Sunday, October 31, 2010

கடவுளின் நண்பன்

அந்த கடவுள் ஒரு மிக பெரிய வழிபாட்டு தளத்தை நடத்தி வருபவர். யதேச்சையாக ஒரு உறவினர் வீட்டில் அவரை சந்திக்க நேர்ந்தது. அவரை நடுவே உட்கார வைத்து எல்லோரும் பயபக்தியுடன் அமர்ந்திருந்தனர்.

உறவினர் என்னை கடவுளிடம் அறிமுகபடுத்தினார். "எனக்கு சாமி நம்பிக்கை இல்லை" என்றேன்.

கடவுள் என்னிடம் விவாதத்தை தொடங்கினார். "உன்னை பெற்றது உன் அம்மா என உனக்கு எப்படி தெரியும்?நம்பிக்கை தானே?" வகையறா லாஜிக் இல்லாத கேள்விகள். அசுவாரசியமாக பதில் சொல்லிகொண்டிருந்தேன்.

விவாதத்தை கேட்டுகொண்டிருந்த பக்தர் ஒருவருக்கு கோபம் வந்தது. "இந்த மாதிரி திக காரன் கிட்ட பேசாதீங்க சாமி" என்றார். சாமியும் "ஆமாம்.." என்றார்."திகன்னா என்னன்னே தெரியாது கடவுளே" என்றேன்.

"அப்புறம் இந்த மாதிரி எல்லாம் எப்படி பேசுகிறாய்?அவர்கள் தான் இந்த மாதிரி பேசுவார்கள்"

"அவர்கள் யார்ன்னே எனக்கு தெரியாது"

கடவுளுக்கு சிரிப்பு வந்தது."நல்லது" என்றார்.பிரசாதம் கொடுத்தார்.

ஆறுமாதம் கழித்து கடவுளை மீண்டும் ஒரு கல்யாண மண்டடபத்தில் சந்தித்தேன்.என்னை அடையாளம் கண்டுகொண்டார்.அன்று அவரை பார்க்க மட்டும் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் வந்திருப்பார்கள்.என்னை இரு என உட்கார வைத்து விட்டு வந்தவர்களுடன் பேசி கொண்டிருந்தார்.

அந்த கூட்டத்தை கண்டு எனக்கே பயம் வந்தது.இவருடனா சண்டை போட்டோம் என நினைத்து கொண்டேன்.அப்புறம் என்னை அருகே அழைத்தார்.

"அன்னைக்கு பேசினதை மனசுல வெச்சுக்காதீங்க" என்றேன்.

அவருக்கு ஒரே சிரிப்பு.

"என்னை எதாச்சும் துணிகடைக்கு கூட்டி போ.கோயமுத்தூர்ல எனக்கு கடையே தெரியாது" என்றார்.

"என்கிட்ட கார் இல்லை.பைக் தான் இருக்கு"

"பைக்குல நான் வரமாட்டேன்னு சொன்னேனா?"

பைக்கில் போகும்போது "என்னை எல்லோரும் கடவுள் என்கிறார்கள். வயசு வித்தியாசம் இல்லாமல் காலில் விழுகிறார்கள். நீ தான் பயம் இல்லாம பேசினாய்" என்றார்.

"நீங்க கடவுளா?" என கேட்டேன்

பதில் சொல்லாமல் "பரம்பரையா இந்த வழிபாட்டு தளத்தை நிர்வகிச்சுகிட்டு வர்ரோம்.பரம்பரையா பக்தர்கள் இருக்கிறார்கள்.மாசம் ரெண்டு லட்சத்துக்கு பக்கம் செலவு ஆகுது" என்றார்.

மாதம் ரெண்டு லட்சம் வருமானம் வருகிறது என சுற்றி வளைத்து சொல்லுகிறார் என புரிந்தது.

"ஆன்மிகம் உண்மையா?" என மறுபடி கேட்டேன்.

"வீட்டுக்கு போயி உன் கால் முட்டிக்கு பின்புறம் பக்கம் பக்கமா ரெண்டு மச்சம் இருக்கான்னு பாரு" என சொன்னார்.

"இருந்தால்.."

"ஆன்மிகம் உண்மை."

துணிகடையில் பைக் நின்றது.

துணி வாங்கினார்.வாங்கிவிட்டு பில் போடும்போது கையில் இருந்த பையை திறந்து அதில் இருந்த சிலை ஒன்றை எடுத்தார். "இந்த சிலை ஐநூறு வருஷமா வெச்சு பூஜை பண்ணுறோம்.இது உன் கடைக்கு வந்துவிட்டது.உனக்கு இனி ராஜயோகம் தான்"

கடைகாரர் மெய்சிலிர்த்தார்.பில்லுக்கு பணம் வேண்டாம் என சொல்லி கைகூப்பி அனுப்பி வைத்தார்.

அடுத்து என்.ஆர்.ஐ பக்தர் ஒருவர் வீட்டுக்கு போக சொன்னார்.அங்கே போனதும் பக்தருக்கு அந்த துணியை கொடுத்தார்.பக்தர் வழக்கத்தை விட அதிகமாகவே காணிக்கை கொடுத்தார்.

கடவுளை மண்டபத்தில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன்.முட்டிக்கு பின்னால் பார்த்தேன்.

அருகருகே இரண்டு மச்சம் இருந்தது.

அதன்பின்னர் இரண்டு வருடம் கழித்து அவர் மீண்டும் கோயமுத்தூர் வந்தார்.தொலைபேசியில் அழைத்தார்.

"இருக்கா?" என கேட்டார்

"இருக்கு" என்றேன்.

"ஆன்மிகம் நிஜமா?" என கேட்டார்.

"தெரியலை" என்றேன்.

"தெரியாத வரைக்கும் தான் நீ எனக்கு நண்பனா இருப்பாய்.தெரிந்தால் நீயும் என்னை பார்த்ததும் காலில் விழுந்து கும்பிட ஆரம்பித்துவிடுவாய்.."

சிரித்துகொண்டே போனை வைத்தார்.

5 comments:

அகில் பூங்குன்றன் said...

கலக்கல்... :)

அகில் பூங்குன்றன் said...

கலக்கல்... :)

Anonymous said...

நல்லாருக்கு

Meena said...

கடவுளை நான் எவரிடத்தும் காண்கிறேன்
நண்பனிடம், கணவரிடம், குழந்தையிடம்,
அதனால் காலில் விழாமல் கடவுளாகக்
கருத நான் தயார் !

பெருமாள் தேவன் செய்திகள் said...

கடவுள் ஒரு உயரமான நாற்காலியில் அமர்ந்து கொண்டிருப்பார் என்று நிறையப் பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.