Monday, July 28, 2014

மாவீரர் நினைவு நாள்


இன்று கார்கில் வெற்றி தினம். இந்த நாளை கொன்டாடுகையில் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்து தம் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம்

யோகேந்திர சிங் யாதவ், பரம்வீர் சக்ரா விருது

கிரெனெட் வீரர் யோகேந்திர யாதவ் டைகர் ஹில்ஸ் எனும் மலைபகுதியை கைப்பற்ற சென்ற காடக் ப்ளாடூனில் ஜூலை 3- 4, 1999 ஆண்டு பங்கு பெற்றார். மலைபகுதி மிகவும் சரிவாகவும், பனிபடர்ந்ததாகவும் இருந்தது. அத்தகைய பாதையில் தன் படையினருக்காக கயிறுகளை கட்டும் பணியை மேற்கொண்டார் யோகேந்திரசிங் யாதவ். அப்போது அதை கவனித்த பாகிஸ்தானியர்கள் குண்டுமழை பொழிந்தார்கள். இந்த தாக்குதலில் காடக் பிளட்டூனின் கமான்டர் உள்ளிட்ட பல வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். ஒட்டுமொத்த இந்திய ரானூவ தாக்குதலும் தோல்வி அடைந்து முடங்கும் நிலை உருவானது.

இதை கவனித்த கிரேனேடியர் யோகேந்திரசிங் யாதவ் சாமர்த்தியமாக குண்டு மழைக்கு நடுவேயும் தனி ஒருவராக முன்னேறி சென்று, கிரெனைடுகளை வீசியும், தன்னிடம் இருந்த ஆயுதங்கள் தீரும் வரையும் போரிட்டு நாலு பாகிஸ்தானியரை கொன்றார். எதிரியின் குண்டுகள் அவர் உடலை துளைத்தும் மரணிக்கும் கடைசி வினாடி வரை அவரது துப்பாக்கி குண்டுகளை உமிழ்வதை நிறுத்தவில்லை. யோகேந்திரசிங் யாதவின் வீர மரணத்தை கண்ட இந்திய ராணுவம் உத்வேகம் அடைந்து முன்னேறி சென்று டைகர் ஹில்ஸை தாக்கி கைப்பற்றியது.

கேப்டன் மனோஜ் குமார் பாண்டே, பரம்வீர் சக்ரா விருது 

ராணுவத்தில் சேர்கையில் இன்டர்வியூவில் இவரிடம் கேட்கபட கேள்வி "நீ ஏன் இந்திய ராணுவத்தில் சேர விரும்புகிறாய்?" என்பது

அதற்கு மனோஜ்குமார் பாண்டே அளித்த பதில் "நான் பரம்வீர் சக்ரா விருதை வெல்ல விரும்புகிறேன்"!!! பரம்வீர் சக்ரா விருது வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு வழங்கபடும் விருது.

இவர் கார்கில் போரில் ஜூபார் பகுதியை கைப்பற்ற நடைபெற்ற போரில் பங்குபெற்றார். மிக குறுகலான பகுதியில் படைகளை வழிநடத்தி சென்றார். இதை கண்ட எதிரிகள் குன்டுமழை பொழிந்தார்கள். குண்டுகளை மார்பில் தாங்கியபடி வீர முழக்கம் எழுப்பியபடி முன்னேறி பாய்ந்தார் மங்கள் பாண்டே. குண்டுகள் தீர்ந்த நிலையில் எதிரியின் முதலாவது பங்கரை அடைந்து அங்கே இருந்த இரு பாகிஸ்தானியரை வெறும் கையால் அடித்து கொன்றார். அதன்பின் குன்டுகாயத்தால் தம் இன்னுயிரை இழந்தார். தம் கேபட்னின் வீரமரணத்தை கண்ட இந்திய ராணுவத்தினர் உயிரை துச்சமென மதித்து முன்னேறிதாக்கினார்கள். கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த ஜூபார் பகுதி இந்திய ராணுவத்திடம் வீழ்ந்தது


கேப்டன் விக்ரம் பாத்ரா, பரம்வீர் சக்ரா விருது

கேப்டன் விக்ரம் பாத்ரா 17,000 அடி உயரம் கொண்ட பாயின்ட் 5140 எனும் மலை சிகரத்தை கைப்பற்ற நடந்த போரில் பங்கு பெற்றார். தம் வீரத்துக்காக 'ஷேர் ஷா (சிங்க ராஜா) என அழைக்கபட்ட விக்ரம், மலையின் பின்பகுதி வழியே எதிர்பாராதவிதமாக ஏறி தாக்குதல் தொடுத்தார். கடும் குண்டுமழைக்கு இடையே உடலெங்கும் குன்டுகாயங்களை தாங்கியபடி மலை உச்சியை நெருங்கிய விக்ரம் அங்கிருந்து சுட்டுகொண்டிருந்த எதிரியின் பீரங்கி மேல் இரு கிரனைடை எறிந்தார். அதில் இருந்து எதிரி மீள்வதற்குள் மலை உச்சியை அடைந்து மூன்று எதிரிகளை தனி ஒருவராக கொன்றார். அதன்பின் இந்திய படை மலை ஏறி எட்டு பாகிஸ்தானியரை கொன்று ஒரு பெரிய மெஷின்கன்னையும், கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த பாயின்ட் 5140வையும் கைப்பற்றியது. மலை உச்சியில் இந்திய கொடியை பறக்கவிட்டபின் விக்ரம் சர்மா தம் இன்னுயிரை நீத்தார்

ரைபிள்மேன் சஞ்சய் குமார், பரம்வீர் சக்ரா விருது

இவர் சாதாரண படைவீரர். ஆனால் அசாதாரணமான வீரத்தை களத்தில் காட்டினார். ஏரியா பிளாட் டாப் எனும் மலைபகுதியை கைப்பற்ற சென்ற படையில் பங்கு பெற்றார். மலை உச்சியில் இருந்து எதிரிகள் சுட்டார்கள். குண்டுமழைக்கு நடுவே மலை ஏறும் நிலையில் 150 அடி தூரத்தில் எதிரி பங்கர் ஒன்றை பார்த்தார் சஞ்சய்குமார்

150 அடிதூர பங்கரை நோக்கி எழுந்து ஓடினார். எதிரிகுண்டுகள் அவர் மேல் பாய்ந்தவண்ணம் இருக்க மார்பில் மூன்று குண்டுகளை தாங்கியபடி ஓடினார். அடுத்த குண்டு அவரது மணிக்கட்டில் பாய்ந்து துப்பாக்கீயை வீழ்த்தியது. தளராமல் பங்கரை அடிந்து வெறும் கையால் மூன்று பாகிஸ்தானியரை அடித்து கொன்றார் சஞ்சய் குமார். அதன்பின் அவர்களின் இயந்திர துபாக்கியை எடுத்து இரண்டாவது பங்கரில் இருந்த பாகிஸ்தானியரை சுட்டுகொன்றார். அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தானியர் இரண்டாவது பங்கரை விட்டு ஓடினார்கள். ஏரியா பிளாட் டாப்பை இப்படி தனி ஒருவராக தன் இன்னுயிரை பலி கொடுத்து கைப்பற்றினார் சஞ்சய்குமார்.

மேஜர் சரவணன், வீர் சக்ரா விருது

மேஜர் சரவணன் படாலிக் பகுதியை கைப்பற்ற நடந்த போரில் பங்கு பெற்றார். கார்கில் போர் முழுக்க மலைபகுதியின் மேல் இருந்து தாக்கும் எதிரியை கீழே இருந்து தாக்கி அழிக்கும் நிலையிலேயே இந்திய படை இருந்தது. இப்போரில் மேலே இருந்து சுட்ட எதிரி மேல் ஒரு ராக்கெட்டை செலுத்தி இரு எதிரிகளை அழித்தார் சரவணன். அவர் உடலில் ஷார்ப்பனல் குண்டு பட்டபோது அவரது கமாண்டர் "போதும். சரவணன், வந்துவிடு" என அழைத்தார். தன் உயிர் போகும் நிலையை உணர்ந்த சரவணன் "இன்று இல்லை, காப்டன்" என சொன்னபடி குன்டுகளை வீசி மேலும் மூன்று எதிரிகளை வீழ்த்தியபின் கார்கிலின் வெண்பனியில் விழுந்து வீரமரணம் அடைந்தார்.

நாட்டுக்காக எல்லாரும் சிலவற்றை கொடுத்தார்கள். ஆனால் இம்மாவீரர்கள் தம்மிடம் இருந்த அனைத்தையும் தாய்நாட்டுக்காக ஈந்தார்கள். இவர்களை நினைவை நம் மனதில் என்னாளும் போற்றுவோம்

வெல்க பாரதம். வாழ்க இம்மாவீரர் புகழ்


No comments: