Tuesday, January 02, 2007

220.நாட்டுக்காக ஒருமணிநேரம்

ஹூப்ளியில் உள்ள மகந்தேஷ் தபாஷெட்டி எனும் டாக்டர் வரண்டு கிடக்கும் ஹூப்ளியை பசுமைப்படுத்த தனிமனிதனாக ஒரு முயற்சியை துவக்கினார். பிசியான டாக்டர் தொழிலையும் கவனித்துக்கொண்டு நாட்டுக்கான தனது முயற்சியையும் அவர் செய்தார். தினமும் ஒரு மணிநேரம் நாட்டுக்காக ஒதுக்கினார். தனது காரில் மரக்கன்றுகளை ஏற்றிக்கொண்டு நகரெங்கும் வலம் வந்து மரக்கன்றுகளை நடுவார். ஏற்கனவே தான் நட்ட கன்றுகளுக்கு நீர் ஊற்றுவார்.

வருடா, வருடம் ஆயிரம் மரங்களை நடுவது இவரது திட்டம். கடந்த 12 வருடங்களாக இச்சேவையை தனிமனிதராக செய்துவரும் இவர் இதுவரை 12,000 மரங்களை ஹூப்ளியெங்கும் நட்டு, நகரையே பசுமைப்படுத்திவிட்டார்.

ஹூப்ளி நகர பேருந்து நிலையத்தை முன்பு வெயில் சுட்டெரித்ததாம்.இவர் அங்கே மட்டும் 1500 மரக்கன்றுகளை நட்டாராம். இப்போது அவை மிக அருமையாக வளர்ந்து நிற்கின்றனவாம். ஜோஷி இங்கிலிச்ஷ் மீடியம் ஸ்கூல் பாறைகள் நிறைந்த பிரதேசத்தில் இருந்தது.அங்கேயும் மிகவும் கஷ்டப்பட்டு 25 மரக்கன்றுகளை நட்டாராம் மகந்தேஷ். இப்போது அவை நன்கு வளர்ந்து மாணவர்களுக்கு நிழல் தருகின்றனவாம். சென்ட்ரல் கல்லூரி அருகெ பல ஆண்டுகளுக்கு முன்பு இவர் நட்ட மரக்கன்றுகள் பல மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், காதலர்களுக்கும் நிழல் தருகின்றனவாம்.

மரம் நடுவது மட்டுமல்லாது மரம் வெட்டுதலையும் முடிந்தவரை தடுக்கிறார் டாக்டர் மகந்தேஷ். கிம்ஸ் மெடிக்கல் கல்லூரியில் 30 வருடங்களாக மரங்களை ட்ரிம் செய்துவந்தனராம். மகந்தேஷ் அங்கு சென்று பேசி அதை தடுத்து நிறுத்தி இப்போது அந்த மரங்கள் வானுயர வளர்ந்து நிற்கின்றனவாம்.

சந்தோஷ் நகர் ஏரி நீர் இதேபோல் மாசுபட்டு நின்றதாம். அதை சுற்றி பலர் குடிசை போட்டு ஏரியை ஆக்கிரமித்திருந்தனராம். மாநகராட்சி உதவியுடன் ஆகிரமிப்பாளர்களை அகற்றிவிட்டு ஏரிஅசுற்றிலும் மரங்களை நட்டாராம் மகந்தேஷ். இப்போது தண்ணீர் மிகவும் சுத்தமாகி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கிறதாம்.

சந்தோஷ் நகர் ஏரியில் மரங்களை வளர்ப்பது மிகவும் சவாலான பணியாக இருந்ததாம்.14 மாதங்களுக்கு தொடர்ந்து மழையே பெய்யவில்லையாம். சொந்த காசை போட்டு டேங்கர் லாரியில் நீரை வரவழைத்து மரங்களுக்கு ஊற்றினாரம் டாக்டர் மகந்தேஷ். சில சமயங்களில் கோடாக்கள் எனும் பானையில் அவரே தண்ணீரை சுமந்து சென்று மரங்களுக்கு ஊற்றினாராம். இப்போது அந்த பகுதியில் பசுமை தாண்டவமாடுகிறதாம். இவரது முயற்சிகளுக்கு வனத்துறை அருமையாக உதவி செய்கிறதாம்.விரைவில் வளர்கக்கூடிய மரக்கன்றுகளை தந்து உதவுகிறதாம் வனத்துறை.

காரில் அடிக்கடி நகரை சுற்றி வந்து எங்கே மரம் நடலாம் என்று பார்த்துக்கொண்டே இருப்பாராம். இவரது காரில் எப்போதும் மரக்கன்றுகள், வாளிகள் ஆகியவை இருக்குமாம்.

இவரது முயற்சிகளுக்கு சில நகர மக்கள் உதவி செய்வதில்லையாம். "எங்கள் வீடுகளுக்கு முன் மரம் நடாதே" என சிலர் சண்டைக்கு வருவதும் உண்டாம்.அப்படிப்பட்ட இடங்களில் இவர் மரம் நடுவதில்லை. "நட்டி வைத்த பின் அதை அவர்கள் வெட்டிவிட்டால் என்ன செய்வது?" என சிரிக்கிறார் டாக்டர் மகந்தேஷ்.

12 வருடங்களில் 12000 மரங்கள் நட்ட இவர் இன்னும் நூறாண்டுகள் வாழ்ந்தால் நூறாயிரம் மரங்கள் நாட்டுக்கு கிடைக்குமே?

இவர் நூறாண்டுகள் வாழ அன்னை வனதுர்க்கையை வேண்டுவோம்.

பிசியான டாக்டர் தொழிலுகு நடுவிலும் இந்த பணியை செய்துவரும் டாக்டர் மகந்தேஷ் முலம் நாம் அறியவருவது என்ன?

நாட்டுக்கு செய்ய நேரமின்மை என்பது ஒரு காரணமல்ல என்பதுதான்.

டாக்டர் மகந்தெஷ் போல் இல்லாவிட்டாலும் நீங்களும் உங்கள் ஊரில் வருடத்துக்கு 10 மரங்கள் நட்டு நீர் ஊற்றினால் உங்கள் ஊர் 20 வருடத்தில் எப்படி செழிக்கும் என்பதை யோசித்து பாருங்கள். சென்னை போன்ற ஊரில் ஒரே ஒரு டாக்டர் மகந்தேஷ் தோன்றினால் இன்னும் பத்தாண்டுகளில் சென்னையில் வரட்சி என்பதே இல்லாமல் போகும் அல்லவா?வரண்டு கிடந்த ஹூப்ளியை ஒரு மகந்தேஷால் மாற்ற முடிந்தபோது வரண்டு கிடக்கும் சென்னையை உங்களால் மாற்முடியாதா?

நாட்டுக்காக ஒரு நாளைக்கு 1 மணிநேரம் ஒதுக்கமுடியாதா? இலவசமாக கிடைக்கும் மரக்கன்றுகளை உங்கள் சுற்றுபுறத்தில் நடமுடியாதா?

வரண்டு கிடக்கும் உங்கள் ஊரை பசுமையாக மாற்ற தேவை ஒரு நாளைக்கு ஒரே மணிநேரம். இரண்டு முட்டாள்தமான சீரியல் பார்க்கும் நேரம். அதுபோக மரம்நடுதல் மிக நல்ல உடற்பயிற்ச்சி கூட.

சிந்தியுங்கள்.

நாடென்ன செய்தது எனக்கு என கேட்காமல் "நான் என்ன செய்தேன் நாட்டுக்கு?" என கேட்டு நீங்களும் ஒரு டாக்டர் மகந்தேஷ் ஆக மாறுங்கள்.

தேவை ஒரு நாளைக்கு ஒரே மணிநேரம்.

12 comments:

Anonymous said...

நல்ல பதிவு செல்வன்

Anonymous said...

அருமையான பதிவ்வு செல்வன்...

Anonymous said...

செல்வன்,

மிக நல்ல பதிவு! தேடித் தந்திருக்கிறீர்கள் நல்ல செய்தியை!
ஊக்கம் தரும் ஆக்கமான மனிதர் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி!

அன்புடன்,
நம்பி.பா.

ஓகை said...

அருமையான பதிவு செல்வன். பதிவுக்கு மிக நன்றி.

BadNewsIndia said...

very good one Selvan!

Thanks for adding such posts.

Here is some info. about a similar person, who spends his retired life for the welfare of others:
http://goodnewsindia.com/pointreturn/online/?page_id=2

கோபிநாத் said...

செல்வன்,
அருமையான பதிவு, இவர்களுக் எல்லாம் நாம் நாட்டின் உயர்ந்த விருதுகளை தரவேண்டும்.

பதிவுக்கு நன்றிகள்.

இலவசக்கொத்தனார் said...

நல்ல பதிவு செல்வன். அவர் கையாளும் வழிமுறைகள், சந்தித்த இன்னல்கள், அவற்றை எப்படி எதிர்கொண்டார் என அவர் பல இடங்களுக்குச் சென்று சொற்பொழிவு ஆற்ற வேண்டும்.

Anonymous said...

தேவையான பதிவு செல்வன். நன்றி.

இதைப் படிக்கப் படிக்க விளையாட்டுப் பிள்ளையாய் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருந்த கமல், அவரது வீட்டில் வேலை செய்யும் பெரியவர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கன்றுகள் நட்டு நீரூற்றி பாசமாய் வளர்த்து வரும் காட்சியைக் கண்டதும் மனம் மாறி கிராமத்தை மாற்ற உறுதி பூண்டு 'உன்னால் முடியும் தம்பி' என்று முழங்கும் காட்சிகள் நினைவுக்கு வருகின்றது. மரம் வெட்டுப்பட்டதும் அந்தப் பெரியவர் விடும் கண்ணீர் நம்மைக் கலங்கச் செய்துவிடும்.

இம்மாதிரி சேவையாளர்களுக்கு நம் ஊடகங்கள் முக்கியத்துவம் தந்து வெளிச்சம் காட்ட வேண்டும். லட்சக்கணக்கானோருக்கு இவர் சேவைகள் தெரியப்படுத்தப்படவேண்டும். இவர் ஒரு வினையூக்கியாக - ஒரு ரோல் மாடலாக மக்களால் எடுத்துக்கொள்ளப்படவேண்டும். அரசாங்கமும் இம்மாதிரி சேவையாளர்களை மிகவும் ஊக்குவித்து முடிந்த அளவு இயக்கப்படுத்தித் தேவையான பொருளுதவியையும் செய்யவேண்டும். அவரது கைக்காசில் செய்தாலும் அவரோடு இது நின்று போகக் கூடாது. காசில்லா பட்சத்தில் அவரால் இதைத் தொடரஇயலாமல் போகக்கூடாதில்லையா?

நமது அரசுகள் இலவசம் இலவசம் என்று மக்களைப் பிச்சைக்காரர்களாக்குவதற்குப் பதிலாக, கண்டதிலும் பணத்தைக் கொட்டிக் கரியாக்குவதற்கு பதிலாக இம்மாதிரியானவர்களுக்கு பெரிய அளவில் பொருளுதவி செய்து இவரது சேவை பரந்துபட்டு பல நகரங்களைச் சென்றடைய உதவ வேண்டும்.

கட்சிகளும் தலைவர்களும் நடிகர்களும் தொண்டர், ரசிகர், மாநாடு நடத்தி நேரத்தையும் பணத்தையும் உழைப்பையும் அநியாயமாக வீணாக்குவதற்குப் பதிலாக அனைவரும் ஒரு மரக்கன்றையாவது அவரவர் இடத்தில் நட்டு பராமரித்து வரவேண்டும் என்று உத்திரவிட்டால் ஒரே நாளில் கோடி விதைகள் விதைக்கப்படும். ஓரிரு வருடங்களில் பலத்த மாற்றத்தைச் சுற்றுப்புற சூழ்நிலையில் அது ஏற்படுத்தும்.

என்னென்னவோ சிந்தனைகளைக் கிளறிவிட்டது இந்தப் பதிவு. இப்போதைக்கு என்னால் செய்யமுடிந்தது இதைப்பற்றி நானறிந்தோருக்குத் தெரிவிப்பதும் ஒரு 5 மரக்கன்றுகளையாவது நட்டு அவற்றை வளர்ப்பதும்.

செய்வேன்.

நன்றி.

Unknown said...

அன்பு நண்பர்கள் நிர்மல்,பாலாஜி,நம்பி,ஓகை அனைவருக்கும் நன்றி

Unknown said...

நன்றி பி.என்.ஐ

அந்த செய்தியை படித்தேன்.மிகவும் சுருக்கமாக அவரது சாதனைகளை சொல்லியிருந்தார்கள்.

நன்றி கோபினாத்,

இவரை விருதுகள் தேடிவரும் என்று நம்புவோம்.

Unknown said...

கொத்தனார்,

அவரது சேவைகளை மக்களிடம் பரப்பவேண்டியது நம் போன்றவர்கள் மற்றும் மீடியாவின் கடமை.

Unknown said...

//இப்போதைக்கு என்னால் செய்யமுடிந்தது இதைப்பற்றி நானறிந்தோருக்குத் தெரிவிப்பதும் ஒரு 5 மரக்கன்றுகளையாவது நட்டு அவற்றை வளர்ப்பதும். //


சுந்தர்

நன்றி.மிகுந்த மனைநிறைவு மற்றும் மகிழ்ச்சியூட்டிய பின்னூட்டம் இட்டீர்கள்.உங்களை போல் பலர் இந்த சேவையை துவக்கினால் இந்தியா விரைவில் வனவளம் மற்றும் நீர்வ்ளம் நிரம்பிய நாடாகுமென்பது உறுதி.

நேற்றுதான் day after tomorrow என்ற படம் பார்த்தேன்.அதில் இயர்கை வ்ளம் அழிவதால் உலகில் விளையும் பெருங்கேடுகளை கதையாக சொன்னார்கள்.படித்ததும் மனம் மிகவும் வேதனைப்பட்டது.

//இம்மாதிரி சேவையாளர்களுக்கு நம் ஊடகங்கள் முக்கியத்துவம் தந்து வெளிச்சம் காட்ட வேண்டும். //

இவர் பெரிய அளவில் ஆங்கில ஊடகங்களால் கண்டுகொள்லப்பட்டதாக தெரியவில்லை.கன்னட மீடியாக்கள் முக்கியத்துவம் தருகின்றனவா என தெரியவ்ல்லை. இந்த நிலை மாறவேண்டும்.கலாம் இதனால் தான் பத்திரிக்கைகள் பாசிடிவான விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று சொன்னார்

//நமது அரசுகள் இலவசம் இலவசம் என்று மக்களைப் பிச்சைக்காரர்களாக்குவதற்குப் பதிலாக, கண்டதிலும் பணத்தைக் கொட்டிக் கரியாக்குவதற்கு பதிலாக இம்மாதிரியானவர்களுக்கு பெரிய அளவில் பொருளுதவி செய்து இவரது சேவை பரந்துபட்டு பல நகரங்களைச் சென்றடைய உதவ வேண்டும். //

நிச்சயம் செய்யவேண்டும்.இவருக்கே வனத்துறை நல்ல முறையில் உதவுகிறது என தெரிகிறது.அரசு உதவியுடன் துவக்கப்பட்ட சிறுதுளி போன்ற திட்டங்கள் தான் வெற்றி பெறுகின்றன.