Friday, April 07, 2006

74.பலனை ஏற்ற கண்ணன

மகாபாரதத்தில் பாத்திர வடிவமைப்பு மிகவும் அற்புதமான முறையில் கையாளப்பட்டுள்ளது.ஒரே பக்கத்தில் சொல்லப்படும் சில கதாபாத்திரங்கள் பூதாகரமாகி நம் மனதை கொள்ளை கொள்வது வியாசபாரதத்தில் நடக்கும்.கதையின் இறுதிக்கட்டத்தில் ஒரிரு பக்கங்களே வரும் சில பாத்திரங்கள் (பூரிச்ரவஸ், பகதத்தன்) போன்றோர் என் மனதில் எற்படுத்திய பிரமிப்பு அளவிடற்கரியது.இந்த கதாபாத்திரங்கள் வரும் ஒரிரு பக்கங்களிலும் இவர்கள் கதையின் நாயகனான அர்ஜுனன்,கண்னன் ஆகியோரை விஞ்சி நம் கைதட்டலை பெற்றுச்செல்கின்றனர்.ரஜினி படத்தில் கவுரவ வேடத்தில் வரும் பாத்திரம் அந்த ஒரிரு சீன்களில் ரஜினியை மிஞ்சி கைதட்டல் பெறுவது போல் இந்த கதாபாத்திரங்கள் பாரதத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. பூரிச்ரவசும் சாத்யகியும் ஜென்மவிரோதிகள்.இருவரும் அண்டை தேசத்து அரசர்கள்.சாத்யகி கண்ணனின் நண்பன்.பூரிச்ரவஸ் எதிருக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் கவுரவர் படையில் சேர்கிறான்.கத்தி சண்டையில் பூரிச்ரவஸை மிஞ்ச புவியில் யாரும் கிடையாது என புகழ் பெற்றவன்.கதாயுதத்தில் பீமனும்,வில்லுக்கு அர்ஜுனன் என்பது போல் கத்தி சண்டைக்கு பூரிச்ரவஸ் என்று பெயர். 12ம் நாள் யுத்தத்தில் அபிமன்யு கொல்லப்படுகிறான்.13ம் நாள் சூரியன் மறைவதற்குள் அபிமன்யு மரணத்துக்கு காரணமான ஜெயத்ரதனை கொல்வேன் இல்லையெனில் தீக்குளித்து உயிர் துறப்பேன் என அர்ஜுனன் சத்யம் செய்கிறான். மிகப்பெரும் காவல் வியூகம் ஜெயத்ரதனுக்கு உருவாக்கப்படுகிறது.துரோணர் படை முன் நிற்கிறார்.அவரை வென்று தான் கவுரவர் வியூகத்திற்குள் நுழையவே முடியும் என்ற நிலை.உள்ளே நுழைந்தால் அடுத்து கர்ணன்.இவர்கள் இருவரையும் வெல்லும் திறன் படைத்தவர்கள் பாண்டவர் தரப்பில் அர்ஜுனனும் பீமனுமே. இவர்கள் இருவரையும் தோற்கடித்து அர்ஜுனன் உள் நுழைகிறான்.உள்ளே கவுரவர் படையின் முழு ஆற்றலும் அவனை நோக்கி திருப்பி விடப்படுகிறது.முழு படையையும் அர்ஜுனன் ஒருவனே சமாளிக்கிறான். கவலை அடைந்த தருமர் பீமனை உதவிக்கு அனுப்புகிறார்.கர்ணனையும் துரோணரையும் தோற்கடித்து விட்டு பீமனும் உள்ளே நுழைகிறான்.உள்ளே போன பீமன் துரியோதனன் தம்பிகளை பார்த்ததும் போன காரியத்தை மறந்துவிட்டு அவர்களை வேட்டையாட துவங்குகிறான். இப்போது இந்த வியூகத்திற்குள் நுழையும் சக்தி பாண்டவர் தரப்பில் யாருக்கும் இல்லை.ஆனால் துணிந்து சாத்யகி அர்ஜுனனுக்கு உதவியாக வியூகத்திற்குள் நுழைகிறான்.பிரமிக்கத்தக்க பெரும்போர் புரிந்து தூரோனாச்சாரியாரையும் கர்னனையும் வென்று உள்ளே நுழைகிறான். உள்ளே கவுரவர் படைகளை தனி ஒருவனாக எதிர்க்கும் அர்ஜுனனுக்கு ஆதரவாக சாத்யகி கடும்போர் புரிகிறான்.அர்ஜுனன் ஜெயத்ரதனை தேடி செல்கிறான்.சாத்யகியை பூரிச்ரவஸ் எதிர்க்கொள்கிறான். மாவீரர்களை எதிர்த்து களைப்படைந்த சாத்யகி பூரிச்ரவசுடன் கடும்போர் புரிகிறான்.முதலில் விற்போர் நடக்கிறது. பூரிச்ரவஸ் கடும் அடி வாங்குகிறான்.ஆனால் எதிர்பாராவிதமாக சாத்யகியின் சாரதி கொல்லப்பட சாத்யகி திணருகிறான்.சாரதியை இழந்த சாத்யகியின் தேர் பூரிச்ரவசால் அழிக்கப்படுகிறது. கீழே நிற்கும் ஒருவனுடன் ரதத்தில் இருந்து போர் புரிதல் தகாது என்பதால் பூரிச்ரவஸ் கத்தியை எடுத்து கீழிறங்குகிறான்.சாத்யகியும் கத்தியை எடுக்கிறான்.கத்தி சண்டையில் நிகரற்ற பூரிச்ரவஸுக்கு சாத்யகி பொருட்டே அல்ல.சாத்யகியை அடித்து வீழ்த்தி அவன் நெஞ்சில் காலை வைத்து அவன் தலையை துண்டிக்க கத்தியை ஓங்குகிறான். சாத்யகியின் நண்பனான பரந்தாமன் இதை பார்த்துக்கொண்டே இருக்கிறான்."சாத்யகி தோற்றுவிடுவான் அர்ஜுனா.நீ பூரிச்ரவசை கொல்,கொல்" என சொல்லிக்கொண்டே இருக்கிறான்."தன்னுடன் சண்டை பிடிக்காத இன்னொருவனுடன் சண்டை பிடிப்பது யுத்த தருமமமல்ல" என அர்ஜுனன் தயங்குகிறான். சாத்யகியின் தலை துண்டிக்கப்டப்போகும் வினாடியில் பரந்தாமன் பொறுமை இழக்கிறான்.கண்னெதிரே தன் பக்தன் தலை துண்டிக்கப்பட பரந்தாமன் விடுவானா?ஆயுதம் ஏந்துவதில்லை என தான் செய்த சத்தியத்தையும் மீறுகிறான்.விஷ்ணு சக்கரத்தை ஏந்தி நரசிம்ம அவதாரமாக பார்த்தசாரதி தரையில் குதிக்கிறான். கண்னன் ஆயுதம் ஏந்தியதும் அர்ஜுனனின் தயக்கம் விடை பெறுகிறது.அம்பை எடுக்கிறான்.யுத்த தருமம்,வேதம்,சாத்திரம் அத்தனையயும் மீறி பூரிச்ரவஸின் பின்புறமிருந்து அவன் மீது அம்பை ஏவுகிறான். "நன்மை தீமை அனைத்தும் என்னை சார்ந்தது.உன் கடமையை செய்.அதன் பலன் எனக்கே" என்ற கீதையின் மந்திரம் அர்ஜுனனை செலுத்துகிறது.அந்த அடாத செயலை அர்ஜுனன் செய்கிறான். அர்ஜுன பாணம் பூரிச்ரவஸின் கையை துணிக்கிறது.கத்தியோடு பூரிச்ரவசின் வலது கரம் பின்புறமிருந்து துண்டிக்கப்படுகிறது.போர்க்களமெங்கும் "ஆகா" எனும் அதிர்ச்சிக்குரல் எழுகிறது.குலகுரு துரோணர்,கர்ணன்,பீமன் ஆகிய மாபெரும் வீரர்கள் அர்ஜுனனின் இந்த செயலை கண்டு அதிர்கின்றனர். எவன் இத்தகைய கடைந்தெடுத்த கோழைத்தனமான காரியத்தை செய்தான் என்று அதிர்ச்சியுடன் பூரிச்ரவஸ் திரும்பிப்பார்க்கிறான்.பார்த்தன் தான் அதை செய்தது என்பதை அறிந்ததும் அதிர்கிறான். பூரிச்ரவஸ் சுத்த வீரன்.பெரும் பக்திமான்.அர்ஜுனன் இதை செய்தான் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை."அர்ஜுனா..ஏன் இப்படி செய்தாய்" என்று கேட்கிறான்.பார்த்தன் எந்த பதிலும் சொல்லவில்லை.தலைகுனிந்து நிற்கிறான்.பூரிச்ரவஸ் சக்ராயுதத்தோடு தன் எதிரெ நிற்கும் கண்ணனை கண்டதும் உண்மையை உணர்கிறான். சோதிவடிவான பரம்பொருளை பூரிச்ரவஸ் தரிசிக்கிறான்.தன் முடிவு நெருங்கிவிட்டது என்பதையும் தான் ஐக்கியமாகப்போகும் பரம்பொருள் தன் எதிரே நிற்கிறது என்பதையும் அறிகிறான்.மண்டியிட்டு அந்த அச்சோதியின் முன் தலைகுனிந்து வணங்குகிறான்.அவன் தலை பூமியை தொடுகிறது. ஆவேசத்தோடு சாத்யகி எழுகிறான்.கத்தியை எடுக்கிறான்."வேண்டாம்,வேண்டாம்" என கண்னனும் அர்ஜுனனும் கூவ கூவ கேட்காமல் ஒரே சீவு.பூரிச்ரவசின் தலை துண்டாகிறது.மீண்டும் போர்க்களமெங்கும் 'ஆகா'காரம் எழுகிறது. கண்னனும் அர்ஜுனனும் பீமனும் பாண்டவரும் தலைகுனிந்து நிற்க பூரிச்ரவசின் ஆத்மா சோதிவடிவில் மேலெழும்பி வீர சொர்க்கத்தை அடைந்தது என வியாசர் எழுதுகிறார். பூரிச்ரவஸ் கதையில் நமக்கு தெரிய வேண்டிய நீதி என்ன? கண்ணன் துடித்த துடிப்புதான்.சாத்யகியின் உயிர் போகப்போகும் அத்தருணத்தில் விஷ்ணு சக்கரத்தோடு நாராயணனாய் தரையில் குதித்தானே..அது தான் நமக்கு பாடமாக இருக்கும் தருணம். போர் துவங்குமுன் ஆயுதம் ஏந்தமாட்டேன் என்று துரியாதனனுக்கு சத்தியம் செய்து கொடுத்தான்.அதை ஏன் இத்தருணத்தில் மீறத் துணிந்தான்? பக்தனின் அபயக்குரல் தான் காரணம். இதற்கு முன்னும் இதே போன்ற நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.கஜேந்திரனை முதலை பிடித்தபோது தன்னால் முடியாத சூழ்நிலை வந்ததும் "ஆதிமூலமே" என்று பெயர் சொல்லி கஜராஜன் கதறினான்.அந்த கதறல் வந்தபோது நாராயணன் பாம்புப்படுக்கையில் தன் மனைவியரான பூதேவியும் லட்சுமிதேவியும் காலை அமுக்க வீற்றிருந்தானாம். பக்தனின் கதறல் கேட்டதும் துள்ளி எழுந்தானாம்.தேவியரிடமிருந்து காலை உதறி எடுத்து கஜராஜனுக்கு உதவியாக ஓடிவந்தானாம்.வழக்கமாக ஏறும் கருடன் மீது கூட ஏறவில்லை.மகுடம் மாலை ஆபரணம் ஏதும் தரித்து ஓடி வரவில்லை.குரல் கேட்டபோது இருந்த நிலையிலேயே ஓடிவந்தானாம். "கஜராஜனுக்கு நீ உதவிக்கு வந்ததற்கு ஒரு நமஸ்காரம் உதவி செய்ய நீ ஓடி வந்த வேகத்துக்கு ஒரு நமஸ்காரம்" என்ற பொருளில் ஒரு தெலுங்கு கீர்த்தனையே இருக்கிறது. சாத்யகி கதையில் நடந்ததும் இதுதான். பக்தன் கொல்லப்படப்போகிறான்.அதை தடுக்க வேண்டுமா அல்லது தான் செய்த சத்தியத்தை காக்க வேண்டுமா? முடிவெடுக்க அவனுக்கு நொடிப்பொழுது தான் தேவைப்பட்டது. அவதார காரியம்,ஷத்திரிய தர்மம் இது அத்தனையும் மீறி பாகவத தருமம் தான் அவனுக்கு முக்கியமாக போனது. அவதார காரியத்தை அவன் முன்பொருமுறை மீறி இருக்கிறான். ஜடாயு உயிர் நீத்தபோது அவன் ராமனாக இருந்தான்.ஜடாயு உயிர் நீத்தபோது அந்த இடத்திலேயே அந்த வினாடியிலேயே ராமாவதாரத்தை துறந்து,சீதையை மறந்து விஷ்ணுவாக மாறி ஜடாயுவுக்கு முக்தி அளித்தான்.ஜடாயுவின் ஆத்மாவை காக்க வைப்பதில் அவனுக்கு விருப்பமே இல்லை.முக்தி அளித்த பிறகு மீண்டும் ராமனாக மாறி அழுதுகொண்டு சீதையை தேடிச்செல்கிறான். வீடனன் சரணடைய வரும்போது சுக்ரீவன் தடுக்கிறான்.அப்போது சுக்க்ரீவனின் வாதங்களை கேட்டு முடித்த பிறகு ராமன் ஒரு சத்தியத்தை செய்கிறான். "ராமா நான் உன் அபயம்" என்று ஒருமுறை யாராவது பக்தியோடு சொன்னாலும் அவர்களை காக்க வேண்டிய கடமை என்னை வந்தடைகிறது.இந்த கடமையிலிருந்து என்னால் என்னாளும் மீள முடியாது.இது என் விரதம்,என் வாக்குறுதி" என்கிறான். இப்படி சொன்னவன் தன் கண்முன் தன் பக்தன் சாக விடுவானா?அவதார நோக்கமாவது,ஷத்திரிய தர்மமாவது?அவை எல்லாம் இரண்டாம் பட்சமல்லவா? தன் புகழை விட தன் அடியாரது உயிர் தான் அவனுக்கு முக்கியம்.ஆனால் பகவானின் புகழ் குறைய அர்ஜுனன் விடவில்லை.பூரிச்ரவசை தான் தாக்கி அந்த பழியை அவன் ஏற்றுக்கொண்டான்.அதற்கான வெகுமதியும் அர்ஜுனனுக்கு கிடைத்தது.காந்தாரி சாபம் தந்தபோது பாண்டவர்களுக்கு தரவில்லை."இது எல்லாவற்ரையும் செய்தது நீ.வம்சவிருத்தி இன்றி உன் இனம் அழியும்" என்று கண்னனுக்கு தான் சாபம் தருகிறாள். கடமையை செய்தது அர்ஜுனன்.அதற்கான பலனை சொன்னபடி பகவான் ஏற்றுக்கொண்டான்.இறைவன் சொன்னதை செய்த அர்ஜுனனும் பாண்டவர்களும் குறை இன்றி வாழ்ந்தனர்....

15 comments:

VSK said...

கொஞ்சம் கை கொடுங்கள்!

சிந்திக்க வைக்கும் சிறப்பான பதிவு!

வசைபாடுகளுக்கு நடுவே விம்ம வைக்கும் பதிவு!

மெய்யாகவே அந்த 'கௌரவ பாத்திரங்கள்' மனதை அள்ளித்தான் சென்றுவிட்டார்கள்.

நன்றி.

ramachandranusha(உஷா) said...

செல்வன், நான் படித்தவைகளில் மனம் கவர்ந்தது என்பதில் முதல் இடம் மகாபாரதம்தான். நீங்கள் பார்க்கும் ஆன்மீகப் பார்வையில் பார்க்காமல், முரண்பட்டு நிற்கும் பல்வேறு மனித உள்ளங்கள்/ கதாப்பாத்திரங்களாய் பார்க்கும்பொழுது வியாசரின் கற்பனை திறன் ஆகா! அதனால்தான் பலராலும் இன்றும் இந்த கதாபாத்திரங்கள் அலசப்படுகின்றன. போர் என்றுவரும்பொழுது வெற்றி மட்டுமே தேவை என்பதால் எந்த சமரசத்துக்கும் எல்லாரும் ஆளாகிறார்கள் அன்று இன்றும் :-)

மீண்டும் நினைவூட்டலுக்கு நன்றி

Unknown said...

நன்றி எஸ்.கே

நீண்ட பதிவாக போய்விட்டதே.இரண்டாக பிரித்துபோடலமா அல்லது ஒன்றாகவே போடலமா என குழம்பியிருந்தேன்.பொறுமையாக படித்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி

நன்றி
அன்புடன்
செல்வன்

Unknown said...

போர் என்றுவரும்பொழுது வெற்றி மட்டுமே தேவை என்பதால் எந்த சமரசத்துக்கும் எல்லாரும் ஆளாகிறார்கள் அன்று இன்றும் :-)///

Everything is fair in war and love.

யுத்ததர்மத்தில் தலையாய தர்மம் வெல்வதுதான்.பாரதமும்,ராமாயணமும் சொல்வது இதைத்தான்.

At times,ends justify means

அன்புடன்
செல்வன்

Unknown said...

thnx ashlyn

குமரன் (Kumaran) said...

செல்வன்,

ஆயுதம் ஏந்த மாட்டேன் என்று சபதம் செய்துவிட்டு பின்னர் பக்தர்களைக் காக்க பரந்தாமன் ஆயுதம் எடுத்தான் என்று அதனை முன்னிறுத்தி இந்தப் பதிவினை எழுதியிருக்கிறீர்கள். இந்த வாதத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். பாரதப் போரின் போது மற்றோர் இடத்திலும் மாதவன் தன் உறுதிமொழியை மீறி ஆயுதம் எடுக்கிறான்; அங்கும் தன் பக்தனைக் காக்கத் தான். பார்த்தனும் பாட்டனும் நேர் நேராகப் போருக்கு நிற்கும் போது தாத்தனுக்கு முதலில் வணக்கம் சொல்லும் முகமாக சில அஸ்திரங்களை அவரின் தேரின் முன்னால் எய்வான் அனகன். ஆனால் கங்கை மைந்தனோ அதனைக் கண்டு கொள்ளாமல் போர் தொடங்கிவிட்டது என்று எண்ணி குந்தி மைந்தனை நோக்கி அஸ்திரங்களை எய்யத் தொடங்கிவிடுவார். அதனைப் பார்த்து மாயவன் தன் பக்தனைக் காக்க வேண்டி தேர்ச் சக்கரத்தைக் கையில் ஏந்தி தேவவிரதன் முன் நிற்க, தேவவிரதனாகிய பீஷ்மர் 'அச்யுதா. என்னே உன் கருணை. எந்த நிலையிலும் தன் பக்தர்களைக் காப்பவன் என்ற உன் பெயருக்கேற்ப (அச்யுதன் என்னும் பெயருக்குப் பொருள்) இங்கு பாண்டவனைக் காக்க உன் உறுதிமொழியை மீறுகிறாய். உன் கையால் கொல்லப்பட நான் கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்.' என்று கைகூப்பி நிற்க, அதன் பின்னர் பாட்டனுக்கும் பேரனுக்கும் போர் நடக்கிறது.

சாத்யகி கண்ணனின் நண்பன் மட்டும் இல்லை. கண்ணனின் தம்பியும் என்று நினைக்கிறேன். கண்ணன் தன் உறுதிமொழியை மீறி ஆயுதம் எடுக்கும் இரண்டு இடங்களிலும் அவன் காப்பாற்ற விழைந்தது நமது இன்றைய நோக்கில் வேண்டுமானால் பக்தர்களாக இருக்கலாம். ஆனால் மற்றவர்கள் நோக்கில் அவர்கள் அவனது நெருங்கிய உறவினர்கள்; அவர்களைக் காக்க எதனை வேண்டுமானாலும் செய்வான் இந்த தூர்த்தன் என்று தான் சொன்னார்கள்; சொல்வார்கள். பக்தர்களைக் காப்பவன் என்றால் கன்னனை ஏன் கைவிட்டான்; கைவிட்டது மட்டுமில்லை அவன் தனது தேர்ச்சக்கரத்தை சரிசெய்யும் காலத்தில் அவன் மேல் அம்பெய்து கொல்லும் படி அல்லவா தூண்டினான். கர்ணன் கண்ணனின் பக்தன் தானே. அவனை மட்டும் கொல்லும் படி விட்டுவிட்டு தன் உறவினர்களை (தன் தம்பி, தன் தங்கையை மணந்தவன்) மட்டும் காப்பாற்றினான் கண்ணன் என்று உலகம் சொல்லும்.

Unknown said...

அன்பு குமரன்,
பக்தர்களை அவன் என்றும் கைவிட்டதில்லை.அவனுக்கு உற்றோர் உறவினர் எல்லாம் அவன் பாகவதர்களே அன்றி பிறிதொருவர் அல்ல.

"உன்னோடு உற்றோமே யாம் உறவோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோரெம்பாவாய்"

என அனைத்தையும் விட்டு அவன் தாள் அடிபணிந்தாரை அவன் கைவிட்டதாய் வரலாறே இல்லை.

கர்ணன் பக்தன் தான்.விரதம் பல புரிந்தவன்,தானம் தருமம் செய்தவன்.அதனால் தான் கண்னன் அவனிடமே நேரில் சென்று "நீ துரியோதனன் பக்கம் சேராதே.பாண்டவர் பக்கம் வந்துவிடு.உயிர் பிழைப்பாய்" என சொன்னான்.கர்ணன் அதை கேட்கவில்லையே?

ஆண்டவன் பேச்சை தட்டி நடப்பவன் பக்தனா?அர்ஜுனன் கண்ணன் பேச்சை தட்டவில்லை.யுத்த தருமத்தை மீறச்சொன்னபோதும் அதை செய்தான்.பகவான் சொன்னபடி கேட்ட அர்ஜுனனனை கண்னன் காத்தான்.பகவான் சொல் பேச்சு கேட்காத கர்ணன் தப்பவில்லை.உயிரை விட்டான்.

ஆண்டவனை விட செஞ்சோற்று கடன் பெரிதென்று கர்னன் நினைத்தான்.அந்த பலனும் அவனுக்கு கிடைத்தது.வீர சொர்க்கம் புகுந்தான்.ஆனால் பகவானே சரணம் என்று அனைத்து தருமத்தையும் கைவிட்ட அர்ஜுனன் மங்காத புகழ் பெற்றான்.

பக்தியோகத்தின் அடிப்படையே சரணாகதிதான்.கர்ணன் செய்தது மீமாம்சம்.கர்மத்துக்கு அதிக முக்கியத்துவம் தந்தான் அவன்.கர்மம் அனைத்துக்கும் பலன் தரும் கர்மபல தாதாவை விட்டுவிட்டு கர்மத்தை பிடித்து தொங்கி என்ன பயன்?

குமரன் (Kumaran) said...

//கர்மபல தாதாவை விட்டுவிட்டு கர்மத்தை பிடித்து தொங்கி என்ன பயன்?
//

செல்வன், உங்கள் முழுப் பதிலும் அருமையாக இருந்தாலும் இந்த கடைசி வரிகள் அருமையிலும் அருமை. நான் அவ்வப்போது மறந்து போவது இது. இது தானே கண்ணனின் கடைசிக் கட்டளை. இதனைப் பற்றி ஒரு பதிவு கூடப் போட்டிருக்கிறேன்.

http://nadanagopalanayaki.blogspot.com/2005/10/blog-post_30.html

Unknown said...

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:

அருமையான கருத்து விளக்கம்.நன்றி குமரன்

VSK said...

//கர்ணன் அதை கேட்கவில்லையே?
ஆண்டவன் பேச்சை தட்டி நடப்பவன் பக்தனா?
அர்ஜுனன் கண்ணன் பேச்சை தட்டவில்லை.//


இதைப் பற்றி ஒரு அருமையான கதை உண்டு.

ஒருமுறை, கண்ணனும், அர்ஜுனனும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
அப்போது, கண்ணன் பார்த்தனைப் பார்த்து, "அர்ஜுனா! அதோ பார், புறா" என்றான்.
அர்ஜுனன், 'ஆமாம் கண்ணா, புறா அழகாய் இருக்கிறது' என்றான்.
உடனே, கண்ணன், 'இல்லை, இல்லை, அது புறா இல்லை; அந்தக் கழுகு அழகாய் இருக்கிறது' என்றதும்,
அர்ஜுனனும், 'ஆமாம், அந்தக் கழுகு அழகாய் இருக்கிறது' என்றான்.
கண்ணனும் சளைக்காமல், ' சரியாகப் பார்! அது, கழுகும் இல்லை; அது கிளி! எவ்வளவு அழகாய் இருக்கிறது' என்றான்.
அர்ஜுனனும், 'கிளி ரொம்ப அழகாய் இருக்கிறது' என்றதும், கண்ணன் கோபமாக, 'உனக்கு என்று ஒரு சுய புத்தி இல்லையா? நான் எது சொன்னாலும் அப்படியே ஒப்புக்கொள்கிறாயே!' என்று கடிந்து கொண்டான்.
விஜயன் கண்ணனைப் பார்த்து, 'கண்ணா! அது எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்! சொல்பவன் நீ! அது தவறாக இருக்காது என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை
உண்டு!' என்று பதிலிறுத்தானாம்.
//கர்மபல தாதாவை விட்டுவிட்டு கர்மத்தை பிடித்து தொங்கி என்ன பயன்?
//
Beautiful!!

Unknown said...

Dear SK

that was a beautiful story.Enjoyed it a lot.Thanks

anbudan
selvan

குமரன் (Kumaran) said...

A twist to the story told by SK sir. Arjuna responded to Krishna saying 'Hey Krishna, Whatever that may be. It is you who is telling this. You can make it whatever you want it to be. So, I just believe your words than what is seen by my eyes'. :-)

Unknown said...

aaha

anmika manam allavaa kamazkirathu?SK kumaran niingkal iruvarum ezuthinal naal muzukka kettukkonde irukkalaam.

nanri..nanri

(am in office.So tamilngilish.pls excuse)

anbudan
selvan

Anonymous said...

hello selvan
all the articles about mahabharatham are simply super.keep it up.
saru
saru_praba@hotmail.com

Unknown said...

Thank you saru.

Please read my ramayan postings also which will be in the title of "karpu enum kadavul".(postings numbered 80 to 87)

Regards
selvan