்ல. பார்க்கலாம். என்றாவது நேரம் கிடைக்கும் பட்சத்தில் எழுத உத்தேசம்.

நன்றி.

Sundar Padmanaban said...

செல்வன்,

Blogger அநியாயத்திற்குச் சதி செய்கிறது. லொங்கு லொங்கு என்று அரை மணி நேரம் அடித்த பின்னூட்டத்தை இடும்போது பக்கம் காலாவதியாகிவிட்டது! :( :(

Sundar Padmanaban said...
This comment has been removed by a blog administrator.
Sundar Padmanaban said...

//அமெரிக்க மற்றும் மேல் நாட்டில் வாழ்பவர்கள் இவற்றை அதிகமாக குடிப்பதற்கு காரணம் அவர்களின் உணவு முறை தான். அவர்கள் சாப்பிடும் உணவு செரிமானம் ஆகவேண்டுமென்றால் இவற்றிலுள்ள மூலப்பொருள்களால்தான் முடியும். இதுதான் வெற்றிக்கு காரணம்.

இந்தியாவில் நமது உணவு முறை முற்றிலும் மாறுபாடானது. அதனால் நமக்கு கோக், பெப்சி அதிகம் தேவையில்லை.

மேலும் அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தான் இது போன்றா பானங்கள் அதிகம் தேவைப்படும்.

//

மன்னிக்கவும். நம்மிடையே நிலவும் பல்வேறு மூட நம்பிக்கைகளில் இவையும் சில!

Unknown said...

மன்னிக்கவும் நண்பர்களே

பிளாக்கர் சொதப்பி தள்ளுகிறது.உங்கள் பின்னூட்டங்களை வெளியிட பிரம்ம பிரயத்தனம் எடுக்க வேண்டியுள்ளது.சுந்தரின் அருமையான பின்னூட்டங்களுக்கு என் நன்றி.விரிவாக பதில் போட வேண்டியவை அவை.பிளாக்கர் சரியானவுடன் இடுகிறேன்.

ஏதேனும் பின்னூட்டம் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.சரியானதும் பார்த்து இட்டுவிடுகிறேன்.சில பதிவுகளை திறக்கவே முடியவில்லை

வவ்வால் said...

வணக்கம் சுந்தர்!

நான் UNETHICAL என சொன்னது குளிர்பான நிறுவனங்களை வாங்குவதை அல்ல விற்பனைக்கு ஒப்புகொள்ளாத போட்டி நிறுவனங்களின் குளிர்பான புட்டிகளை சில்லரை விற்பனையளர்களிடம் இருந்து மொத்தமாக வாங்கி புட்டிகளை உடைத்து அழித்து விடுவதை. இவ்வாறு நிறைய புட்டிகளை உடைத்து விடுவதால் அவர்களால் உடனடியாக சந்தையில் தங்கள் சரக்கை விற்க இயலாது அந்த கால கட்டத்தில் இவர்கள் புகுந்து சந்தையை வசப்படுத்தி விடுவார்கள்.

மேலும் குளிர்பதன பெட்டி இலவசமாக தருகிறோம் வேறு உள்ளூர் தயாரிப்பு குளிர்பானங்களை விற்காதீர்கள் எனவும் முடக்குவதையும் சொன்னேன்.சிறு முதலீட்டில் இயங்கும் உள்ளூர் தயாரிப்பாளர்களால் COKE/PEPSI போல இலவசமாக தர முடியாதே!

உள்ளூர் குளிர்பானங்களின் தயாரிப்பு தரம் குறைவு என்பது உண்மை தான் ஆனால் சர்வதேச தரம் எனப்படும் கோக்/பெப்சி போன்றவற்றில் பூச்சி மருந்து அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கிறதே! அதையும் ஒரு சுனிதா நாரயணன் போன்ற தன்னார்வலர்கள் தானே வெளிகாட்டி சர்வதேச தரம் என்று சொல்லிக்கொண்ட போலி திரையை கிழித்தார்!

//இன்று IBM-ம் MICROSOFT-ம் கொண்டு வந்து கொட்டும் முதலீட்டைத்தான் கோக்கும் பெப்ஸியும் கொட்டின. 1990 களில் இந்தியாவின் மொத்தக் குளிர்பானச் சந்தை மதிப்பு 3750 கோடி. இந்தியாவில் கோக்கின் பத்தாண்டு முதலீட்டுத் திட்டத்தின் மதிப்பு மட்டும் 4500 கோடி!//

கோக் போன்றவை செய்யும் முதலீடு எல்லாம் உண்மையான தொழில் வளர்ச்சி அல்ல, அவர்களால் வேலை வாய்ப்பு பெருகினாலும் அதனால் நாட்டில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்பட போவதில்லை. திடீர் என்று கோக் மூடிவிட்டு போனால் அதிக சம்பளம் கொடுத்து பழக்கிவிட்ட ஊழியர்களால் வேறு எந்த வேலையும் செய்ய முடியாது தவிப்பார்கள்! ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றோர் கை நிறைய கோக்கில் சம்பளம் வாங்குவதை விட ஆப்பிள் கம்பியுட்டரில் குறைந்த சம்பளமாக இருந்தாலும் ஆக்க பூர்வமாக சாதிக்கலாம் என வெளியேறியவர் தானே.எனவே குளிர்பானங்கள் தரும் வேலை வாய்ப்பு முன்னேற்றதிற்கு உதவாத ஒன்று!

மேலும் உள்னாட்டு குளிர் பானங்கள் நமது பணத்தை சுருடி கொண்டு வெளி நாடு செல்லப்போவதில்லை.ஆனால் கோக்,பெப்சி எல்லாம் லாபத்தை எடுத்து போய்விடுவர்கள்! இதனால் நீண்ட காலப் பார்வையில் தீமையே!

//திருப்பூர் சாயப் பட்டறைகளிலிருந்து, திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் வரை எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. அவற்றை நாம் ஏன் எதிர்த்துப் போராட்டம் நடத்துவதில்லை//

சரியான நிலவரம் தெரியாமல் பேசுகிறீர்கள் என்ரே தோன்றுகிறது ,அது போன்ற தொழிற்சாலைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றதிலேயே வழக்கு போட்டு பல சாய பட்டரைகள்,தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் சுத்திகரிப்பு ஆலைகளும் கட்டப்பட்டுள்ளது.சிலர் அனுமதி இன்றி சட்ட விரோதமாக செயல் படுகிறார்கள் அவையும் வெகு விரைவில் மாட்டும். ஆனால் எத்தனையோ போராட்டம் நடத்தியும் கோக்/பெபெசி போன்றோர் தங்கள் போக்கை மாற்றி கொள்வதே இல்லை என்பதே உண்மை.

உன்மையில் UNFAIR TRADE PRACTICE AND MONOPOLICING செய்வது கோக்/பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவங்களே.அவர்களுக்கு ஒரு கடிவாளம் அவசியம் தேவை!

வேறு பல தொழில்களுக்கும் நிலதடி நீர் ஆதரம் பயன் படுகிரது இல்லை எனவில்லை ,ஆனால் கோக்/பெப்சி போன்றோர் மிக அதிக அளவில் பயன் படுத்துகிறார்கள்.மீண்டும் அந்த இடத்தில் நிலத்தடி நீர் ஊறுவதற்கு வாய்ப்பே அளிக்காமல் ராட்சத்தனமாக செயல் படுவதையே கண்டிக்கிறார்கள்.

இவ்வளவு சொல்கிறீர்கள் நான் கேள்வி பட்டது உண்மையா என சொல்லுங்கள்,பெப்சி/கோக் போன்றவற்றின் கான்சென்ட்ரேட் இன்றும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து இங்கே நீர் கலந்து புட்டிகளில் அடைக்கப்படுவதாக படித்தேன் உண்மையா? அது ஏன் அதனை இங்கேவே தயாரிக்க முன்வரவில்லை அவர்கள்.

//அது சரி. கூவம் என்பது ஒரு காலத்தில் நதியாக இருந்ததா? அல்லது முதலிலிருந்தே சாக்கடையா? எனக்கு சென்னையைப் பற்றி ஒன்றும் தெரியாது என்பதால் இந்தச் சந்தேகம் - உள்குத்து வெளிக்குத்தெல்லாம் இல்லை). //

கூவம் என்பது நதியே முன்னொரு காலத்தில் பின்னர் பல ஆண்டுகலாக நகர கழிவுகள் கலந்து மாசடைந்து விட்டது அதற்கு மக்களும் அரசின் மெத்தனமுமே காரணம் தனி ஒருவரை சொல்ல முடியாது!

கடைசியாக ஒரு கேள்வி IBM ,MICROSOFT வந்தது என்றீர்கள் ஏன் இதுவரை இங்கே யாரும் பிராசசர், ஹார்ட் டிஸ்க், ராம் என எதுவும் தாயாரிக்க முன்வரவில்லை.அதில் தான் அந்நிய நிறுவனங்களின் இரட்டை வேடம் இருக்கிறது.சின்ன நாடான சிங்கபூர்,கொரியா ,தைவானில் எல்லாம் இதனை தயாரிக்க தொழிற்சாலை துவங்கியுள்ளார்கள் இவர்களே!

Unknown said...

மணியன் நன்றி

லியாண்டர் பயச் சுந்தரும் வவ்வாலும் தான்.சுந்தரின் பின்னூட்டங்கள் கலக்குகின்றன.ஒரு பதிவே போடும் அளவுக்கு நேர்த்தியான பின்னூட்டங்களை தந்துள்ளார்.வவ்வால் அவர் வாதங்களை திறமையாக எடுத்து வைக்கிறார்.

சிவா
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.உங்கள் பின்னூட்டம் இதுபோல் பிசினஸ் கட்டுரைகளை எழுத ஊக்கப்படுத்துகிறது.நன்றி

Unknown said...

அன்பின் சுந்தர்/வவ்வால்,

சுந்தர் உங்கள் அனைத்து பின்னூட்டங்களும் பிரசுரமாகிவிட்டன என நினைக்கிறேன்.பிளாக்கரால் ஏதும் விட்டுபோயிருந்தால் மிக வருந்துவேன்.ஏனேனில் அருமையான தகவல்களை தந்துள்ளீர்கள்.கோக் பெப்சியில் 10 ஆண்டு அனுபவமா?இது சாதாரன விஷயமில்லை.

வவ்வால் கம்யூனிச கோணத்தில் இதை அணுகுகிறார் என நினைக்கிறேன்.ஆனால் நான் சந்தையியல் எனும் கோணத்தில் தான் இதை எழுதினேன்.சுந்தர் வவ்வாலின் கேள்விகளுக்கு அழகாக பதில் சொன்னார்.

வவ்வால் உங்கள் குற்ரச்சாட்டு முழு உண்மையும் இல்லை,முழு பொய்யும் இல்லை.கோக்கும் பெப்சியும் மூர்க்கமாக தான் சந்தையில் போட்டியிடும்.ஆனால் தரமுள்ல நிறுவனங்கள் அவற்ரை எதிர்த்து ஜெயிக்க முடியும்.பிரிட்டனில் வர்ஜின் கோலா அவர்களுக்கு தண்ணி காட்டியது.தம்ஸ் அப் பெப்சியை உண்டு இல்லை என்றாக்கியது(அதன்பின் கனவிலும் கிடைக்காத தொகை கிடைக்கவே கோக்குக்கு விற்று விட்டார்கள்)

காளிமார்க்,பொவண்டோ.....சுந்தர் சொன்னது போல் தரம் கேள்விக்குறி.மேலும் இதில் வேலை வாய்ப்பு,வியாபார லாபம் என பல விஷயங்கள் உள்லன.கோக் விற்று நம் மளிகை கடை அண்னாச்சிகளுக்கு அருமையான லாபம் கிடைக்கிறது.சத்தியமாக் பொவண்டோவால் இதை தந்திருக்க முடியாது.கோக்கால் உருவான வேலைவாய்ப்புகள் ஏற்றுமதி ஏராளம்(சிங்கப்பூருக்கு தம்ஸ் அப் ஏற்றுமதி செய்யப்படுகிறது,பெப்சி முதல் 15 வருடங்களுக்கு வெளியே எடுத்து செல்லும் லாபத்தை விட ஏற்றுமதி மூலம் அன்னிய செலாவணி அதிகம் ஈட்டிதருவதாக உறுதியளித்துள்ளது என நினைக்கிறேன்).இவ்விரு கம்பனிகளும் இந்தியாவில் செய்த முதலீடும் மிக,மிக அதிகம்.

Sundar Padmanaban said...

அன்பின் வவ்வால் (அட என்னங்க. இப்படி எழுதறதுக்கே ஒரு மாதிரி இருக்கு. ஒங்க பேரைத்தான் சொல்லுங்களேன். சரி வேணாம். ஸ்டைலா பேட்மேன்னு சொல்லிக்கறேன்!:) )

உங்கள் பின்னூட்டத்திற்கும், கேள்விகளுக்கும் நன்றி. நான் முதலில் குறிப்பிட்டபடி பெப்ஸி கோக் நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்க முயலவில்லை. எனக்குத் தெரிந்த விஷயங்களை முன் வைக்கிறேன். அவ்வளவே. மற்றபடி அவற்றால் எழும் தீமைகளுக்கு என் எதிர்ப்புக் குரலையும் சத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இன்னும் சில விளக்கங்கள்:

//விற்பனைக்கு ஒப்புகொள்ளாத போட்டி நிறுவனங்களின் குளிர்பான புட்டிகளை சில்லரை விற்பனையளர்களிடம் இருந்து மொத்தமாக வாங்கி புட்டிகளை உடைத்து அழித்து விடுவதை. //

இவர்கள் உள்ளே வரும் வரை, ஏற்கனவே இருந்த பார்லே பானங்களும், மற்ற பொவண்டோ வகையறாக்களும் எப்படி அடுக்கப்பட்டு கடைகளில் விற்கப்பட்டன என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். கிரேடு (Crate) என்றழைக்கப்படும் மரத்தால் செய்யப்பட்ட பெட்டிகளில் அடுக்கியிருந்தார்கள். 90% கிரேடுகள் உடைந்த நிலையில் இருந்தன. கையாளும் தொழிலாளர்கள் கைகளைக் கிழித்துக்கொண்டு அனுதினமும் ரத்தம் சிந்தாத நாளே இல்லை. 90% கிரேடுகள் கேரளாவில் இருந்து வாங்கப்பட்டன. அழிக்கப்பட்ட மரங்கள் எத்தனையோ!. அவற்றை கிட்டத்தட்ட எல்லா கடைகளிலும் ரோட்டில் போட்டு வைத்திருப்பார்கள். தூசி தும்பு என்று எல்லாம் படிந்து டோண்டு அவர்கள் சொன்ன கழிவறையைச் சுத்தப்படுத்தும் அமில பாட்டில்கள் போன்றே அதை கையாண்டு கொண்டிருந்தனர். இதனால் தேய்மானமும், சேதாரமும் அதனால் விளைந்த நஷ்டமும் மிக மிக அதிகம்.

மேலும் இந்தப் பானங்களை - ஏன் எந்த உணவுப் பொருளையுமே - சரியான தட்பவெப்ப நிலையில் வைத்திராவிட்டால் அவை விஷமாகிவிடும். கழிவறையை நன்றாகச் சுத்தம் செய்யும். அல்லது ஒரு எலும்பைப் போட்டு வைத்தால் எலும்பு அழிந்துவிடும் - எல்லாம் ஆகும். கடைக்காரர்கள் கைக்காசைப் போட்டு குளிர்பதனப் பெட்டிகளை வாங்க வேண்டியிருந்தது. அப்போது அந்தச் சாதனங்களின் விலையும் மிகமிக அதிகம்.

அப்போது பிளாஸ்டிக் கிரேடுகள் மிகக் குறைந்த அளவே பயன்பாட்டில் இருந்தன - விலை அதிகம் - திருடுவது அதிகம் - இழப்பு அதிகம் என்பதால். இவர்கள் உள்ளே வந்ததும் தரத்தை உயர்த்துவதற்காகச் செய்த பல விஷயங்களில் முதன்மையானது மர கிரேடுகளை வெகுவாகக் குறைத்து (10% க்கும் கீழே), பிளாஸ்டிக் கிரேடுகளை புழக்கத்தில் விட்டது. சந்தைக்கு அவை போன அடுத்த நாளிலேயே காளிமார்க், பொவண்டோ, டொரினோ, மாப்பிள்ளை விநாயகர் பானங்கள் பெப்ஸி பிளாஸ்டிக் கிரேடுகளில் மாற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன. அவர்களது தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கில் பிளாஸ்டிக் கிரேடுகளை எடுத்து வைத்திருந்ததை நானே நேரடியாகப் பார்த்திருக்கிறேன். இதனால் பெப்ஸிக்கு ஏற்பட்ட நஷ்டம் கோடிக்கணக்கில். ஆனால் அவர்கள் இதையெல்லாம் எளிதாகத் தாங்குவார்கள்.

இந்த வியாபாரம் வெளியே இருந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாக வசீகரமாகத் தோன்றும். ஆனால் நாய் பிழைப்பு என்றால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். காலையில் 05:30 மணிக்கு வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பும் விற்பனையாளர்கள் திரும்ப மாலையில் வந்து கணக்கை ஒப்படைத்து மீதமுள்ள சரக்குகளையும் கணக்குப் பார்த்து முடிக்க இரவு 11 மணியைத் தாண்டிவிடும். அந்த உழைப்புக்கு அந்த ஏஜெண்டுகள் 1998-லேயே மாதம் 40000 சம்பாதித்தார்கள். அவர்களால் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத தொகை அது.

மற்ற படி சில்லரை பாட்டில்களை வாங்கி உடைப்பதை பெப்ஸியோ கோக்கோ ஆரம்ப காலத்தில் செய்தன. ஆனால் அந்தப் பாட்டில்களும் கேவலமான நிலையில் இருந்தன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

பிறகு பெப்ஸி பாட்டில்களை கோக்கும் கோக்கை பெப்ஸியும் கடத்தி உடைத்தார்கள். :) இரண்டொரு வழக்குகளுக்குப் பின்பு அவை முடிவுக்கு வந்துவிட்டன. இப்போது நடப்பதில்லை என்று நினைக்கிறேன்.

//இவ்வாறு நிறைய புட்டிகளை உடைத்து விடுவதால் அவர்களால் உடனடியாக சந்தையில் தங்கள் சரக்கை விற்க இயலாது அந்த கால கட்டத்தில் இவர்கள் புகுந்து சந்தையை வசப்படுத்தி விடுவார்கள்.//

Window Display என்றொரு பிரயோகத்தை சந்தையியலில் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதன் ஒரு கூறு இந்த மாதிரியான மூர்க்க நடவடிக்கைகள்.

//மேலும் குளிர்பதன பெட்டி இலவசமாக தருகிறோம் வேறு உள்ளூர் தயாரிப்பு குளிர்பானங்களை விற்காதீர்கள் எனவும் முடக்குவதையும் சொன்னேன்.//

விற்பனையில் 80% பெட்டிக்கடைக்காரர்கள் மூலமாக வருவது. அவர்களிடம் அதிகாரம் செய்ய முடியாது என்பதே உண்மை. எந்தப் பொருளை விற்றால் லாபம் அதிகம் கிடைக்குமோ அந்தப் பொருளைத்தான் பெட்டிக்கடைக் காரர் விற்பார். மேலும் இந்த பானங்கள் இளைஞர்களை அதிகம் கடைப்பக்கம் வரச் செய்தது என்பதையும் அவர்கள் அறிந்திருந்ததால் அவர்கள் இப்பானங்களை விற்கத் தலைப்பட்டனர் என்பதே உண்மை.

ஒன்று தெரியுமா? பெப்ஸி நிறுவன தலைவர் இந்தியாவில் அறிமுக விழாவின் போது பத்திரிகைகளுக்குச் சொன்னது "எங்களுக்கு போட்டி உள்ளூர் குளிர்பானங்கள் அல்ல. இந்தியாவிலிருக்கும் கோடிக்கணக்கான டீ கடைகளே!"

//சிறு முதலீட்டில் இயங்கும் உள்ளூர் தயாரிப்பாளர்களால் COKE/PEPSI போல இலவசமாக தர முடியாதே!//

உண்மைதான். அவர்களுக்கும் இவர்களுக்கும் Target Customers வேறு!

//உள்ளூர் குளிர்பானங்களின் தயாரிப்பு தரம் குறைவு என்பது உண்மை தான் ஆனால் சர்வதேச தரம் எனப்படும் கோக்/பெப்சி போன்றவற்றில் பூச்சி மருந்து அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கிறதே! அதையும் ஒரு சுனிதா நாரயணன் போன்ற தன்னார்வலர்கள் தானே வெளிகாட்டி சர்வதேச தரம் என்று சொல்லிக்கொண்ட போலி திரையை கிழித்தார்!//

இதைப்பற்றிய தகவல்கள் என்னிடம் இப்போது இல்லை. கிடைக்கும்போது இந்நிறுவனங்களில் தரக்கட்டுப்பாட்டுச் சோதனைகளைப் பற்றி விரிவாக எழுத விருப்பம். முயற்சி செய்கிறேன்.


//கோக் போன்றவை செய்யும் முதலீடு எல்லாம் உண்மையான தொழில் வளர்ச்சி அல்ல, அவர்களால் வேலை வாய்ப்பு பெருகினாலும் அதனால் நாட்டில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்பட போவதில்லை. திடீர் என்று கோக் மூடிவிட்டு போனால் அதிக சம்பளம் கொடுத்து பழக்கிவிட்ட ஊழியர்களால் வேறு எந்த வேலையும் செய்ய முடியாது தவிப்பார்கள்! //

இந்நிலை பன்னாட்டு நம்நாட்டு என்று எல்லா நிறுவனங்களுக்கும்
பொருந்தும் வவ்வால்.

இவர்கள் வருவதற்கு முன்பே இழுத்து மூடப்பட்ட நலிவடைந்த தொழில்கள் எத்தனையோ இருக்கின்றன. மேலும் இவர்கள் உள்ளே வருகையில் லாபமோ நட்டமோ ஒரு கை பார்த்துவிடுவது என்ற முனைப்போடுதான் வருகின்றன. அந்தக் காலம் போல இந்தக் காலத்தில் பெப்ஸியும் கோக்கும் அவ்வளவு எளிதாக ஒரு நாட்டிலிருந்து வெளியேற முடியாது. அப்படி ஒரு நிறுவனம் வெளியேறினால் அடுத்த நிறுவனத்திற்கு அது சாதகமான விளம்பரமாகிவிடும். இரண்டும் ஒரே சமயத்தில் வெளியேறுவதற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும். அது - அரசியல்!

//ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றோர் கை நிறைய கோக்கில் சம்பளம் வாங்குவதை விட ஆப்பிள் கம்பியுட்டரில் குறைந்த சம்பளமாக இருந்தாலும் ஆக்க பூர்வமாக சாதிக்கலாம் என வெளியேறியவர் தானே.//

அது பெப்ஸியின் இணைத்தலைவராக இருந்த John Sculley. "Would you like to sell the sugared, colored water for the rest of your life or would you like to change the world?" என்று ஆப்பிள் தலைவர் Steve Jobs, John Sculley-யிடம் கேட்ட ஒரு கேள்வியினால் ஜான் பெப்ஸியிலிருந்து வெளியேறி ஆப்பிளில் சேர்ந்தார். அதற்கப்புறம் நடந்த கதையைக் கேட்டால் நீங்கள் தலையில் கை வைத்துக் கொண்டு விடுவீர்கள்! :) :)

//எனவே குளிர்பானங்கள் தரும் வேலை வாய்ப்பு முன்னேற்றதிற்கு உதவாத ஒன்று!//

அப்படி பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட முடியாது வவ்வால். இந்நிறுவனங்களால் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன என்பதே உண்மை. அப்படிப் பார்த்தால் முன்னேற்றத்திற்கு உதவாத - ஆனால் லாபகரமான எத்தனையோ தொழில்கள் இருக்கின்றன - நிதி நிறுவனங்கள், என்று ஒரு பட்டியலே போடலாம். அது வேண்டாமே.

//மேலும் உள்னாட்டு குளிர் பானங்கள் நமது பணத்தை சுருடி கொண்டு வெளி நாடு செல்லப்போவதில்லை.ஆனால் கோக்,பெப்சி எல்லாம் லாபத்தை எடுத்து போய்விடுவர்கள்! இதனால் நீண்ட காலப் பார்வையில் தீமையே!//

உள்ளே வரும் எந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் Ultimate Objective லாபம் சம்பாதிப்பதே. பெப்ஸி கோக் மட்டுமல்ல. எல்லா வெளிநாட்டு நிறுவனங்களின் ஒரே Agenda இதுவே. அதே போல நம் நாட்டிலிருந்து வெளிநாட்டில் தொழில் பரத்தியிருக்கும் - சரவண பவன் உள்பட - எல்லா நிறுவனங்களின் அடிப்படை நோக்கம் அதுவே. அதைக் குறையாகச் சொல்ல முடியாது. லாபமே வியாபாரத்தின் குறிக்கோள். அதை விட்டால், லாபமற்ற நோக்கில் இயங்கும் செஞ்சிலுவை சங்கங்கள் போன்ற அமைப்புகள்தான் இங்கே இருக்க முடியும். இல்லையா?

//சரியான நிலவரம் தெரியாமல் பேசுகிறீர்கள் என்ரே தோன்றுகிறது ,அது போன்ற தொழிற்சாலைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றதிலேயே வழக்கு போட்டு பல சாய பட்டரைகள்,தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் சுத்திகரிப்பு ஆலைகளும் கட்டப்பட்டுள்ளது.சிலர் அனுமதி இன்றி சட்ட விரோதமாக செயல் படுகிறார்கள் அவையும் வெகு விரைவில் மாட்டும்.//

தகவலுக்கு நன்றி. எனக்கு இன்றைய நிலவரம் தெரியாதுதான். ஏழு வருடங்களாக வெளியிலிருப்பதால்.

//கோக்/பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவங்களே.அவர்களுக்கு ஒரு கடிவாளம் அவசியம் தேவை!//

எல்லா நிறுவனங்களுக்கும் கடிவாளங்கள் பல்வேறு சட்டங்களின் மூலம் போடப்பட்டிருக்கின்றன. கடிவாளத்தைப் "பிடிக்க வேண்டிய" நபர்களைப் பொருத்தே அவற்றின் கட்டுப்பாடு அமைகிறது.

//கோக்/பெப்சி போன்றோர் மிக அதிக அளவில் பயன் படுத்துகிறார்கள்.மீண்டும் அந்த இடத்தில் நிலத்தடி நீர் ஊறுவதற்கு வாய்ப்பே அளிக்காமல் ராட்சத்தனமாக செயல் படுவதையே கண்டிக்கிறார்கள்.//

உண்மை. இதையே நானும் குறிப்பிட்டிருக்கிறேன். கடிவாளத்தை இழுத்துப் பிடிக்க வேண்டியவர்கள் அதைச் செய்ய வேண்டும்.

//இவ்வளவு சொல்கிறீர்கள் நான் கேள்வி பட்டது உண்மையா என சொல்லுங்கள்,பெப்சி/கோக் போன்றவற்றின் கான்சென்ட்ரேட் இன்றும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து இங்கே நீர் கலந்து புட்டிகளில் அடைக்கப்படுவதாக படித்தேன் உண்மையா? அது ஏன் அதனை இங்கேவே தயாரிக்க முன்வரவில்லை அவர்கள்.
//

பெப்ஸி 1987-இல் உள்ளே காலடி வைத்தபோது தனிப்பட்ட நிறுவனமாக வரவில்லை. Pepsi Foods Limited என்ற பொது நிறுவனம் ஏற்படுத்தப்பட்டு Punjab Agro Industries என்ற நம் நாட்டு பொது நிறுவனத்துடன் இணைந்து ஒரு Joint Venture-ஆகத்தான் வந்தது. இன்றும் அப்படியே. அவர்களின் முதன்மையான நோக்கம் பஞ்சாபில் அபரிமிதமாக விளையும் உருளைக்கிழங்கு விவசாயத்தை மேம்படுத்தி அவற்றைச் சந்தைப் படுத்துவதே. எண்ணை கசடு வாடையுடன் கேவலமான பிளாஸ்டிக் பைகளில் எந்தவித தரக்கட்டுப்பாடுமின்றி வந்த உருளைக்கிழங்கு வறுவல்களையே நாம் அதுவரை பார்த்திருக்கிறோம்.

PFL & PAI இணைந்து தயாரித்துச் சந்தைப்படுத்திய அற்புதமான வறுவல்களை கட்டாயம் ருசித்திருப்பீர்கள். உயர்ந்த தரத்தோடு இன்றும் வந்து கொண்டிருக்கின்றன அவை. இந்த இணைந்த செயலாக்கத்தின் முக்கிய நோக்கமே உணவுப் பொருள்கள் தயாரிப்பதை மேம்படுத்துவதே. பட்டியலில் கடைசியாக இருப்பது குளிர்பானங்கள். இந்தச் சுட்டியைப் பார்க்கவும்: http://suppliers.jimtrade.com/98/97245/

இந்த concentrate விஷயத்திற்கு வருவோம். அவர்கள் உள்ளே வந்ததும் பஞ்சாபின் சன்னோ (Channo) கிராமத்தில் ஒரு Concentrate உற்பத்தி தொழிற்சாலையைத் துவக்கிவிட்டார்கள். அந்தத் தொழிற்சாலையிலிருந்துதான் நாட்டின் அனைத்து பெப்ஸி குளிர்பானத் தொழிற்சாலைகளுக்கும் Concentrate சென்று கொண்டிருக்கிறது.

கோககோலாவைப் பொருத்தவரை அமெரிக்கா தவிர வேறு எங்கும் concentrate தயாரிக்கப்படுவதாகத் தெரியவில்லை.

இதெல்லாம் அவர்களது வியாபார ரகசியம். இவற்றை இங்கேதான் தயாரிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. இறக்குமதி செய்யாத நாடே கிடையாது. இறக்குமதி ஏற்றுமதி இரண்டும் எல்லா நாட்டுப் பொருளாதாரத்திற்கும் முதுகெலும்பு! மற்ற எல்லா நாடுகளிலும் concentrate தயாரித்து இந்தியாவில் மட்டும் தயாரிக்காமலிருந்தால் அதை எதிர்க்க வேண்டியதுதான். ஆனால் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்த முடியாது.

//கடைசியாக ஒரு கேள்வி IBM ,MICROSOFT வந்தது என்றீர்கள் ஏன் இதுவரை இங்கே யாரும் பிராசசர், ஹார்ட் டிஸ்க், ராம் என எதுவும் தாயாரிக்க முன்வரவில்லை.//

அப்பாடா. இதிலாவது பெப்ஸி கோக் மட்டும்தான் மட்டம் என்று சொல்லவில்லை. எல்லா அந்நிய நிறுவனங்களையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். :) முதலில் சொன்னமாதிரி ஒரு நாட்டில் தொழிற்சாலையைத் துவக்குவதற்கு ஏராளமான விஷயங்களை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் அவர்களைக் கேள்வி கேட்பது சரியல்ல. இரண்டு நாள்களுக்கு முன்புதான் IBM வந்து 250 கோடி முதலீடு செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இரண்டாவதாக IBM, Apple போன்ற நிறுவனங்களுக்கான உதிரிப் பாகங்களைத் தயாரிப்பதற்கென்றே தனியான நிறுவனங்கள் இருக்கின்றன (Motorola மாதிரி). ஆகையால் நம் நாட்டில் அவற்றைத் தயாரிப்பது குறித்து அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இன்றில்லாவிட்டாலும் நாளை நடக்கலாம். காத்திருந்து பார்ப்போம்.

யம்மாடி. மூச்சு வாங்குது வவ்வால். உங்களுக்கென்ன தலைகீழாக கிடைத்த இடத்தில் தொங்கி விடுவீர்கள். நாங்ளெல்லாம் அப்படியா? :) :) கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிறேன்.

மறுபடியும் சொல்கிறேன். நான் இந்நிறுவனங்களை ஆதரிக்கவோ எதிர்க்கவோ இப்பின்னூட்டங்களை எழுதவில்லை. எனக்குத் தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவே.

நன்றி.

Sundar Padmanaban said...

If this has come twice, please ignore this one.

Thanks
Sundar.

அன்பின் வவ்வால் (அட என்னங்க. இப்படி எழுதறதுக்கே ஒரு மாதிரி இருக்கு. ஒங்க பேரைத்தான் சொல்லுங்களேன். சரி வேணாம். ஸ்டைலா பேட்மேன்னு சொல்லிக்கறேன்!:) )

உங்கள் பின்னூட்டத்திற்கும், கேள்விகளுக்கும் நன்றி. நான் முதலில் குறிப்பிட்டபடி பெப்ஸி கோக் நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்க முயலவில்லை. எனக்குத் தெரிந்த விஷயங்களை முன் வைக்கிறேன். அவ்வளவே. மற்றபடி அவற்றால் எழும் தீமைகளுக்கு என் எதிர்ப்புக் குரலையும் சத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இன்னும் சில விளக்கங்கள்:

//விற்பனைக்கு ஒப்புகொள்ளாத போட்டி நிறுவனங்களின் குளிர்பான புட்டிகளை சில்லரை விற்பனையளர்களிடம் இருந்து மொத்தமாக வாங்கி புட்டிகளை உடைத்து அழித்து விடுவதை. //

இவர்கள் உள்ளே வரும் வரை, ஏற்கனவே இருந்த பார்லே பானங்களும், மற்ற பொவண்டோ வகையறாக்களும் எப்படி அடுக்கப்பட்டு கடைகளில் விற்கப்பட்டன என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். கிரேடு (Crate) என்றழைக்கப்படும் மரத்தால் செய்யப்பட்ட பெட்டிகளில் அடுக்கியிருந்தார்கள். 90% கிரேடுகள் உடைந்த நிலையில் இருந்தன. கையாளும் தொழிலாளர்கள் கைகளைக் கிழித்துக்கொண்டு அனுதினமும் ரத்தம் சிந்தாத நாளே இல்லை. 90% கிரேடுகள் கேரளாவில் இருந்து வாங்கப்பட்டன. அழிக்கப்பட்ட மரங்கள் எத்தனையோ!. அவற்றை கிட்டத்தட்ட எல்லா கடைகளிலும் ரோட்டில் போட்டு வைத்திருப்பார்கள். தூசி தும்பு என்று எல்லாம் படிந்து டோண்டு அவர்கள் சொன்ன கழிவறையைச் சுத்தப்படுத்தும் அமில பாட்டில்கள் போன்றே அதை கையாண்டு கொண்டிருந்தனர். இதனால் தேய்மானமும், சேதாரமும் அதனால் விளைந்த நஷ்டமும் மிக மிக அதிகம்.

மேலும் இந்தப் பானங்களை - ஏன் எந்த உணவுப் பொருளையுமே - சரியான தட்பவெப்ப நிலையில் வைத்திராவிட்டால் அவை விஷமாகிவிடும். கழிவறையை நன்றாகச் சுத்தம் செய்யும். அல்லது ஒரு எலும்பைப் போட்டு வைத்தால் எலும்பு அழிந்துவிடும் - எல்லாம் ஆகும். கடைக்காரர்கள் கைக்காசைப் போட்டு குளிர்பதனப் பெட்டிகளை வாங்க வேண்டியிருந்தது. அப்போது அந்தச் சாதனங்களின் விலையும் மிகமிக அதிகம்.

அப்போது பிளாஸ்டிக் கிரேடுகள் மிகக் குறைந்த அளவே பயன்பாட்டில் இருந்தன - விலை அதிகம் - திருடுவது அதிகம் - இழப்பு அதிகம் என்பதால். இவர்கள் உள்ளே வந்ததும் தரத்தை உயர்த்துவதற்காகச் செய்த பல விஷயங்களில் முதன்மையானது மர கிரேடுகளை வெகுவாகக் குறைத்து (10% க்கும் கீழே), பிளாஸ்டிக் கிரேடுகளை புழக்கத்தில் விட்டது. சந்தைக்கு அவை போன அடுத்த நாளிலேயே காளிமார்க், பொவண்டோ, டொரினோ, மாப்பிள்ளை விநாயகர் பானங்கள் பெப்ஸி பிளாஸ்டிக் கிரேடுகளில் மாற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன. அவர்களது தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கில் பிளாஸ்டிக் கிரேடுகளை எடுத்து வைத்திருந்ததை நானே நேரடியாகப் பார்த்திருக்கிறேன். இதனால் பெப்ஸிக்கு ஏற்பட்ட நஷ்டம் கோடிக்கணக்கில். ஆனால் அவர்கள் இதையெல்லாம் எளிதாகத் தாங்குவார்கள்.

இந்த வியாபாரம் வெளியே இருந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாக வசீகரமாகத் தோன்றும். ஆனால் நாய் பிழைப்பு என்றால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். காலையில் 05:30 மணிக்கு வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பும் விற்பனையாளர்கள் திரும்ப மாலையில் வந்து கணக்கை ஒப்படைத்து மீதமுள்ள சரக்குகளையும் கணக்குப் பார்த்து முடிக்க இரவு 11 மணியைத் தாண்டிவிடும். அந்த உழைப்புக்கு அந்த ஏஜெண்டுகள் 1998-லேயே மாதம் 40000 சம்பாதித்தார்கள். அவர்களால் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத தொகை அது.

மற்ற படி சில்லரை பாட்டில்களை வாங்கி உடைப்பதை பெப்ஸியோ கோக்கோ ஆரம்ப காலத்தில் செய்தன. ஆனால் அந்தப் பாட்டில்களும் கேவலமான நிலையில் இருந்தன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

பிறகு பெப்ஸி பாட்டில்களை கோக்கும் கோக்கை பெப்ஸியும் கடத்தி உடைத்தார்கள். :) இரண்டொரு வழக்குகளுக்குப் பின்பு அவை முடிவுக்கு வந்துவிட்டன. இப்போது நடப்பதில்லை என்று நினைக்கிறேன்.

//இவ்வாறு நிறைய புட்டிகளை உடைத்து விடுவதால் அவர்களால் உடனடியாக சந்தையில் தங்கள் சரக்கை விற்க இயலாது அந்த கால கட்டத்தில் இவர்கள் புகுந்து சந்தையை வசப்படுத்தி விடுவார்கள்.//

Window Display என்றொரு பிரயோகத்தை சந்தையியலில் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதன் ஒரு கூறு இந்த மாதிரியான மூர்க்க நடவடிக்கைகள்.

//மேலும் குளிர்பதன பெட்டி இலவசமாக தருகிறோம் வேறு உள்ளூர் தயாரிப்பு குளிர்பானங்களை விற்காதீர்கள் எனவும் முடக்குவதையும் சொன்னேன்.//

விற்பனையில் 80% பெட்டிக்கடைக்காரர்கள் மூலமாக வருவது. அவர்களிடம் அதிகாரம் செய்ய முடியாது என்பதே உண்மை. எந்தப் பொருளை விற்றால் லாபம் அதிகம் கிடைக்குமோ அந்தப் பொருளைத்தான் பெட்டிக்கடைக் காரர் விற்பார். மேலும் இந்த பானங்கள் இளைஞர்களை அதிகம் கடைப்பக்கம் வரச் செய்தது என்பதையும் அவர்கள் அறிந்திருந்ததால் அவர்கள் இப்பானங்களை விற்கத் தலைப்பட்டனர் என்பதே உண்மை.

ஒன்று தெரியுமா? பெப்ஸி நிறுவன தலைவர் இந்தியாவில் அறிமுக விழாவின் போது பத்திரிகைகளுக்குச் சொன்னது "எங்களுக்கு போட்டி உள்ளூர் குளிர்பானங்கள் அல்ல. இந்தியாவிலிருக்கும் கோடிக்கணக்கான டீ கடைகளே!"

//சிறு முதலீட்டில் இயங்கும் உள்ளூர் தயாரிப்பாளர்களால் COKE/PEPSI போல இலவசமாக தர முடியாதே!//

உண்மைதான். அவர்களுக்கும் இவர்களுக்கும் Target Customers வேறு!

//உள்ளூர் குளிர்பானங்களின் தயாரிப்பு தரம் குறைவு என்பது உண்மை தான் ஆனால் சர்வதேச தரம் எனப்படும் கோக்/பெப்சி போன்றவற்றில் பூச்சி மருந்து அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கிறதே! அதையும் ஒரு சுனிதா நாரயணன் போன்ற தன்னார்வலர்கள் தானே வெளிகாட்டி சர்வதேச தரம் என்று சொல்லிக்கொண்ட போலி திரையை கிழித்தார்!//

இதைப்பற்றிய தகவல்கள் என்னிடம் இப்போது இல்லை. கிடைக்கும்போது இந்நிறுவனங்களில் தரக்கட்டுப்பாட்டுச் சோதனைகளைப் பற்றி விரிவாக எழுத விருப்பம். முயற்சி செய்கிறேன்.


//கோக் போன்றவை செய்யும் முதலீடு எல்லாம் உண்மையான தொழில் வளர்ச்சி அல்ல, அவர்களால் வேலை வாய்ப்பு பெருகினாலும் அதனால் நாட்டில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்பட போவதில்லை. திடீர் என்று கோக் மூடிவிட்டு போனால் அதிக சம்பளம் கொடுத்து பழக்கிவிட்ட ஊழியர்களால் வேறு எந்த வேலையும் செய்ய முடியாது தவிப்பார்கள்! //

இந்நிலை பன்னாட்டு நம்நாட்டு என்று எல்லா நிறுவனங்களுக்கும்
பொருந்தும் வவ்வால்.

இவர்கள் வருவதற்கு முன்பே இழுத்து மூடப்பட்ட நலிவடைந்த தொழில்கள் எத்தனையோ இருக்கின்றன. மேலும் இவர்கள் உள்ளே வருகையில் லாபமோ நட்டமோ ஒரு கை பார்த்துவிடுவது என்ற முனைப்போடுதான் வருகின்றன. அந்தக் காலம் போல இந்தக் காலத்தில் பெப்ஸியும் கோக்கும் அவ்வளவு எளிதாக ஒரு நாட்டிலிருந்து வெளியேற முடியாது. அப்படி ஒரு நிறுவனம் வெளியேறினால் அடுத்த நிறுவனத்திற்கு அது சாதகமான விளம்பரமாகிவிடும். இரண்டும் ஒரே சமயத்தில் வெளியேறுவதற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும். அது - அரசியல்!

//ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றோர் கை நிறைய கோக்கில் சம்பளம் வாங்குவதை விட ஆப்பிள் கம்பியுட்டரில் குறைந்த சம்பளமாக இருந்தாலும் ஆக்க பூர்வமாக சாதிக்கலாம் என வெளியேறியவர் தானே.//

அது பெப்ஸியின் இணைத்தலைவராக இருந்த John Sculley. "Would you like to sell the sugared, colored water for the rest of your life or would you like to change the world?" என்று ஆப்பிள் தலைவர் Steve Jobs, John Sculley-யிடம் கேட்ட ஒரு கேள்வியினால் ஜான் பெப்ஸியிலிருந்து வெளியேறி ஆப்பிளில் சேர்ந்தார். அதற்கப்புறம் நடந்த கதையைக் கேட்டால் நீங்கள் தலையில் கை வைத்துக் கொண்டு விடுவீர்கள்! :) :)

//எனவே குளிர்பானங்கள் தரும் வேலை வாய்ப்பு முன்னேற்றதிற்கு உதவாத ஒன்று!//

அப்படி பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட முடியாது வவ்வால். இந்நிறுவனங்களால் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன என்பதே உண்மை. அப்படிப் பார்த்தால் முன்னேற்றத்திற்கு உதவாத - ஆனால் லாபகரமான எத்தனையோ தொழில்கள் இருக்கின்றன - நிதி நிறுவனங்கள், என்று ஒரு பட்டியலே போடலாம். அது வேண்டாமே.

//மேலும் உள்னாட்டு குளிர் பானங்கள் நமது பணத்தை சுருடி கொண்டு வெளி நாடு செல்லப்போவதில்லை.ஆனால் கோக்,பெப்சி எல்லாம் லாபத்தை எடுத்து போய்விடுவர்கள்! இதனால் நீண்ட காலப் பார்வையில் தீமையே!//

உள்ளே வரும் எந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் Ultimate Objective லாபம் சம்பாதிப்பதே. பெப்ஸி கோக் மட்டுமல்ல. எல்லா வெளிநாட்டு நிறுவனங்களின் ஒரே Agenda இதுவே. அதே போல நம் நாட்டிலிருந்து வெளிநாட்டில் தொழில் பரத்தியிருக்கும் - சரவண பவன் உள்பட - எல்லா நிறுவனங்களின் அடிப்படை நோக்கம் அதுவே. அதைக் குறையாகச் சொல்ல முடியாது. லாபமே வியாபாரத்தின் குறிக்கோள். அதை விட்டால், லாபமற்ற நோக்கில் இயங்கும் செஞ்சிலுவை சங்கங்கள் போன்ற அமைப்புகள்தான் இங்கே இருக்க முடியும். இல்லையா?

//சரியான நிலவரம் தெரியாமல் பேசுகிறீர்கள் என்ரே தோன்றுகிறது ,அது போன்ற தொழிற்சாலைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றதிலேயே வழக்கு போட்டு பல சாய பட்டரைகள்,தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் சுத்திகரிப்பு ஆலைகளும் கட்டப்பட்டுள்ளது.சிலர் அனுமதி இன்றி சட்ட விரோதமாக செயல் படுகிறார்கள் அவையும் வெகு விரைவில் மாட்டும்.//

தகவலுக்கு நன்றி. எனக்கு இன்றைய நிலவரம் தெரியாதுதான். ஏழு வருடங்களாக வெளியிலிருப்பதால்.

//கோக்/பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவங்களே.அவர்களுக்கு ஒரு கடிவாளம் அவசியம் தேவை!//

எல்லா நிறுவனங்களுக்கும் கடிவாளங்கள் பல்வேறு சட்டங்களின் மூலம் போடப்பட்டிருக்கின்றன. கடிவாளத்தைப் "பிடிக்க வேண்டிய" நபர்களைப் பொருத்தே அவற்றின் கட்டுப்பாடு அமைகிறது.

//கோக்/பெப்சி போன்றோர் மிக அதிக அளவில் பயன் படுத்துகிறார்கள்.மீண்டும் அந்த இடத்தில் நிலத்தடி நீர் ஊறுவதற்கு வாய்ப்பே அளிக்காமல் ராட்சத்தனமாக செயல் படுவதையே கண்டிக்கிறார்கள்.//

உண்மை. இதையே நானும் குறிப்பிட்டிருக்கிறேன். கடிவாளத்தை இழுத்துப் பிடிக்க வேண்டியவர்கள் அதைச் செய்ய வேண்டும்.

//இவ்வளவு சொல்கிறீர்கள் நான் கேள்வி பட்டது உண்மையா என சொல்லுங்கள்,பெப்சி/கோக் போன்றவற்றின் கான்சென்ட்ரேட் இன்றும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து இங்கே நீர் கலந்து புட்டிகளில் அடைக்கப்படுவதாக படித்தேன் உண்மையா? அது ஏன் அதனை இங்கேவே தயாரிக்க முன்வரவில்லை அவர்கள்.
//

பெப்ஸி 1987-இல் உள்ளே காலடி வைத்தபோது தனிப்பட்ட நிறுவனமாக வரவில்லை. Pepsi Foods Limited என்ற பொது நிறுவனம் ஏற்படுத்தப்பட்டு Punjab Agro Industries என்ற நம் நாட்டு பொது நிறுவனத்துடன் இணைந்து ஒரு Joint Venture-ஆகத்தான் வந்தது. இன்றும் அப்படியே. அவர்களின் முதன்மையான நோக்கம் பஞ்சாபில் அபரிமிதமாக விளையும் உருளைக்கிழங்கு விவசாயத்தை மேம்படுத்தி அவற்றைச் சந்தைப் படுத்துவதே. எண்ணை கசடு வாடையுடன் கேவலமான பிளாஸ்டிக் பைகளில் எந்தவித தரக்கட்டுப்பாடுமின்றி வந்த உருளைக்கிழங்கு வறுவல்களையே நாம் அதுவரை பார்த்திருக்கிறோம்.

PFL & PAI இணைந்து தயாரித்துச் சந்தைப்படுத்திய அற்புதமான வறுவல்களை கட்டாயம் ருசித்திருப்பீர்கள். உயர்ந்த தரத்தோடு இன்றும் வந்து கொண்டிருக்கின்றன அவை. இந்த இணைந்த செயலாக்கத்தின் முக்கிய நோக்கமே உணவுப் பொருள்கள் தயாரிப்பதை மேம்படுத்துவதே. பட்டியலில் கடைசியாக இருப்பது குளிர்பானங்கள். இந்தச் சுட்டியைப் பார்க்கவும்: http://suppliers.jimtrade.com/98/97245/

இந்த concentrate விஷயத்திற்கு வருவோம். அவர்கள் உள்ளே வந்ததும் பஞ்சாபின் சன்னோ (Channo) கிராமத்தில் ஒரு Concentrate உற்பத்தி தொழிற்சாலையைத் துவக்கிவிட்டார்கள். அந்தத் தொழிற்சாலையிலிருந்துதான் நாட்டின் அனைத்து பெப்ஸி குளிர்பானத் தொழிற்சாலைகளுக்கும் Concentrate சென்று கொண்டிருக்கிறது.

கோககோலாவைப் பொருத்தவரை அமெரிக்கா தவிர வேறு எங்கும் concentrate தயாரிக்கப்படுவதாகத் தெரியவில்லை.

இதெல்லாம் அவர்களது வியாபார ரகசியம். இவற்றை இங்கேதான் தயாரிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. இறக்குமதி செய்யாத நாடே கிடையாது. இறக்குமதி ஏற்றுமதி இரண்டும் எல்லா நாட்டுப் பொருளாதாரத்திற்கும் முதுகெலும்பு! மற்ற எல்லா நாடுகளிலும் concentrate தயாரித்து இந்தியாவில் மட்டும் தயாரிக்காமலிருந்தால் அதை எதிர்க்க வேண்டியதுதான். ஆனால் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்த முடியாது.

//கடைசியாக ஒரு கேள்வி IBM ,MICROSOFT வந்தது என்றீர்கள் ஏன் இதுவரை இங்கே யாரும் பிராசசர், ஹார்ட் டிஸ்க், ராம் என எதுவும் தாயாரிக்க முன்வரவில்லை.//

அப்பாடா. இதிலாவது பெப்ஸி கோக் மட்டும்தான் மட்டம் என்று சொல்லவில்லை. எல்லா அந்நிய நிறுவனங்களையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். :) முதலில் சொன்னமாதிரி ஒரு நாட்டில் தொழிற்சாலையைத் துவக்குவதற்கு ஏராளமான விஷயங்களை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் அவர்களைக் கேள்வி கேட்பது சரியல்ல. இரண்டு நாள்களுக்கு முன்புதான் IBM வந்து 250 கோடி முதலீடு செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இரண்டாவதாக IBM, Apple போன்ற நிறுவனங்களுக்கான உதிரிப் பாகங்களைத் தயாரிப்பதற்கென்றே தனியான நிறுவனங்கள் இருக்கின்றன (Motorola மாதிரி). ஆகையால் நம் நாட்டில் அவற்றைத் தயாரிப்பது குறித்து அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இன்றில்லாவிட்டாலும் நாளை நடக்கலாம். காத்திருந்து பார்ப்போம்.

யம்மாடி. மூச்சு வாங்குது வவ்வால். உங்களுக்கென்ன தலைகீழாக கிடைத்த இடத்தில் தொங்கி விடுவீர்கள். நாங்ளெல்லாம் அப்படியா? :) :) கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிறேன்.

மறுபடியும் சொல்கிறேன். நான் இந்நிறுவனங்களை ஆதரிக்கவோ எதிர்க்கவோ இப்பின்னூட்டங்களை எழுதவில்லை. எனக்குத் தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவே.

நன்றி.

Sundar Padmanaban said...

//கூவம் என்பது நதியே முன்னொரு காலத்தில் பின்னர் பல ஆண்டுகலாக நகர கழிவுகள் கலந்து மாசடைந்து விட்டது //

யாராவது அதிரடி நடவடிக்கை எடுத்து ஆறுகளைக் காப்பார்களா என்று நீண்ட காலமாக ஏங்கி்க் கொண்டிருக்கிறேன்.

வைகை-கை வை என்று ஏராளமாக கை வைத்து இருபுறமும் ஆக்கிரமித்து இப்போது 'வ' அளவுக்குத்தான் மிச்சமிருக்கிறது. இதே போல இன்னும் எத்தனையோ நீராதாரங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் இருக்கின்றன. அவற்றை விடுவித்து மூச்சு விடச் செய்தால் நாடு நன்றாக இருக்கும். நனவாக வேண்டும் என்று விரும்பும் பல கனவுகளில் இதுவும் ஒன்று.

பதிவு திசை திரும்புகிறது. மன்னிக்கவும் செல்வன்.

Unknown said...

பதிவை விட கலக்கலான பின்னூட்டங்கள்.நன்றி சுந்தர்.

நீங்கள் குறிப்பீட்டவை மிக சரியான தகவல்கள்.சிலவற்றை மட்டும் நான் செய்கிறேன்.

பெப்சி இந்திய பொருட்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்கிறது.காரனம் வெளியே எடுத்து செல்லும் லாபப்பணத்தை பொருளாக எடுத்து செல்வதாக அப்போதைய அரசுடன் ஒப்பந்தம் செய்திருந்தது.ஆக பெப்சி எத்தனை லாபம் சம்பாதித்தாலும் பணமாக எடுத்து செல்ல முடியாது.பொருளாகவே எடுத்து செல்ல முடியும்.

கடைக்காரர்களுக்கு பெப்சி இலவச பிரிட்ஜ்,கிரேடுக்கு 100 ரூபாய் தொகை,கடைக்கு பெயிண்ட் அடித்தல் என பல நல்லதை செய்திருக்கிறது.ஒரு பெப்சி MRP 7 ரூபாய்.கடைக்காரர் அதை விற்பது 10 ரூபாய்க்கு.MRP விற்றாலே லாபம் கிடைக்கும் எனும்போது கடைக்காரருக்கு 10 ரூபாய்க்கு விற்றால் சூப்பர் லாபம் கிடைக்கும்.

மற்றபடி பெப்சி வேனில் விற்பனை செய்வது சுந்தர் சொல்வது போல் நாய் பிழைப்புதான்.பெரிய கடைக்காரர்கள் இவர்களை மதிக்கவே மாட்டார்கள்.நாள் முழுக்க வேனில் சுற்றிக்கொண்டே இருக்கவேண்டும்.

பெப்சி Tacobell போன்ற உணவு ரெஸ்டாரண்ட் வணிகத்திலும் கால் பதித்திருக்கிறது.தரமான மெக்ஸிகன் உணவு ஓரளவு குறைந்த விலையில் கிடைக்கும்(இந்தியாவில் கூட வந்தால் நல்லது என நினைக்கிரேன். compared to mcdonalds இது ஆயிரம் மடங்கு பரவாயில்லை)

Unknown said...

//யாராவது அதிரடி நடவடிக்கை எடுத்து ஆறுகளைக் காப்பார்களா என்று நீண்ட காலமாக ஏங்கி்க் கொண்டிருக்கிறேன்.

வைகை-கை வை என்று ஏராளமாக கை வைத்து இருபுறமும் ஆக்கிரமித்து இப்போது 'வ' அளவுக்குத்தான் மிச்சமிருக்கிறது. இதே போல இன்னும் எத்தனையோ நீராதாரங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் இருக்கின்றன. அவற்றை விடுவித்து மூச்சு விடச் செய்தால் நாடு நன்றாக இருக்கும். நனவாக வேண்டும் என்று விரும்பும் பல கனவுகளில் இதுவும் ஒன்று. //

இது மிகவும் அவசியமான பிரச்சனை சுந்தர்.சென்னையின் ஏரிகளை தூர் வாரி நீரை தேக்கினாலே தெலுங்கு கங்கா,வீர்ராணம் எல்லாம் தேவையில்லை என்கிறார்கள்.சென்னையின் பல ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.தொண்டை நாடு ஏரியுடைத்து என்பார்கள்.அவை அனைத்தும் காணாமல் போனது எப்படி?ல்ண்டன் மாநகரில் தேம்ஸை சுத்தமாக அவர்களால் வைத்துகொள்ள முடியும்போது,பிரான்ஸில் சீன் நதியை சுத்தமாக வைக்குத்துக்கொள்ளும்போது கூவத்தை/அடையாறை நாம் ஏன் கெடுத்து வைத்திருக்கிறோம்?

கூவத்தில் சுத்தப்படுத்தி படகு விடும் திட்டம் முன்பு கலைஞர் ஆட்சியில் தீட்டப்பட்டது.என்ன ஆச்சோ தெரியலை

வவ்வால் said...

சுந்தர் அவர்களே,

வவ்வால் என்பது ஒன்றும் அவ்வளவு மோசமாக இல்லையே ,பேட் மேன் என்று வேண்டுமானாலும் அழைக்கலாம் ஆட்சேபனை ஏதும் இல்லை :-))

தங்களிடம் இருந்து இதை விட மேலான ஒரு பதிலை எதிர்பார்க்க முடியாது(10 ஆண்டுகள் கோக்/பெப்சி அனுபவம்) ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி போல நியாயப்படுத்துதல் தான் தெரிகிறது!

//90% கிரேடுகள் கேரளாவில் இருந்து வாங்கப்பட்டன. அழிக்கப்பட்ட மரங்கள் எத்தனையோ!. அவற்றை கிட்டத்தட்ட எல்லா கடைகளிலும் ரோட்டில் போட்டு வைத்திருப்பார்கள். தூசி தும்பு என்று எல்லாம் படிந்து //

மரகிரேடுகள் பயன்படுத்தியத்தியதால்
வன வளம் அழிக்கப்பட்டது என சொல்கிறீர்கள் சரி நாம் எல்லாம் வீடுகட்ட மரங்களே பயன் படுத்த வில்லையா , இல்லை மர பொருட்கள் தான் உபயோகிக்கவில்லையா? நாம் எழுதும் ஒவ்வொரு காகித்ததிற்கும் எத்தனை மரங்கள் வெட்டப்படுகிறது.எனவே காகிதமே பயன் படுத்தாமல் இருக்கிறோமா? கிரேடுகள் எல்லாம் கள்ளி மரம் எனும் மட்டமான மரத்தால் ஆனது ,அவ்வகை மரங்கள் எளிதில் வளர்த்து வெட்டப்படுகிறது.எனவே வன வளம் பாதிக்கப்பட்டது என்பது எல்லாம் பம்மாத்து! அது ஒரு குறையே அல்ல!

தூசு தும்பு என்கிறீர்கள் பெப்சி பாட்டில் உள்ளே ஆணுரை கிடந்து நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டு 10000 ரூபாய் இழப்பீடு தந்துள்ளது பெப்சி,இன்னொரு சம்பவத்தில் பல்லி கிடந்து கோக் இழப்பீடு தந்துள்ளது ,ஒருவர் அது குறித்து வலைப்பதிவு கூட சிறிது காலத்திற்கு முன் போட்டுள்ளார். சர்வதேச தரம் இப்படி பல்லிளித்த சம்பவங்கள் ஏராளம்!

//மற்ற படி சில்லரை பாட்டில்களை வாங்கி உடைப்பதை பெப்ஸியோ கோக்கோ ஆரம்ப காலத்தில் செய்தன. ஆனால் அந்தப் பாட்டில்களும் கேவலமான நிலையில் இருந்தன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்//

பாட்டில்கள் உடைக்கப்பட்டன என ஒத்துகொள்கிறீர்கள் ஆனால் அதற்கு சொன்ன காரணம் இருக்கிறதே ஜீரணிக்க முடியாத ஒரு கற்பனை, உன் வேட்டி அழுக்காய் இருந்தது பார்க்க சகிக்கவில்லை எனவே உருவினேன் என ஒருவர் சொல்வது போல் உள்ளது ,அந்த பாட்டில்கள் மோசமாய் இருந்தது வாங்கி உடைத்தோம் என சொல்வது!

மூர்க்க நடவடிக்கைகளை வேறு சரி என நியாயப்படுத்துகிறீர்கள் என்னத்த சொல்வேனுங்க :-))

//அப்படி பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட முடியாது வவ்வால். இந்நிறுவனங்களால் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்ட ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன என்பதே உண்மை. //

கஞ்சா விற்பதாலும் பல குடும்பங்கள் தங்கள் வாழ்கை தரத்தை உயர்த்திக்கொண்டுள்ளன ,எத்தனையோ பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது, யாரும் கனவிலும் நினைக்காத பெரும் தொகை ஊதியமாக கிடைக்கும் என்று சொல்லாமல் விட்டு விட்டீர்களே :-))

//முதன்மையான நோக்கம் பஞ்சாபில் அபரிமிதமாக விளையும் உருளைக்கிழங்கு விவசாயத்தை மேம்படுத்தி அவற்றைச் சந்தைப் படுத்துவதே. எண்ணை கசடு வாடையுடன் கேவலமான பிளாஸ்டிக் பைகளில் எந்தவித தரக்கட்டுப்பாடுமின்றி வந்த உருளைக்கிழங்கு வறுவல்களையே நாம் அதுவரை பார்த்திருக்கிறோம். //

பெப்சி உருளை கிழங்கு வறுவல் வருவதற்கு முன்னர் தரமான உருளை கிழங்கு வறுவல் என்றால் என்னவென்றே இந்தியன் பார்த்து இருக்க மாட்டான் என சொல்வது வரட்டுத்தனமான கற்பனையே!

பெப்சி குளிர்பானகளுக்கான முதலீட்டை ஒப்பிடுகையில் சிப்ஸ் என்பது சிறு முதலீடு தான் ஆனால் அது தான் முதன்மையானது என பிடிவாதமாக சொன்னால் சொல்வதற்கு ஏதும் இல்லை. பெப்சிகெல்லாம் முன்னரே அருமையான உருளை கிழங்கு வறுவல் ஒன்று உண்டு. "UNCLE CHIPS" என்று பெயர் தயாரிப்பாளர் யார் என்று கேட்டால் ஆச்சர்ய படுவீர்கள் திகார் சிறைக்கைதிகள் சிறையில் இருந்தே தயாரித்து விற்பனை செய்தனர். இதற்கு முழு காரணாம் கிரன் பேடி ips அவர்கள், அந்த திகார் விட்டு அவர்கள் வெளியேரியதும் அது முடக்கபட்டது.

பெப்சி தனக்கு தேவையான உருளைகிழங்கை சந்தையில் வாங்காமல் விவசாயிகளுடன் ஒப்பந்த விவசாயம் செய்து வாங்குகிறது.இதில் பாராட்டப்பட்ட வேண்டிய ஒன்று இந்த ஒப்பந்த விவசாயம் இந்தியாவில் சரிவர வெற்றி அடையாத முறை அதனை பெரும் அளவில் பரப்பி வெற்றி அடைய செய்துள்ளது .

ஆனால் இதிலும் அவர்களின் பெரும் முதலாளித்துவ போக்கில் தான் செயல் படுகிறார்கள் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள உருளைகிழங்குகள் மட்டுமே வாங்கப்படுகிறது மீதி புறக்கணிக்கபடுகிறது.அவற்றை வெளி மார்கெட்டில் குறைந்த விலைக்கு தான் விற்க வேண்டும், இதனால் என்ன நஷ்டம் என்கிறீர்களா பெப்சி கூறும் தரத்தில் தான் செலவு செய்து உருளை சாகுபடி செய்ய வேண்டும் எனவே வழக்கம் விட கூடுதல் முதலீடு செய்ய வேண்டும்.

இப்படி விளைவித்த உருளை கிழங்கை வெளியில் குறைந்த விலையில் விற்றால் நஷ்டம் தான்.ஒரு விவசாயிக்கு நிறைய அளவில் சிறிய உருளை விளைந்து விட்டால் எல்லாம் நஷ்டம் தான். அப்படி இருந்தும் விவசாயிகள் ஒத்துகொள்வதற்கு காரணம் பெப்ப்சி தரும் முன்பணம் தான்.மீண்டும் வாங்கும் போது அதனை பிடித்து கொள்வார்கள் ஆனால் விவசாயம் செய்ய முதலீடு எளிதாக கிடைக்கிறது என்றே ஏழை விவசாயிகள் இதற்கு ஒத்துக்கொள்வது!

//இரண்டாவதாக IBM, APPLE போன்ற நிறுவனங்களுக்கான உதிரிப் பாகங்களைத் தயாரிப்பதற்கென்றே தனியான நிறுவனங்கள் இருக்கின்றன (MOTOROLA மாதிரி). ஆகையால் நம் நாட்டில் அவற்றைத் தயாரிப்பது குறித்து அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்//

சிஙபூர்,கொரியா ,தைவான் போன்ற நாடுகளில் தயாரிக்கிறார்கள் இவர்கள் என சுட்டியுள்ளேன் பார்க்கவில்லையா? நம் நாட்டில் அதனை தயாரிக்கமல் தள்ளி போட காரணம் முழு தன்னிறைவு அடைந்து விடுவோம் ,பொருளாதாரம் மிகவும் வளர்ந்து விடும் எனவே காலத்தின் கட்டாயாமாக இங்க்கே தொழில் துவங்க அவர்கள் வந்தாலும் இந்தியாவின் வளர்ச்சி ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள்.

வவ்வால் said...

செல்வன் அவர்களே,

//கடைக்காரர்களுக்கு பெப்சி இலவச பிரிட்ஜ்,கிரேடுக்கு 100 ரூபாய் தொகை,கடைக்கு பெயிண்ட் அடித்தல் என பல நல்லதை செய்திருக்கிறது.ஒரு பெப்சி Mrp 7 ரூபாய்.கடைக்காரர் அதை விற்பது 10 ரூபாய்க்கு.Mrp விற்றாலே லாபம் கிடைக்கும் எனும்போது கடைக்காரருக்கு 10 ரூபாய்க்கு விற்றால் சூப்பர் லாபம் கிடைக்கும்.//

இதில் சில உண்மைக்கு முரண் ஆனவை,கிரேட் ஒன்றுக்கு ரூபாய் 250 கடைக்காரர் முன்பணம் கட்ட வேண்டும்,100 ரூபாய் தர மாட்டார்கள் கடைக்காரர்களுக்கு.

ரூபாய் 7 என்பது அடக்க விலை அது mrp அல்ல ,10 ரூபாய் என்பது தான் mrp.

இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த குளிர்பானத்தின் உண்மையான மதிப்பு 50 காசுகள் என்பதே.பிரபலங்களை வைத்து விளம்பரம் செய்வது ,
போக்குவரத்து ,இன்ன பிற செலவுகள் எல்லாம் சேர்த்தே அத்தனை வருகிறது.

Unknown said...

அன்பின் வவ்வால்

சுந்தருக்கு நீங்கள் எழுப்பிய சிலகேள்விகள் தவிர்த்து சிலவற்றுக்கு பதிலளிக்க முயல்கிறேன்.

//அப்படி இருந்தும் விவசாயிகள் ஒத்துகொள்வதற்கு காரணம் பெப்ப்சி தரும் முன்பணம் தான்.மீண்டும் வாங்கும் போது அதனை பிடித்து கொள்வார்கள் ஆனால் விவசாயம் செய்ய முதலீடு எளிதாக கிடைக்கிறது என்றே ஏழை விவசாயிகள் இதற்கு ஒத்துக்கொள்வது!//

ஆக விவசாயிகள் சுய விருப்பத்தின் பேரில் தான் பெப்சியுடன் ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர்.விஷயம் அங்கேயே முடிந்துவிடுகிறது.

//ஆனால் இதிலும் அவர்களின் பெரும் முதலாளித்துவ போக்கில் தான் செயல் படுகிறார்கள் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள உருளைகிழங்குகள் மட்டுமே வாங்கப்படுகிறது மீதி புறக்கணிக்கபடுகிறது.//

அவர்களுக்கு எந்த தரம் தேவையோ அந்த தரத்தில் தானே வாங்கமுடியும்?மீதியை சந்தையில் விற்று காசாக்கிக்கொள்லலாமே?கூடுதல் முதலீடு என்றாலும் தரம் அதிகமுள்ள உருளைக்கு வெளிமார்க்கடடில் நல்ல விலை கிடைக்கும்.அப்படி கிடைக்கவில்லை என்றால் விவசாயி அந்த ஒப்பந்தத்தை கேன்சல் செய்துவிடலாமே?

//நம் நாட்டில் அதனை தயாரிக்கமல் தள்ளி போட காரணம் முழு தன்னிறைவு அடைந்து விடுவோம் ,பொருளாதாரம் மிகவும் வளர்ந்து விடும் எனவே காலத்தின் கட்டாயாமாக இங்க்கே தொழில் துவங்க அவர்கள் வந்தாலும் இந்தியாவின் வளர்ச்சி ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள்.//

இதை நம்ப முடியவில்லை.இது உங்கள் யூகம் மட்டுமே.தைவான் செமிகண்டக்டர் துறையில் புகழ் பெற்ற நாடு என்பதால் அங்கு தயாரிக்கிறார்கள் என இருக்கலாம்.இந்தியா வளரகூடாது என சதி செய்கிறார்கள் என்றால் நம்ப முடியவில்லை.

Unknown said...

//இதில் சில உண்மைக்கு முரண் ஆனவை,கிரேட் ஒன்றுக்கு ரூபாய் 250 கடைக்காரர் முன்பணம் கட்ட வேண்டும்,100 ரூபாய் தர மாட்டார்கள் கடைக்காரர்களுக்கு.

ரூபாய் 7 என்பது அடக்க விலை அது ம்ர்ப் அல்ல ,10 ரூபாய் என்பது தான் ம்ர்ப்.//

போட்டி காரணமாக கடைக்காரருக்கு ஊக்கத்தொகையாக 100 ரூபாய் தருவதாக படித்தேன்.அதையே குறிப்பிட்டேன்.நான் இந்தியாவை விட்டு வந்தபோது பாட்டிலில் MRP 7/- என எழுதியிருந்தது.கடைகளில் 10 ரூபாய்க்கு விற்றனர்

//இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த குளிர்பானத்தின் உண்மையான மதிப்பு 50 காசுகள் என்பதே.பிரபலங்களை வைத்து விளம்பரம் செய்வது ,
போக்குவரத்து ,இன்ன பிற செலவுகள் எல்லாம் சேர்த்தே அத்தனை வருகிறது.//

போக்குவரத்தும் விளம்பர செலவும் சேர்த்துதான் பொருளின் உற்பத்தி மதிப்பு(final cost of production) கணக்கிடப்படும்.Factory cost என்பதை final cost of production உடன் சேர்த்து குழப்பிக்கொள்ளக்கூடாது

வவ்வால் said...

செல்வன்,

//ஆக விவசாயிகள் சுய விருப்பத்தின் பேரில் தான் பெப்சியுடன் ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர்.விஷயம் அங்கேயே முடிந்துவிடுகிறது//

கந்து வட்டி வாங்கினால் கஷ்டம் என தெரிந்தே விரும்பி கடன் வாங்குகிறார்கள் எனவே கந்து வட்டிக்கொடுமை என சொல்ல கூடாது அப்படி தானே செல்வன் :-))

ஆந்திராவில் பருத்தி போட்டு நஷ்டம் தாளாமல் ஒரே ஆண்டில் 1000 பேருக்கு மேல் தற்கொலை செய்து கொண்டார்கள் தங்கள் கூற்றுபடி நஷ்டம் வருகிறதே பின்னர் ஏன் அடுத்த ஆண்டும் பருத்தி விவசாயம் செய்கிறார்கள் மற்றவர்கள் என கேட்பீர்கள்,அரசும் இது விவசாயிகளின் அறியாமை என கண்டுக்கொள்ள கூடாது ,நல்ல வேளை நீங்கள் அரசின் எந்த ஒரு முக்கியமான பதவியிலும் இல்லை மக்கல் பிழைத்தார்கள் :-))

விவசாயிகள் வேறு வழி இல்லாமல் தவிப்பதை எக்ஸ்பிளாய்ட் செய்வது சரி என சொல்லும் உங்களின் புரிதல் குறித்து நான் கருத்து ஏதும் கூற விரும்பவில்லை!

ஒப்பந்த விவசாயத்தினால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு,

நன்மை -,விவசாயிக்கு பயிரிட முன்பணம் கிடைப்பது , விற்பதற்காக அறுவடைக்கு பின் அலைய வேண்டியதில்லை.

தீமை- பயிரிட துவங்கும் போதே அப்போதைய சந்தை விலையை வைத்து ,அதிலும் குறைந்த பட்ச விலையே கணக்கில் கொள்ளப்படும்,அதன் படி விளைப்பொருளுக்கு விலை நிர்ணயிக்கபட்டுவிடும்! எதிர்காலத்தில் விலை ஏறினாலும் அதனால் விவசாயிக்கு பயன் இல்லை ,ஆனால் விலை குறைந்து விட்டால் ஒப்பந்தாரர் விலையை குறைப்பார்,எனவே எப்படி பார்த்தாலும் விவசாயி அங்கே எதுவும் செய்ய முடியாது.

அதே போன்று இவர்கள் ஒரு தரம் என நிர்ணயிப்பார்கள் அதற்கு ஒத்து வரவில்லை என நிறைய தட்டிக்கழிக்கப்படும் ,இதில் எப்படி நஷ்டம் வருகிறது எனில் ஒப்பந்ததாரரே உரம் ,விதை போன்றவை வழங்குவார் அவை எல்லாம் வழக்கதை விட விலை அதிகமானவை ,எனவே பயிரிடும் செலவு அதிகம் ஆகும் ,மிண்டும் ஒப்பந்ததாரர் வாங்கினால் தான் செலவை ஈடு கட்டமுடியும் , புறக்கணிக்கபட்ட விளைப்பொருளை வெளியில் விற்றால் விவசாயிக்கு நஷ்டமே!

//நான் இந்தியாவை விட்டு வந்தபோது பாட்டிலில் Mrp 7/- என எழுதியிருந்தது.கடைகளில் 10 ரூபாய்க்கு விற்றனர்//

7 ரூபாய் என்பது MRP ஆக இருந்து 10 ரூபாய்க்கு விற்கவே முடியாது MRP தான் வாடிகையாளர் செலுத்தும் அதிக பட்ச சில்லரை விலை ,அதற்கு மேல் கேட்டால் வழக்கு தொடுக்கலாம். 7 ரூபாய் அடக்க விலையாக இருக்க கூடும் என்று சொன்ன பிரகும் MRP 7 தான் 10 கு விற்கிறார்கள் என்கிறீர்கள் விடப்பிடியாக நீங்கள் சந்தையியலில் ஆய்வு மாணவர்!!??

//போக்குவரத்தும் விளம்பர செலவும் சேர்த்துதான் பொருளின் உற்பத்தி மதிப்பு(final cost of production) கணக்கிடப்படும்.Factory cost என்பதை final cost of production உடன் சேர்த்து குழப்பிக்கொள்ளக்கூடாது//

50 காசுகள் மட்டும் உள்ளடக்கமுள்ள ஒரு பொருளை 10 ரூபாய்க்கு விற்கிறார்களே அதில் உள்ள
உற்பத்தி செலவுக்கும் நுகர்வோர் வாங்கும் விலைக்கும் உள்ள மிகப்பெரும் வித்தியாசத்தை சுட்டிக் காட்டவே சொன்னேன் இதில் குழப்பிக்கொள்ளுதல் இல்லை. இது அநியாயமான விலை நிர்ணயம் (un fair pricing)என்பதை சுட்டி காட்ட சொன்னது.

Unknown said...

வணக்கம் வவ்வால்,

கந்து வட்டி வாங்கினால் கஷ்டம் என தெரிந்தே விரும்பி கடன் வாங்குகிறார்கள் எனவே கந்து வட்டிக்கொடுமை என சொல்ல கூடாது அப்படி தானே செல்வன் :-))////

கந்துவட்டியும் futures கான்ட்ராக்டும் ஒன்றல்ல வவ்வால்.விவசாயிகள் கை வணிகத்தில் தாழ்ந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.ஆனால் எந்த தொழிலிலும் வாங்குவோர் ராஜ்ஜியம் தான் நடக்கிறது.customer is the king.கஸ்டமர் வைத்தது தான் சட்டம்.இந்த துறை மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும் சொல்லுங்கள்?

///ஆந்திராவில் பருத்தி போட்டு நஷ்டம் தாளாமல் ஒரே ஆண்டில் 1000 பேருக்கு மேல் தற்கொலை செய்து கொண்டார்கள் தங்கள் கூற்றுபடி நஷ்டம் வருகிறதே பின்னர் ஏன் அடுத்த ஆண்டும் பருத்தி விவசாயம் செய்கிறார்கள் மற்றவர்கள் என கேட்பீர்கள்,அரசும் இது விவசாயிகளின் அறியாமை என கண்டுக்கொள்ள கூடாது ,நல்ல வேளை நீங்கள் அரசின் எந்த ஒரு முக்கியமான பதவியிலும் இல்லை மக்கல் பிழைத்தார்கள் :-))////////

பருத்தி விளைவித்து நஷ்டம் வந்தால் ஏன் மறுபடி பருத்தி விளைவிக்கிறீர்கள் என கண்டிப்பாக கேட்பேன் வவ்வால்.நஷ்டம் வரும் என்பது தெரிந்தும் ஏன் அந்த தொழிலை செய்கிறீர்கள்?பருத்தி விலை அதலபாதாளத்தில் இருந்தால் மீண்டும்,மீண்டும் ஏன் அதை விளைவித்து நஷ்டப்படுகிறீர்கள்?

உங்கள் வாதம் எப்படி இருக்கிறது என்றால் பருத்தி விலை அதலபாதாளத்தில் இருப்பதால் வாங்குவோர் மனிதாபிமான அடிப்படையில் அதிக விலை தந்து வாங்க வேண்டும் என்கிறீர்கள்.உலகத்தில் யாரும் அப்படி செய்ய மாட்டார்கள்.

///விவசாயிகள் வேறு வழி இல்லாமல் தவிப்பதை எக்ஸ்பிளாய்ட் செய்வது சரி என சொல்லும் உங்களின் புரிதல் குறித்து நான் கருத்து ஏதும் கூற விரும்பவில்லை!///

நீங்கள் கடைக்கு போய் பொருள் வாங்கும்போது உருளைகிழங்கு கிலோ 2 ரூபாய்க்கு விற்கிறது என வைத்துக்கொள்ளுங்கள்.நீங்கள் "விவசாயிகள் பாவம்.உருளைகிழங்கு கிலோ 2 ரூபாய்க்கு விற்றால் நஷ்டப்படுவார்கள்.நான் கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் கொடுக்கிறேன்" என என்றாவது சொல்லுவீர்களா?

"சொல்லுவேன்" என நீங்கள் சொல்லலாம்.உலகத்தில் 99.99% மக்கள் அப்படி சொல்லமாட்டார்கள்.அதுதான் மனித இயல்பு.

///
7 ரூபாய் என்பது MRP ஆக இருந்து 10 ரூபாய்க்கு விற்கவே முடியாது MRP தான் வாடிகையாளர் செலுத்தும் அதிக பட்ச சில்லரை விலை ,அதற்கு மேல் கேட்டால் வழக்கு தொடுக்கலாம். 7 ரூபாய் அடக்க விலையாக இருக்க கூடும் என்று சொன்ன பிரகும் MRP 7 தான் 10 கு விற்கிறார்கள் என்கிறீர்கள் விடப்பிடியாக நீங்கள் சந்தையியலில் ஆய்வு மாணவர்!!??////

MRP என்றால் maximum price என்று தெரியும் வவ்வால்.MRPக்கு அதிகமாக விற்றால் கன்சுயூமர் கோர்ர்ட்டில் வழக்கு தொடராலாம் என்பதும் தெரியும்.ஆனால் நான் இந்தியாவில் இருந்தபோது யாரும் MRP கண்டுகொள்ளவே இல்லை.கடைகளில் 10 ரூபாய்க்கு பெப்சியும்,தியேட்டர்களில் 15 ரூபாய்க்கும், பெரிய ஓட்டல்களில் 20 ரூபாய்க்கும் விற்றார்கள்(when MRP was 7rs).இப்போதும் இந்தியாவில் MRP என்ன கடைகளில் விற்கும் விலை என்ன என்று யாராவ்து சொன்னால் தேவலை.

////
50 காசுகள் மட்டும் உள்ளடக்கமுள்ள ஒரு பொருளை 10 ரூபாய்க்கு விற்கிறார்களே அதில் உள்ள
உற்பத்தி செலவுக்கும் நுகர்வோர் வாங்கும் விலைக்கும் உள்ள மிகப்பெரும் வித்தியாசத்தை சுட்டிக் காட்டவே சொன்னேன் இதில் குழப்பிக்கொள்ளுதல் இல்லை. இது அநியாயமான விலை நிர்ணயம் (un fair pricing)என்பதை சுட்டி காட்ட சொன்னது. /////

ஒரு கற்பனை கணக்கு சொல்கிறேன்

per bottle coke/pepsi

cost of production = 50 paise
bottling cost = 1 rs
transportation cost = 1 rs
bottlers commission = 1 rs
advertising expense = 1 rs
wholesalers commisiion=1 rs
retailers commision = 1 rs
over heads,storage expenses = 1 rs

total cost = 7.50 rs

selling price to retailer = 9 rs

profit per bottle to coke = 1.50

இதில் நீங்கள் பாட்டிலில் உள்ள திரவத்தின் விலையை மட்டும் கணக்கெடுத்து உற்பத்தி விலை என்கிறீர்கள்.(that is just cost of manufacturing i.e factory cost)ஆனால் மற்ற செலவுகளையும் அதில் சேர்க்க வேண்டும்.வெறும் கலர் தண்ணீரை யார் வாங்குவார்கள்?விளம்பரம் செய்து,ஏகப்பட்ட செலவு செய்தால் தானே மக்கள் வாங்குவார்கள்?விளம்பர காசு பத்திரிக்கை,டீவி என போய் மக்களுக்கு நல்லது தானே நடக்கிறது?விளம்பரம் இல்லாமல் தினமணி,தினமலர்,சன்டிவி நடத்துவது எப்படி?

வவ்வால் said...

செல்வன்,

நான் சொல்லவந்ததை சரியாக உள்வாங்கவில்லை என நினைக்கிறேன், எதிர்காலத்தில் வாங்கபோவதை இன்றைய விலைக்கு கட்டாயப்படுத்தி ஒப்பந்தம் போடுவோர் ,அப்போது விலை குறைந்தால மட்டும் குறைக்கிறார்களே , விலை ஏற்றம் ஏற்பட்டால் கூடுதல் தொகை தராமல் ஒப்பந்தபடி விற்க வேண்டும் எனக்கட்டாயப்படுத்துகிறார்களே என்பதை.இந்த உன்fஇஅர் ப்ரcடிcஎ தெரியவில்லையா உங்கள் கண்களுக்கு?

//உங்கள் வாதம் எப்படி இருக்கிறது என்றால் பருத்தி விலை அதலபாதாளத்தில் இருப்பதால் வாங்குவோர் மனிதாபிமான அடிப்படையில் அதிக விலை தந்து வாங்க வேண்டும் என்கிறீர்கள்.உலகத்தில் யாரும் அப்படி செய்ய மாட்டார்கள்.//

விலை வீழ்ச்சியை தடுக்க அதிக விலை தந்து வாங்கும் வழக்கம் இருக்கிறது,தனி நபர் அல்ல அரசு செய்யும் ,மினிமம் சுப்பொர்ட் ப்ரிcஎ என அரசே ஒரு விலை அறிவித்து கொள்முதல் செய்யும் அது பொல்ல பல நேரங்களில் செய்துள்ளது.ஆனால் அபோதைய சந்திரபாபு நாயுடு அரசு மேற்கத்திய மனோபாவத்துடன் கண்டுகொள்ளவில்லை எனவே தான் அவர் ஆட்சி விட்டே துரத்தப்பட்டார்.இந்த முறை இந்தியாவில் மட்டும் தான் உண்டு என நினைக்காதீர்கள் அமெரிக்காவிலும் உண்டு.அமெரிக்காவில் நெல் பயிரிடுகிறார்கள் அதற்கென சிறப்பு விலை நிர்ணயம் செய்து அரசே வாங்கிகொள்கிறது ,ஏன் எனில் நெல் அங்கு அதிக அளவில் இல்லை அதனை ஊக்கப்படுத்த வேண்டும் என செய்கிறார்கள். மேலும் சாகுபடிக்கு செலவு செய்த பணத்தில் 50 சதவீதம் வரை திரும்ப தருகிறார்கள் அங்கே!

//கடைகளில் 10 ரூபாய்க்கு பெப்சியும்,தியேட்டர்களில் 15 ரூபாய்க்கும், பெரிய ஓட்டல்களில் 20 ரூபாய்க்கும் விற்றார்கள்(when MRP was 7rs)//

சரவண பவனில் MRP 10 RS உள்ள குளிர்பானம் இப்போதும் 10.50 காசுக்கே தரப்படுகிரது 50 காசு வரி! எந்த ஹோட்டலில் 20 RS க்கு விற்றார்கள் எனத்தெரியவில்லை.தியேட்டர்களை எப்படி பொதுவாக மக்கள் குளிர் பானம் வாங்கும் இடமாக கணக்கில் கொண்டீர்கள் எனத்தெரியவில்லை. இப்போதும் அண்ணபல்கலையின் கேன்டீன் போனிர்கள் எனில் வெளியில் விற்கும் விலையை விட 50 காசுகள் குறைவான விலையில் குளிர்பானங்கள் விற்கபடுகிறது ,எனவே சில விதிவிலக்குகளை எல்லாம் பொதுவான வரையரையில் கொண்டுவருவது சரியல்லவே!

உங்களது குளிர்பான விலையின் தோராய கணக்கில் இரண்டு முறை RETAILER பங்கு தருகிறீர்கள் :-))

//retailers commision = 1 rs
selling price to retailer = 9 rs

profit per bottle to coke = 1.50//

இதில் கமிஷன் 1 ரூபாய் வாங்குவதும் retailer , 1.50 ரூபாய் லாபம் வாங்குவதும் retailer அது என்ன இரண்டாக பிரித்து போட்டு , கணக்கை பேலன்ஸ் செய்துள்ளீர்கள்!எப்படி பிரித்துபோட்டுக் காட்டினாலும் பெப்சி/கோக் போன்றவற்றின் விலை நிர்ணயம் un fair pricing தான் என்பதை பொருளாதாரம் நன்கறிந்தவர்கள் சொல்வார்கள்.

விவசாயம் ,அதன் சார்ந்த பொருளாதாரம் எனப்பேசப்போனால் பக்கம் பக்கமாக பேசமுடியும்.காலம் ,இடம் கருதி சுருக்கமாகவே சொல்லியுள்ளேன்

Anonymous said...

Read this blog. Found the comments part had a good discussion.

Found Mr. Vavval's arguments humanitarian. Immediately he was branded as a left. Selvan's view is a consumeristic perception. We all are getting used to the consumeristic mentality. In tamil they call it 'Thuippu'.

Coke and Pepsi and any such cool drinks are just using the consumeristic mentaility of people. There is no use to the human body in drinking them . There are harms listed in drinking cool drinks. Nobody stopped drinking them. Nobody stopped selling them. Why?

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

அருமையான ப்திவு. சுந்தருக்கும் வவ்வலுக்கு பாரட்டுகள்
MRP பற்றி.
வருடம் 1991 என்று நினைவு. கடையில் குளிக்கும் சோப்பு கேட்டேன். அவன் அதில் போட்டுள்ள விலையக்கட்டிலும் அதிகம் சொன்னன் - அது வரியாம். நான் MRP-க்கு அதிகமாக விற்கக்கூடதுன்னு சொன்னேன்,பிறகு Mற்P விலைக்கெ கொடுத்தான்.

சாதாரணமாக கடையில் MRP விலைக்குதான் தருகிறார்கள். உள்ளூர் கடையில் சில பொருட்கள் சற்று விலை குறைவாக இருக்கும். பேருந்து/இரயில் நிலையம் போன்ற இடங்களில் விலை சற்று அதிகமா இருக்கும்.